தலைப்பு

செவ்வாய், 3 அக்டோபர், 2023

கண் இமைக்கும் நேரத்தில் கண் ஆப்ரேஷன் செய்த கண்ணான பாபா!

கண் ஆப்ரேஷனுக்கு சில நியமங்கள் இருக்கின்றன.. ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு இத்யாதிகள் ஆகியவை அளவோடு இருக்க வேண்டும், அப்போதே மருத்துவர் அறுவை சிகிச்சை புரிவர் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்க பல மருத்துவர்கள் கைவிட்ட கண்ணை கண்ணான கண்ணனான கடவுள் பாபா எவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில் அறுவை சிகிச்சை புரிகிறார் எனும் அதீத அற்புதம் அறுவை அற்ற சுவாரஸ்யப் பதிவாக இதோ...


அவர் ஒரு டாக்டர்! அவர் பெயர் ஏ.ரங்கா ராவ். பீமாவரத்தால் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்! ஒரு கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக வலம் வருவதே அவருடைய லட்சியம்!

ஒருமுறை ஒரு முதியவருக்கு சிகிச்சை அளிக்கும்படி நேர்கிறது! ராவுக்கு ஒரே ஆச்சர்யம்! அவருடைய புனிதமான நற்குணம் கண்டு மனம் மலர்ச்சி அடைகிறது! விசாரிக்கையில் அவர் ஸ்ரீ ஷிர்டி சாயி பக்தர் என அறிந்து, அது முதல் ராவும் ஸ்ரீ ஷிர்டி சுவாமியை வழிபட ஆரம்பிக்கிறார்! அந்த முதியவரின் நல்ல குணம் மற்றும் புனிதமான அணுகுமுறையே இந்த டாக்டருக்கும் பாபாவின் மேல் பக்தி வரவழைக்கிறது. 


அது 1954. அவர் லோவா பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்காக அழைக்கப்படுகிறார்! ஆகவே அவர் அமெரிக்கா செல்கிறார்!  ஒரு கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக திரும்பி வருகிறார்! 

ஒரு நாள். ஒரு திருப்புமுனை சம்பவம்! ஒரு பெண்மணி டாக்டர் ராவை தேடி வருகிறார்! அந்தப் பெண்மணியின் கண்மணியில் கோளாறு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்! அவளுக்கு ஏற்கனவே இருந்த சில நோய்ப் பின்னடைவால் மருத்துவரீதியாக உடனே அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமில்லை என்று ராவ் தெரிவிக்க... அந்தப் பெண்மணியோ ஒரு விஷயம் சொல்கிறார்! அதில் ஆடிப் போய்விடுகிறார் ராவ்! 

பாபாவே அந்தப் பெண்மணியை ராவிடம் அவளின் கண்களை காட்ட சொன்னதாகவும், அவரே சரிப்படுத்துவார் எனவும், மேலும் அவரது வாழ்க்கை சம்பவங்களை பாபா சொல்லி அந்தப் பெண்மணியோ ராவிடம் புட்டுப் புட்டு வைக்கிறார்! மிரண்டு விடுகிறார் ராவ்! ராவோ ஷிர்டி சுவாமி பக்தரே , புட்டபர்த்தி சுவாமி மீது அதுவரை பெரிய அபிப்ராயம் ஒன்றுமில்லை!

ஸ்ரீ ஷிர்டி சாயி பாபாவின் மறு அவதாரமே ஸ்ரீ சத்ய சாயி பாபா என்பதை அந்தப் பெண்மணி ராவிடம் தெரிவிக்க..‌தெளிவு பெற்று, தைரியத்தோடு கத்தி பிடித்து அந்தப் பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்கிறார்! பல மருத்துவர்கள் கைவிட்ட கேஸ் அது!  காரணம் அவளுக்கு வாத நோயும் இருந்தது! ஆனால் பாபாவின் அந்தச் சொல்! அந்த சத்தியச் சொல் டாக்டர் ராவின் கரங்களை வரங்களாக்கி பலிக்க வைத்து, அந்தப் பெண்மணிக்கு மீண்டும் பார்வை அளித்தது!


அதில் இருந்தே புட்டபர்த்திக்கு வரவேண்டும் என எத்தனையோ முறை ராவ் நினைத்தும் , இயலவில்லை! சில மாதம் கடந்து போகிறது! ராவ் தனது மருத்துவ சிகிச்சையை சென்னைக்கு மாற்றுகிறார்! அந்த சமயத்தில் பாபாவின் சென்னை விஜயம்! பாபா தங்கி இருந்த பங்களாவுக்கு ராவ் வருகிறார்! ஏகப்பட்ட கூட்டம்! இதில் எங்கிருந்து பாபாவோடு பேசுவது? அப்படியே ஒரு ஓரத்தில் அமர்கிறார்! திடீரென ஒருவர் "நீங்கள் தான் மருத்துவர் ஏ.ரங்கா ராவா? என்று பாபா அழைக்கிறார் என டாக்டர் ராவை மாடிக்கு அழைத்துப் போகிறார்! பரவசத்தோடு படிக்கட்டுகள் ஏறுகிறார்! அவருடைய பக்தியும் அந்த ஏற்றமாய் உயர்கிறது!

"டாக்டர்! உங்களை நான் பல காலங்களாக அறிவேன்! அது மட்டுமில்லை  உங்கள் கூடவே பல காலமாகவும் இருந்து வருகிறேன்! நானே உங்களை சென்னைக்கு மாற்றலாக்கி அழைத்து வந்தது! நீங்கள் இனி எதற்கும் கவலைப்படத் தேவையில்லை!" என்கிறார்! ராவின் இதயம் நெகிழ்கிறது!

அந்த சந்திப்பில் இருந்து டாக்டர் ராவ் கைராசி டாக்டர் ஆகிறார்! குணமே ஆகாத , பல மருத்துவர்கள் கை விரித்த கேஸ் எல்லாம் ராவ் நிமிடங்களில் சரி செய்கிறார்! தான் வெறும் கருவியே , பாபாவே தன் கை வழி சிகிச்சை அளிக்கிறார் என்பதை அவர் உணர்கிறார், அனுபவிக்கிறார்! கருவியே தான் என்பதை அவர் உணர்வதால் அவருக்கு கர்வமே எழவில்லை!


ஒரு நாள் இரவு 10 மணி. ராவோடு ராவாக ராவிடம் வருகிறார் சகன்லால் என்பவர்! அவர் சென்னை - ராயபுரத்தில் இருந்து வருகிறார்! பாபா தன்னை அவரிடம் அனுப்பியதாக தெரிவிக்கிறார்! அவருக்கு கண் ஆப்ரேஷன் செய்ய வேண்டும்! ஆனால் கடினம்! அவருக்கோ ரத்த அழுத்தம்! அளவு 200! அப்படி ஒரு உயரிய அழுத்தம்! ஆப்ரேஷன் செய்யவே கூடாது! ஆனால் ஆப்ரேஷன் செய்ய எத்தனிக்கிறார் ராவ்! காரணம் பாபா அனுப்பியதால்! 

அது அறுவை சிகிச்சை அறை... ஏற்கனவே "சாயிராம் சாயிராம்!" என்று அழுது கொண்டிருந்த சகன்லால் படுக்க வைக்கப்படுகிறார்!


அப்போது யாரும் எதிரே பாராத ஒரு ஆச்சர்ய சம்பவம்! அனைவரும் அதிசயப்படும்படி ஒரு பேரொளி தோன்றி , அதில் காவி நிறம் தெளிவாக தெரிகிறது! அனைவரும் பரவசப்படுகிறார்கள்! அந்த பேரற்புத தரிசனத்தில் இருந்து கண் ஆப்ரேஷன் முடிகிற வரை டாக்டர் ராவுக்கு தனக்கு கைகள் இருக்கிற உணர்வே இல்லை! ஆனால் அறுவை சிகிச்சையோ அந்தக் கைகளால் புரியப் படுகிறது! தான் அந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தவே இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறார் ராவ்! மருத்துவ உலகிலேயே முதன்முதலாக தனது கைகளின் உணர்வே ஒரு பொட்டும் இன்றி, தான் அறுவை சிகிச்சை செய்வதை தானே முன் நின்று பார்க்கிறார் ராவ்! அந்தப் பாக்கியம் டாக்டர் ராவுக்கு கிடைக்கிறது! பாபா அவரை ஒட்டுமொத்தமாக தனது கருவியாக்கிவிடுகிறார்!

பொதுவாக கண் அறுவை சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மிக மிக மிக குறைவாக, சில நொடிகளிலேயே அந்த அறுவை சிகிச்சை மள மளவென புரியப் படுகிறது! 

அதே நாள் ,அதே பொழுது, பிரசாந்தி நிலையத்தில் பாபா மிகச்சரியாக 10.30க்கு , 'சகன்லால் ஆப்ரேஷன் முடிந்துவிட்டது' என்று தெரிவித்ததை ராவ் பிறகு கேள்விப்பட்டு கண்கலங்கி இருந்த இடத்தில் இருந்தே பாபாவை நோக்கி கைக் கூப்புகிறார்! 

(Source : Miracles of Divine Love - vol 1 | Page : 39- 43 | Compiled by p. Guru moorthy) 


பேரிறைவன் பாபா ஒருவரை தனது கருவியாக்கிவிட்டால் செய்கிற செயல் முழுவதும் துரிதமாகி விடுகிறது! அப்படியே மிகவும் ஆழமாகிவிடுகிறது! அப்படிப்பட்ட செயல் நிகழ்கிற போது, அங்கே செயல் மட்டுமே திகழ்கிறது, செய்கிறவன் அங்கே சுத்தமாக இருப்பதில்லை! அதுவே சாயி சேவாத்வைதம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து:

  1. களிமண்ணாலும்...மஞ்சள் பொடியாலும்.ஏன் சாணியால் செய்யப்பட்ட விநாயகரில் இறைவன் இருக்கும்போது..அன்பும் நேர்மையும் கொண்ட மனிதனிடம் ஒன்றிப்போய்..தன்கருணையைக்..மாறாத அன்பைக்காட்ட முடியாதா நம் சாயி பகவானால்! அறிவு அதிகமாக உள்ளவர்களுக்கு கூட சந்தேகம் வருகிறது !

    பதிலளிநீக்கு