தலைப்பு

வியாழன், 12 அக்டோபர், 2023

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்த முடியாதவரை குணமாக்கிய பாபா!

எவ்வாறு தன் மேல் நம்பிக்கையே இல்லாத ஒரு பெரியவரின் முதல் பிரார்த்தனையை பாபா எவ்வகையில் நிறைவேற்றி அவரின் நோயை குணமடையச் செய்தார்? சுவாரஸ்யமாக இதோ...


அவர் பெயர் பெத்தகோட்ட பாளையம் ஜானகி ராமய்யா! முதியவர் அவர்! பேரிறைவன் பாபாவை பற்றி ஆதி காலத்திலேயே அறிந்திருந்தும் கூட பெரிய ஆர்வம் இல்லாமல் , பல சாதுக்களில் அவரும் ஒருவர் என்றே நினைத்து தனக்குத் தானே கற்பனை செய்து கொள்கிறார்! அவருடைய சொந்த ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் அருகே இருக்கும் அவரின் மூதாதையர்கள் கட்டிய பழம் பெருமையான ஒரு சிவன் கோவிலே அவரது குலதெய்வம்! 


அது சிவராத்திரி சமயம்! 1969 ஆம் ஆண்டு! அதற்கான கொண்டாட்ட முன் தயாரிப்புகள் நிகழ்ந்த வண்ணமாக இருக்கின்றன! 

அந்த சமயம் பார்த்து, ஜானகி ராமய்யா அவர்களுக்கு கடுமையான ஜுரம் தாக்குகிறது! தொண்டையிலும் தீவிர வலி! டிப்தீரியா (diptheria) எனும் தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது! நாக்கு எல்லாம் மஞ்சள் ஆகிறது! ஒன்றையும் முழுங்க முடியவில்லை! ஒரு சொட்டுத் தண்ணீரையும் அருந்த முடியவில்லை! மருத்துவமனையோ, மருத்துவ வசதியோ மருத்துவரோ அந்த பெத்தகோட்ட பாளையத்தில் இல்லை! ஆகையால் அந்தப் பகுதி கிராமத்தினர் தங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கின்றனர்! ஆனால் எதுவும் பலிக்கவில்லை! உடல் மேலும் சீர் கெட்டுக்கொண்டே போகிறது! திடீரென தனது இல்லத்தில் இருக்கிற பாபாவின் தெய்வீகத் திருவுருவப் படம் நினைவுக்கு வருகிறது! ஒருமுறை அவரின் உறவினர் ஒருவர் பாபாவின் திருப்படத்தை கொடுத்ததாக அவருக்கு நினைவு! பாபாவின் அற்புதங்களையும் அவர் கேள்விப்பட்டிருக்கிறார்! "நான் ஏன் பாபாவை பிரார்த்தனை செய்யக் கூடாது?! எந்த வைத்தியமும் சரிபடுத்தவில்லை, பாபா என்னை நிச்சயம் குணமாக்குவார்!" என்ற உள்ளுணர்வு நம்பிக்கையோடு உந்துதகிறது! ஆக உடனே பாபாவின் படத்தை தனது தலைமாட்டில் வைத்து தீவிரமாக பிரார்த்தனை செய்கிறார்! எவ்வளவு நேரம் பிரார்த்தனை செய்தார் என்று அவருக்கு நினைவே இல்லை!

வலி ஒரு புறம் , வேதனை மறு புறம் அப்படியே தன்னை மறந்து தூங்கி விடுகிறார்!


கனவில் பாபா காட்சி அளிக்கிறார்! அவர் முன் தோன்றி தண்ணீர் அருந்தச் சொல்கிறார்! ஆனால் பெரியவர் ராமய்யாவோ "என்னால் இயலாது!" என்கிறார்! பாபாவோ சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி அதையே வலியுறுத்த.. பெரியவரும் அதே பதிலையே தொடர்ந்து சொல்ல.. பெரியவர் அருகே அவரின் மனைவி ஒரு பெரிய ஜக்'கில் தண்ணீர் எடுத்துவந்து நிற்கிறார்! ஒரு வழியாக அந்த பெரிய ஜக் தண்ணீரை எடுத்து மளமள என்று ஒரே மூச்சாகக் குடித்து முடிக்கிறார்!

வானம் மட்டுமல்ல அவர் வாழ்க்கையும் அந்த இரவோடு இரவாக விடிகிறது! அடுத்த நாள் காலை, அவருக்கு காய்ச்சலே இல்லை! தொண்டை வலியும் அவரை விட்டு தொலை தூரம் சென்றுவிடுகிறது! பெரும் புத்துணர்ச்சியை உணர்கிறார்! இரண்டு நாளில் பழைய உடல் நலத்திற்கு தேறி விடுகிறார்! பிறகு சிவராத்திரி வைபவத்திற்காக தயார் படுத்துகிறார்! தன்னை தயார் செய்தும் கொள்கிறார்! பிறகு சேவைத் திலகம் கஸ்தூரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்! அதில் அவர் குறிப்பிட்ட வரிகள் பரவசமானவை!

"எனக்கு பாபா எனது கிராமத்திலேயே தரிசனம் கொடுத்தார்! அவர் சாட்சாத் சிவபெருமான்!" என்கிற வரி.. சாதாரண வரி அல்ல! அது அந்தப் பெரியவரின் அனுபவ வரி! அது உலக மாயைகளையே அகற்றும் கோதாவரி!

(Source : Miracles of Divine Love - vol 1 | Page No: 81 - 82 | compiled by P.Guru moorthy ) 


பேரிறைவன் பாபா நம்மை அனுதினமும் காவல் காத்து வருகிறார்! பக்தர்களின் கர்மாவை பல வகைகளில் கரைத்து , அதன் வீர்யம் குறைத்துத் தருகிறார்! எவருக்கு எந்த காலகட்டமோ அவரையும் அந்த காலத்திலேயே தனது பக்தராக ஏற்று அக மாற்றம் அடைய வைக்கிறார்! ஆக சாயி பக்தர்களாக திகழ்பவர்கள் ஆனந்தமாக வாழ வேண்டியது அத்தியாவசியம்! எத்தகைய நம்பிக்கை நமக்கு பேரிறைவன் பாபாவின் மீது வலுக்கிறதோ அத்தகைய ஆனந்தம் நமக்குள் நிரந்தரமாக வாய்க்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக