தலைப்பு

சனி, 14 அக்டோபர், 2023

டாக்டர். சூரி பகவந்தம் | புண்ணியாத்மாக்கள்

டாக்டர் எஸ்.பகவந்தம் ஒரு சிறந்த விஞ்ஞானி, பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். தனது ஆராய்ச்சிகள் மற்றும் அறிவியல் வெளியீடுகளால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஒரு வகையில்... தேசத்திற்க்கே வழிகாட்டியாக செயல்படும் அங்கீகாரம் பெற்ற உயர்ந்த நிலையில் இருந்தவர். இருப்பினும் சந்தேகப் படுபவர்களுக்கோ, சவால் விடுபவர்களுக்கோ, பத்திரிக்கைகளுக்கோ, பொது மக்களுக்கோ அஞ்சாமல்... தன்னுடைய சாயி அனுபவங்களைத் தெள்ளத் தெளிவாக மேடையிட்டு எடுத்துரைத்த புண்ணியாத்மா. அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பு இதோ...









🌷சாதனையாளர் திரு பகவந்தம்: 

டாக்டர் சூரி பகவந்தம் அவர்கள் ஆந்திராவில் உள்ள அகிரிபள்ளி என்ற கிராமத்தில் 1909ம் ஆண்டு  அக்டோபர் 14ல் பிறந்தவர். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் டாக்டர் சி.வி. ராமனின் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்ட அவர், கல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்து, 1928ல் அவருடன் இணைந்து பணியாற்றினார். நோபல் பரிசு பெற்ற தனது கண்டுபிடிப்புக்குப் பிறகு, சி.வி.ராமன் அவர்கள் தனது ஆராய்ச்சிப் பணிக்கு திரு. பகவந்தத்தை தனது ஒத்துழைப்பாளராகத் தேர்ந்தெடுத்தார். அதனைத் தொடர்ந்து முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 1938ல் திரு. பகவந்தம் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராக பணியேற்று 1941ல் பல்கலைக்கழக கல்லூரியின் முதல்வராகவும் உயர்ந்தார்.  பல்கலைக்கழகம் அவருக்கு D.Sc. பட்டத்தை வழங்கியது.

 

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிசன்-ற்கு அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்; அந்த சமயம் அவர் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அறிவியல் சொற்பொழிவுகளை வழங்கினார். 1949ல் இந்தியா திரும்பிய அவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையின் தலைவராக சேர்ந்தார்.  பின்னர் 1952ல் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அல்ட்ராசானிக்ஸ், ரேடியோ வானியல், திட நிலை இயற்பியல் போன்ற துறைகளிலும் பணியாற்றிய அவர் 50க்கும் மேற்பட்ட Ph.D  அறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததோடு எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். 1957ல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) இயக்குநராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார். அதோடு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்திய-சீனப் போருக்குப் பிறகு 1962ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) இயக்குநராகச் சேர்ந்தார். பின்னர்  1969ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

டாக்டர் பாகவந்தம் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார்; தெலுங்கில் கவிதைகளும் இயற்றுவார். புறத்தோற்றத்திற்கு அவர் தீவிரமானவராகத் தோன்றினாலும் அவர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்பவர். அவருடைய பேச்சு புத்திசாலித்தனம் மற்றும் நகைச்சுவை நிரம்பியதாக இருக்கும்; பதட்டமான சூழ்நிலைகளை பொருத்தமான நகைச்சுவை மற்றும் கனிவுடன் தணிக்கக் கூடிய ஆற்றல் அவரிடம் உண்டு. அவரது நிர்வாகத் திறன், அவரை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் போன்ற பொதுத் துறை பிரிவுகளின் தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட வைத்தது. மேலும் அவர் பாரத ஸ்டேட் வங்கியின் வாரியத்திலும் உறுப்பினராக இருந்தார்.

 

🌷ஸ்ரீ சாயியிடம் திரு பகவந்தம்:

 பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தரிசனத்தை டாக்டர் பகவந்தம்... பெங்களூரில் ஒரு பக்தருடைய இல்லத்தில் வைத்துதான் முதன்முதலில் பெற்றார். பின்பு பாபாவைப் பற்றி மேலும் அறிய விரும்பி அவர் பிரஷாந்தி நிலையத்திற்கு சென்றிருந்தபோது, பாபா அவரை சித்ராவதி நதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபின்னர் பாபா, "விஞ்ஞானிகள் ஒரு 'தொலைந்த-கூட்டம்' என்று குறிப்பிட்டதோடு அவர்கள் ‘எல்லாம் அறிந்தவர்களாக’ காட்டிக்கொள்வது குறித்து கேலிசெய்யவும் செய்தார். இன்றைய விஞ்ஞானிகளுக்கு பாரத சாஸ்திரங்களில் உள்ள பழமையான ஞானம் குறித்து ஏதும் தெரியாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் திரு பகவந்தத்திடம் நேரடியாக, "சனாதன தர்மத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?" என்றும் வினவினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக டாக்டர்.பகவந்தம், ‘எல்லா விஞ்ஞானிகளும் அத்தகையவர்கள் அல்லர்... நான் பண்டிதர்கள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வருபவனாகையால் எனக்கு நமது வேதங்களின் மீது ஆர்வமும் மரியாதையும் உண்டு’ என்றார். மேலும் முதன்முதலாக அணுகுண்டு வெடிக்கச் செய்த விஞ்ஞானி ஓபென்ஹெய்ம்ர், அந்த வெடிப்பின் விளைவைக் குறித்து விளக்குகையில்... பகவத்கீதையின் ஒரு  சுலோகத்தை (கீதை 11.12) மேற்கோள் காட்டியதை சுவாமியிடம் குறிப்பிட்டார்.

 

பொறுமையுடன் அவருடைய பதிலினைக் கேட்டுக் கொண்டிருந்த சுவாமி... ஒரு கைநிறைய (சித்ராவதிக்கரை) மணலை அள்ளியபடி, "பகவத் கீதையின் ஒரு பிரதி வேண்டுமா?" எனக் கேட்டார். "இதோ.. கைகளை நீட்டு!" என்றபடி பகவந்தத்தின் கைகளில் அந்த பிடிமணலைக் கொட்டினார். சுவாமியின் கையிலிருந்து விடுபட்ட அந்த மணலானது பகவந்தத்தின் கைகளை அடைந்த அந்தநொடியில்... தங்கநிற மணலானது சிவப்பு வர்ணப் புத்தகமாக மாறியிருந்தது. நொடிப் பொழுதில் நிகழ்ந்தேறிய அந்த அதிசயம் டாக்டர். பகவந்தத்தின் மொத்த அறிவியல் அறிவையும் ஸ்தம்பிக்க வைத்து. அதற்கும் மேலாக சுவாமி கூறிய ஒரு  விஷயம், "சமஸ்கிருத பாஷையிலேயே தந்திருக்கலாம் இருப்பினும் உங்களுக்கு தெலுங்கு வாசிப்பே சுலபமாக வரும் என்பதால் தெலுங்கில் தருகிறேன்". அது முற்றிலும் உண்மை என்பது பகவந்தத்திற்கு தெரியும். மேலும் அந்த கீதைப் புத்தகத்தில்... சாதாரணமாக மற்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் "அச்சிட்டோர்/வெளியிடுவோர்" குறித்தான தகவல் இடம்பெறும் பகுதி காலியாக இருந்தது. அவரின் எண்ண ஓட்டத்தை அறிந்திருந்த பாபா, "இந்த கீதை சாயி அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது” என்று கூறி புன்னகைத்தார்.

இயற்பியலின் எந்த விதிகளுக்குள்ளும் அடங்காத அந்த செயலை என்னவென்று குறிப்பிடுவது என்று புரியாமல் டாக்டர். பகவந்தம் வியப்பில் ஆழ்ந்தார். அந்த நிகழ்வு, ஒரு அறிவியலாளராக அவரின் ஆழ்மனத்தை பலவகையில் பதம் பார்த்தது. நிகழ்கால அறிவியலின் கோட்ப்பாடுகளுக்குள் அடங்காத பல விஷயங்கள்  உண்டு என்பதையும் அதற்கெல்லாம் ஆதாரமான ஒரு ஷக்தி உண்டு என்பதையும் உணரத் தொடங்கினார்.

 

🌷ஸ்திரமான நம்பிக்கையுடன் திரு. பகவந்தம்:

அந்த முதல் அனுபவத்திற்குப் பின்னர், பாபா நிகழ்த்திய பல அற்புதங்களை வெகு சமீபமாக இருந்து பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார் டாக்டர். பகைவந்தம். பள்ளிநாட்கள் தொடங்கி அதுவரை ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளராகவே சிந்தித்துக் கொண்டிருந்த அவர், மனிதனின் சாதாரண அறிவிற்கும் மனத்திற்கும் அப்பாற்பட்ட தெய்வீகத்தை அனுபவிக்கத் துவங்கினார். உண்மையில், பல சமயங்களில் இவர் கண்ணுற்ற (பாபாவின்) அதிசயங்கள் இவரின் அறிவியல் அறிவிற்கும் அடைப்படை நம்பிக்கைகளுக்கும் முரணாகவே இருந்தது. ஆனாலும் படிப்படியாக அவர் கண்ணுற்ற பல தெய்வீக நிகழ்வுகள் பாபாவின் நிறைப்பேராற்றலை அவருக்கு சிறிது சிறிதாக உணர்த்தியது. காலப்போக்கில் டாக்டர். பகவந்தம் அவர்கள் தம்முடைய அறிவியல் பார்வையிலிருந்து மேலெழுந்து ஆன்மீக ஞானப் பார்வையைப் பெறத் தொடங்கினார்.


ஒரு சமயம் டாக்டர் பகவந்ததின் இளைய மகனிற்கு முதுகுத்தண்டின் இடுப்பு பகுதியில்.. செரிப்ரோ-ஸ்பைனல் திரவத்தை அகற்றத் துளையிடும் சிகிச்சை ஒன்று மருத்துவர்களால் பரிந்துரை செய்யப் பட்டிருந்தது. அதனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினால் அந்த சிகிச்சையை தள்ளிப்போட்டு வந்தனர். ஆனால் சுவாமி... தனது அங்கை அசைப்பில் விபூதி வரவழைத்து அந்த சிறுவனின் முதுகில் தடவி விட்டார். உடனே அவனுக்கு வலியுணர்வு நீங்கி சிகிச்சைக்குத் தயாரானான். பின்னர் காற்றிலிருந்து.. அந்த சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களை தனது கையசைப்பில் வரவைத்து பாபா ஒரு நேர்த்தியான அறுவை சிகிச்சை நிபுணர்போல செயல்பட்டு அந்த சிகிச்சையை துரிதமாகச் செய்து முடித்தார். சிகிச்சை முடிந்ததும் சுவாமி, "உன்னிடம் கட்டுப் போட உதவும் நீளமான பாண்டேஜ் இருக்கிறதா?" என்று கேட்டார்.  கையசைப்பில் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை உற்பத்தி செய்த சுவாமிக்கு... சாதாரண கட்டுத் துணியை உற்பத்தி செய்ய முடியாதா? என்ற இவருக்கு எண்ணம் தோன்றியது. ஆனாலும் சுவாமிக்கு பதிலளிக்கும் விதமாக அங்கிருந்தவர்கள், 'ஆம் சுவாமி, இங்கே ஒரு மருந்தகம் உள்ளது, நான் டாக்டரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பத்து நிமிடங்களில் கொண்டுவரச் செய்திடலாம்' என்றனர்.  அதற்கு பாபாவோ, '(தாமதம்) அதிகமாயிற்றே.... கவலைப்படாதே!" என்று சொல்லியபடி கைகளை அசைத்தார். கட்டுப் போட பாண்டேஜ் உடனே அவருடைய கையில் தோன்றியது. அந்த நூதன படைப்பின் ரகசியத்தை அறிவியலின் எந்த கோட்பாட்டுடன் நான் புரிந்துகொள்வது என்று வியந்தார். அன்று சுவாமி கையில் அதிசயமாக உருவாகிய அந்த பாண்டேஜ் சுருளை பலநாட்கள் தன்னுடன் வைத்துக் கொண்டிருந்தார் திரு. பகவந்தம்.

 

மற்றொருமுறை, ஒரு தென்னிந்திய சுற்றுப் பயணத்தின் போது... ஒரு கடற்கரையில் பக்தர்களோடு அமர்ந்திருந்த பாபா... சமுத்திரத்தைக் குறிக்கும் பல்வேறு பெயர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் யாரோ ஒருவர் ‘ரத்னகாரா’ என்ற பெயரைக் குறிப்பிட்டவுடன்... சுவாமி, "ஹ்ம்ம்.. ரத்தினங்களின் அரசன்.... இந்த சமுத்திரம் நமக்காக சில ரத்தினங்களை உருவாக்கட்டும்" என்று சொல்லியவாறே தனது கைகளை நீரினுள் விட்டார். சுவாமி தனது கைகளை வெளியில் எடுத்தபோது.. அவரின் திருக்கரத்தை அழகிய வைரமாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது. உலகம் முழுக்க தனது விஞ்ஞான அறிவால் சாதனைகள் நாட்டிவிட்டு... பக்தரோடு பக்தராக அமர்ந்திருந்த டாக்டர். சூரி பகவந்தம் அந்த நிகழ்வை அறிவியலின் கண்ணாடி வழியே பார்க்கமுடியாமல்... ஆனந்த தெய்வீக அனுபவமாகக் கண்டார். அதுமட்டுமல்ல... ‘சுவாமி நீங்கள் அதனை அணியுங்களேன்’ என்ற ஒரு பக்தரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, சிறியதாக இருந்த அந்த வைர மாலையை பாபா மீண்டும் தனது  வெறுங்கைகளால் மெல்ல இழுக்க அது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கப் பெரிதானது. பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் சிறிது நேரம் சுவாமி அதனைத் தம் கழுத்தில் அணிந்தார்.

 

🌷சோதனைகளைக் கடந்த திரு. பகவந்தம்:

புறவுலக அனுபவங்கள் வெகுவாக இல்லாத எளிய மனம் படைத்த மனிதர்கள் ஒரு அதிசயத்தைப் பார்ப்பதற்கும்... அறிஞர்கள் போற்றும் உயரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்து மாபெரும் சாதனைகளைப் புரிந்த ஒருவர் பார்ப்பதற்கும் பெரும் வித்யாசம் உண்டு. எளிய மனங்கள் தெய்வீக நிகழ்வுகளைத் தங்கள் பௌதிக அறிவுகொண்டு வாதாடிப் போராடாமல் இயல்பாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஒரு விஞ்ஞானிக்கு அப்படியல்ல! குறிப்பாக... நாட்டில் பிறருக்கு வழிகாட்டியாக செயல்படும் அங்கீகாரம் பெற்ற உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர்க்கு "ஆன்மீக அதிசயங்கள்" என்பது அவருடைய வாழ்க்கைக்கே விடப்படும் சவால். அப்படிப்பட்ட மிகப்பெரும் சவாலை டாக்டர்.பகவந்தம் சமாளித்ததோடு மட்டுமல்லாமல்... சுவாமியின் கட்டளைகளை, யாருடைய விமர்சனத்திற்கும் அஞ்சாமல் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். ஒரு விஞ்ஞானியாக, கல்வியாளராக பிரசாந்தி வந்துசேர்ந்த அந்த சாதனையாளர் சுவாமியின் கருணைக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகிப் பின்னாளில் சுவாமியின் சிறந்ததொரு கருவியாக செயல்பட்டார்.







டாக்டர் பகவந்தம் அவர்களுக்கு ஆழமான நம்பிக்கை என்பதையும் கடந்து சுவாமியின் தெய்வீகத்தை உணரத் தொடங்கினார்.  பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் உண்மையான ஆற்றல் என்ன என்பது மனிதர்களின் சிற்றறிவுக்கு ஒருநாளும் முழுமையாகப் புரியப் போவதில்லை என்பதையும் புரிந்துகொண்டார். பலமுறை பாபாவின் ஆற்றல்களை நேரில் கண்டும் கேட்டும் கூட.. இந்த ஒரு குறிப்பிட்ட அதிசயம் நிகழ்ந்துவிட்டால் நான் பாபாவின் மேல் இன்னும் அதிகம் நம்பிக்கைகொண்டு வணங்குவேன் என்று அன்றாடம் சுவாமிக்கு சவால் விடும் சாதாரண மனிதர் அல்ல அவர். இருப்பினும் பகவானின் பெருங்கருணை அவ்ருக்கு அளப்பரிய அதிசயங்களைக் காட்டி மகிழ்வித்தது. பாபாவின் ஏராளமான அதிசயங்களைக் கண்ணுறும் பாக்கியமும் தெய்வீகப் பேருரைகளைக் கேட்டுணரும் அதிருஷ்டமும் அமைந்தது.


🌷ஐநூறு பேருக்கு அமிர்தம்:

ஒருமுறை, சுவாமி தனது அங்கை அசைப்பில் ஒரு அழகிய சிறிய பாத்திரமொன்றில் அமிர்தத்தை வரவழைத்தார். 

அந்த சமயத்தில் அங்கிருந்த டாக்டர்.பகவந்தம்... பாபா செய்த அந்த அற்புதத்தை முழுதுமாக கிரகிக்கும் முன்பே இன்னொரு அதிசயமும் அரங்கேறியது. சுவாமியின் கையிலிருந்த  பாத்திரத்தின் அளவைப் பார்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்பூன் அளவு என்று வழங்கினால்... அது ஐம்பது பேருக்கு கொடுக்கப் போதுமானது என்று மதிப்பிட்டார். ஆனால் அந்த தெய்வீக அமுதத்தை பகவான் அங்கிருந்த ஐநூறு பேருக்கும் விநியோகித்தார், ஒவ்வொருவருக்கும் ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்தபின்னரும் இன்னும் கொஞ்சம் அமிர்தம் அந்தப்  பாத்திரத்தில் மீதமிருந்தது!

 

🌷இறைவனின் இனிய அன்பில்  திரு.பகவந்தம்:

டாக்டர்.பகவந்தத்தின் மகன் டாக்டர்.பாலகிருஷ்ணா... ஹைதராபாத்தில் அவர் கட்டிய புதிய இல்லத்தின் புகுவிழாவிற்கு  பாபா வந்து ஆசீர்வதிக்குமாறு பக்தியுடன் அழைத்தார்.  பாபாவும் பவிழாவிற்கு ஹைதராபாத் வருவதற்கு சம்மதித்தார்; சொன்ன தேதியில் ஹைதராபாத் சென்றிறங்கினார். அந்த சமயத்தில் ரஷ்யா சென்றிருந்த டாக்டர்.பகவந்தம், மாஸ்கோவில் இருந்து  அந்த குறிப்பிட்ட தினத்தின் அதிகாலை ஹைதராபாத் வந்துசேர திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் இந்தியா திரும்பிக் கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக  பயணம் தடைபட்டு உஸ்பகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் ஐதராபாத்தில் உள்ள பாலகிருஷ்ணாவின் வீட்டில் இருந்த பாபா, பகவந்தத்தின் நிலைமை குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும்  பிரயாணத்  தடைகளை எல்லாம் தாண்டி பகவந்தம்  வந்துசேருவார்  என்றும் அவர்களிடம் கூறினார். இதுபற்றி செய்தித்தாள்களிலோ, தொலைக்காட்சியிலோ செய்தி வரவில்லை.

காலை அந்த விழாவின்போது... குடும்பத்தலைவரான டாக்டர்.பகவந்தம் விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதை எண்ணி குடும்பத்தினர் அனைவரும் வருந்தினர். டாக்டர் பகவந்தத்தின்  இருப்பிடம் மற்றும் நிலைமை குறித்து தங்களுக்குள் வருந்தியபடி பேசிக் கொண்டனர்.  அவர்கள் மத்தியிலிருந்து சுவாமி,  டாக்டர்.பகவந்தம்  புது டெல்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்திற்கு வந்துசேர்ந்திருப்பதாகத்  தெரிவித்தார். மேலும் உடனடியாக அவரை தொடர்பு கொள்ளும்படி சுவாமி கூறினார். அந்தக் காலத்தில் "டிரங்க் கால்" என்று சொல்லப்படும் அந்த முறையிலான தொலைபேசி தொடர்புக்கு ஆதிக தாமதம் ஏற்படுவது இயல்பே.. ஆனால் பாபாவுக்காக அந்த கால் செய்யப்படும்போது  உடனே தொடர்பு கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமா? அவர்கள் வீட்டு  விழா நன்முறையில் நிகழ்ந்ததாகவும், பகவந்தம் திரும்பும் வரை குடும்பத்துடன் ஹைதராபாத்திலேயே சுவாமி இருக்கப் போவதாகவும், சுவாமி அவரிடம் கூறினார். அதைக் கேட்ட டாக்டர் பகவந்தத்தின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், நிலைமைகள் மாறினாலும் தன் நிலைமாறாமல் செயலாற்றும் பாபாவை நன்றியுடன் வணங்கினார். 


🌷எல்லையில்லா அதிசயங்கள்:

துருக்கி நாட்டில் நடைபெற்ற அகில உலக விஞ்ஞானிகள் மாநாடு ஒன்றில், இந்தியாவின் பிரதிநிதியாக  டாக்டர். பகவந்தம் சென்றிருந்தார்.  தான் எந்த தலைப்பில் பேசலாம் என்று முடிவு செய்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தாரோ அதே தலைப்பில்மற்றொரு விஞ்ஞானி  பேசத்தொடங்கினார். அதனால்  தான் ஒரு புதிய சூத்திரத்தை விளக்கிச் சொல்லவேண்டும் என்று நினைத்தார். அனால் எவ்வளவு முயற்சித்தும் நினைவுக்கு வரவில்லை. உடனே உதவிகோரி  “ஸாயிராம்!” என்று மனதில் உரக்கக் கூவினார். அந்தக் கணமே ஸ்வாமி அவரின் எதிரில் தோன்றி, தன் உள்ளங்கையில் அந்த சூத்திரத்தை ஒளிருமாறு செய்தார்.


ஒருமுறை  அமெரிக்காவின் வாஷிங்டன்னில் சைவ உணவுக்கான விடுதியைத் தேடிய அலைந்த டாக்டர்.பகவந்தம் மனதினுள் சுவாமியை வேண்டினார். அங்கே  "கணபதி விலாஸ்" என்ற கடையைப் பார்த்ததும் அதிசயத்தில் உறைந்து போனார். காரில் இருந்து இறங்கி அந்த விடுதிக்குள்  சென்று இட்லி, சாம்பார் சாப்பிட்டுவிட்டு வந்தார். ஊர் திரும்பிய பின்னர் இந்த அனுபவத்தை அவர் ஸ்வாமி முன் பின்வருமாறு கூறினார். ‘சுவாமி, நான் மிகவும் பசியுடன் இருந்தேன்  என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கருணை கொண்டு அங்கு "கணபதி விலாசை" எனக்காக அருளினீர்கள்’.

ஒரு மாநாட்டிற்காக வேறொரு நாட்டிற்குச் சென்று திரும்பும்போது  தனது பாஸ்போர்ட்டை எங்கேயோ தவறவிடுவிட்டார். பாஸ்போர்ட் தவறினால் அங்கும்  தங்க முடியாது, சொந்த நாடும் திரும்ப முடியாது. தேவையற்ற சிக்கல்களும் அலைச்சலும் ஏற்படும் என்பதால்… வருத்தத்தில் பயங்கரமாக வியர்த்தது. எல்லாப் பெட்டிகளிலும் பைகளிலும் மீண்டும் மீண்டும் தீவிரமாகத் தேடியும் பயனில்லை. அதன்பின்னர் அமைதியுடன் சுவாமியை நினைந்து உதவி கோரிய சில கணங்களில்... அவர் ஏற்கனவே பலமுறை துலாவித் தேடிய  அதே பையில் பாஸ்போர்ட் இருந்தது. இந்த அதிசயத்தைப் பற்றி பின்னொருநாளில் சுவாமி முன்னர் திரு. பகவந்தம் பின்வருமாறு குறிப்பிட்டார், ‘சுவாமிதான் தொலைந்து போன எனது பாஸ்போர்ட்டை கிடைக்கச் செய்தார், இல்லையானால் நான் மாட்டிக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்!

 

 🌷மாறாத நம்பிக்கையுடன் திரு. பகவந்தம்:

சுவாமியின் எண்ணற்ற லீலைகளைக் கண்டும் சொற்பொழிவுகளைக் கேட்டும்... டாக்டர்.பகவந்தம் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்தார். அதோடு மட்டுமல்லாமல் 1970களில் மேடையில் சுவாமி ஆற்றிய  தெலுங்கு சொற்பொழிவுகளை உடனுக்குடன் டாக்டர்.பகவந்தம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெய்வீக சக்திக்கு முன் விஞ்ஞான அறிவு அதன் சக்தியையும் முக்கியத்துவத்தையும் இழக்கிறது என்பதை நன்கு உணர்ந்தார்.


டாக்டர். பகவந்தம் ஆற்றிய தனது உரைகளில் ஒன்றில் பின்வருமாறு வலியுறுத்தினார்: "விஞ்ஞானிகளாகிய நாம் உண்மையைத் தேடி ஆய்வகங்களில், நமது பகுத்தறிவுத் திறன் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் பல விஷயங்களைக் கண்டறியலாம். ஆனால், அறிவியலால் ஆராயவோ விளக்கவோ முடியாத பரந்துபட்ட பல ஞானத் தொகுதிகளும் உள்ளது. அறிஞர் சமுதாயமாகிய நாம், ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு விஷயத்தை அறியும்போது  இன்னும் அறியப்படாமல் எவ்வளவோ உள்ளது என்கிற பேருண்மையைத் தான் உணர்கிறோம்.; நாம் இன்னும் அதிகம் போராட வேண்டிய பெரிய சவால்கள் நம்முன்னர் உள்ளது என்றே அறிந்து கொள்கிறோம்.

அதுமட்டுமல்ல, அறிவைச் சேர்க்கும் அதே வேளையில்... நம் அறியாமையையும் அதிகப்படுத்துகிறோம்! அறிவு வேறு! விவேகப் பாகுபாடு வேறு! மனிதர்களிடையே தோன்றும் அவதாரங்களின் அருளால்தான் நாம் உண்மையான விவேகத்தைப் பெறுகிறோம்”.


மேலும் ஒருமுறை சென்னையில் சென்னைக்கு சுமார் 20,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில்  டாக்டர் பகவந்தம் அவர்கள் பேசுகையில், "அறிவு என்பது ஞானம் அல்ல என்பதை அறிவியலாளர்கள் நன்றாகவே அறிவார்கள். ஞானம் என்பது  சத்யா சாயி பாபா மற்றும் அவரைப் போன்றவர்களிடமிருந்து பெறப்படுவது!. அந்த தெய்வீகக் நோக்கத்திற்காகத்தான்  அவ்வப்போது நம்மிடையே அவதாரங்களாக வருகிறார்கள். ஸ்ரீ சத்யசாயி பாபா சாதாரணமானவர் அல்ல! அவர் ஒரு தனித்துவமான நூதன நிகழ்வு (Phenomenon) . அவர் அதீதமானவர்,  தெய்வீகமானவர், அவர் ஒரு அவதாரம்!" என்று அறிவித்தார். டாக்டர் சூரி பகவந்தம் அவர்கள்,  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியுடன் பணி புரிந்தவர், மாபெரும் தேசத்திற்க்கே அறிவியல் ஆலோசகராக இருந்தவர், தேசத்தின் பாதுகாப்பு அமைப்புகள் பலவற்றில் முதுகெலும்பாய்த் தொண்டாற்றியவர், கல்வித்துறையில் கரைகண்டவர், துணை வேந்தராக செயலாற்றியவர். ஆனாலும் சந்தேகப் படுபவர்களுக்கோ, சவால் விடுபவர்களுக்கோ, பத்திரிக்கைகளுக்கோ, பொது மக்களுக்கோ அஞ்சாமல்... தன்னுடைய அனுபவங்களைத்  தெள்ளத் தெளிவாக மேடையிட்டு எடுத்துரைத்தார்.

 

தெய்வீக அனுபவங்களை சிறிய வட்டத்தினுள் சிலாகித்துவிட்டு... தன்னுடைய அலுவலகம்,  சமூகம், பொதுமேடை என்று வரும்போது... பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல், மக்களோடு மக்களாக அறியாதவர் போல அமைதிகாக்கும் துணிச்சலற்ற பல பிரபலங்களின் மத்தியில் டாக்டர். சூரி பகவந்தம் போன்றவர்கள் உண்மையில் மாபெரும் செயல்வீர்களே! நிச்சயமாக... இறைவனையே புன்முறுவல் பூக்கவைக்கும் புண்ணியாத்மாக்களே!

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்


டாக்டர். பகவந்தம் அவர்களின் அரிய புகைப்படங்கள் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக