தலைப்பு

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

இரு கடவுளவதாரங்களின் கட்டளைக்கு எப்போதும் காத்திருந்த வானுலக தேவதைகள்!

எவ்வாறு இரண்டு அவதாரங்களிலும் வானுலக தேவதைகள் அவதார வழிபாடு செய்து அவர்களின் கட்டளைகளை ஏற்று உபச்சாரம் செய்தன எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...! 


துவாபர யுகத்தில் இறைவன் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணராக இருக்கையில் பற்பல லீலா விநோதங்கள் புரிகிறார்! மதுரா அரசரான கம்சனோ ஸ்ரீ கிருஷ்ணரை அழிக்க பற்பல அசுரர்களை ஏவுகிறான்... அவர்களில் வத்சாசுரன், அகாசுரன், பூதனை போன்றவர்கள்... ஆனால் அவர்களை எல்லாம் சிரமமே இன்றி விளையாட்டுத்தனமாகவே வதம் செய்து முக்தி அளிக்கிறார் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர்! 


அந்த சமயத்தில் எல்லாம் வானுலக தேவதைகள் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரின் அழகான மயிற்பீலி சிரசின் மேல் பூக்களைத் தூவி குதூகலப்படுகிறார்கள்! ஒருமுறை பிரம்மா ஸ்ரீ கிருஷ்ணரை சோதிக்க பசுக்கள் மற்றும் கோபர்களை கவர்ந்த போதும் சரி ... மற்றொரு முறை வருணனுக்கு புத்தி புகட்ட கோவர்த்தன மலையை தனது சின்னஞ்சிறு சுண்டு விரலால் ஸ்ரீகிருஷ்ணர் தூக்கிய போதும் சரி இந்தப் பூத்தூவுதல் தொடர்ந்து நடைபெறுகிறது! வானுலக தேவர்களே சாபத்தின் காரணமாக இரண்டு பெரும் மரங்களாக வளர்ந்திருந்த போது‌... யசோதையால் உரலில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் அந்த இரண்டு மரங்களுக்கும் இடையே அந்த உரலை எடுத்துச் சென்று இரண்டையும் பிளந்து இரண்டற்ற நிலையான முக்தியோடு தேவர்களின் சாபம் விலகிய ரூபத்தையும் வழங்குகிற போதும் வானுலகமே மகிழ்ந்தன! பூக்களே தான் வானிலிருந்து தூவப்படுகிற போது நெகிழ்ந்தன...!


இதே போலவே ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் யுகம் மாறிவிடுகிறது... ஆயினும் தேவதைகள் தங்களின் வழிப்பாட்டை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை! 

இதற்குப் பற்பல உதாரணங்களை பூத்தோரணங்கள் போலவே வரிசைப்படுத்தலாம்! 


ஸ்ரீ சத்ய சாயி சத்யமாக விளங்கிய அவரது பௌதீக பால்ய காலங்களில் அவரது நண்பர்களுக்கு என்ன தேவை என்றாலும் காலிப் பையிலிருந்து வழங்குவார்! கல்விக்கான பேன, பேப்பர், பென்சில் முதல் பெப்பர்மென்ட் என ஏராள சிருஷ்டிகள் புரிந்து அவர்களை ஆன்மீக வழிபாட்டில் குறிப்பாக பண்டரி பஜனையில் ஊக்கப்படுத்துவார்! சிருஷ்டிகளை பெறும் சிறார்களோ புருவம் உயர்த்துவார்கள்... யார் இதை எல்லாம் உனக்கு தருவது? என்ற ஆச்சர்யக் கேள்வியால் துளைத்தெடுப்பார்கள்... அப்போது பாபா தன்னை இறை அவதாரம் என பிரகடனப்படுத்தாத காலகட்டம் அது... உயர்ந்த ஆன்மீக ரகசியங்களும் அவர்களுக்கு புரியாத வயது என்பதால் தேவதைகள் தருகிறார்கள்! என்று மட்டும் சொல்வார்! தேவதைகள் கலியுகத்திலும் அவதாரத்தைக் கொண்டாடி மரியாதை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! 


அது போல் கலி சாரதா தேவி அம்மையார் சிறுவயதிலேயே கணவனை இழந்து... நான்கு குழந்தைகளையும் சாவுக்குக் கொடுத்து மனம் உடைந்து 1917'ல் மீண்டும் ஷிர்டி பாபாவிடம் செல்கிறார்..‌அவர் ஷிர்டி பாபாவின் தீவிர பக்தை... நேரடி தரிசனம் மட்டுமல்ல உரையாடல் முதல் பாபாவின் அதட்டலும் அடியும் கூட வாங்கி இருக்கும் அடியார் அவர்! சோகமே கோலமாக ஷிர்டி பாபாவிடம் நிராதரவாகி வருகிற போது... 

"உன் கர்மா அனைத்தும் கரையாமல் உனக்கு முக்தி கிடைக்காது! நீ கவலைப்படாதே! நான் மீண்டும் மதராஸ் மாகாணத்தில் அவதரிப்பேன்... அப்போது நீ என்னிடம் வருவாய்! நான் உன்னை கவனித்துக் கொள்கிறேன்! ஆகவே அதுவரை பொறுமை மற்றும் நம்பிக்கையோடு காத்திரு!" என்று சொல்லிவிடுகிறார்! 1918 அன்று சமாதியும் ஆகிறார்! 

ஸ்ரீ சத்ய சாயியை முதன்முதலாக அவர் தரிசிக்கிற பெரிய இடைவெளியில் அம்மையார் பல மகான்களை தரிசிக்கிறார்! ஆன்மீக உபன்யாசம் பல நிகழ்த்துகிறார்! ஸ்ரீ சத்ய சாயியை கேள்விப்பட்டு அவரை சந்திக்க வருகிறார்‌..‌ அது சந்திப்பு தான் தரிசனம் அல்ல... முதன்முதலில் சாரதா அம்மையார் பாபாவை காண்கிற போது ஒரு நமஸ்காரம் கூட புரியவில்லை... பிறகு "கோரி" என்று பாபா அழைக்க... அது தன்னை அப்படியே ஷிர்டி பாபா அவருக்கு சூட்டிய செல்லப் பெயரும், மேலும் ஷிர்டி பாபா குரல் போலவே இருக்க... ஷிர்டி பாபாவுக்கும் அம்மையாருக்கும் நடந்த பழைய உரையாடலை நினைவுபடுத்தி "ஷிர்டி பாபாவே தான் நான்!" என்ற பேருண்மையை உணர்ந்த பிறகே பாபாவை தரிசிக்கிறார்! அது முதல் பாபா அவரை "பெத்த பொட்டு" என்றே அழைக்கிறார்! அம்மையார் பெரிய பொட்டு வைத்திருந்ததால் அந்தப் பெயர்! 

 ஒருமுறை தியானத்திற்கு உதவிடும் தெய்வீக அதிர்வலைகளை எழுப்பக் கூடிய பீஜாட்சரங்களை (ரீம், ஹ்ரீம் , ஸ்ரீம், கம் , லம் இத்யாதி) ஒரு காப்பர் தகட்டில் பதித்து ஆலமரத்தடியில் பாபா பதிக்கிறார்... அது வட விருட்சம் என்று அழைக்கப்படுகிறது! அங்கே ஆன்ம சாதகர்கள் தியானிப்பர்! அப்படி ஒரு நாள் அதிகாலை தியானத்தில் அமர்ந்திருக்கிறார் பெண்புத்தராய் அந்த பெத்த பொட்டு அம்மையார்! தியானம் கலைந்து அவர் கண்களை திறந்து பார்க்கிற போது... பாபா தங்கிடும் அறைக்கு மேலே தேவதைகள் வெண் ஒளியாய் வலம் வருவதை கவனித்து ஆச்சர்யப்படுகிறார்! அப்போது கந்தர்வ இசையையும் , மணியோசையையும் கேட்டு மெய் சிலிர்க்கிறார்! பிறகு அந்த நாள் பாபாவை தரிசனம் செய்கையில் காலையில் நடந்தவற்றை பாபாவிடம் தெரிவிக்க.. "ஓ.. அப்படியா?" என்று ஏதும் அறியாதது போல் ஒரு அர்த்தப் புன்னகை புரிந்து கடந்து செல்கிறார்! 


ஒருமுறை வாட்ச் மேன் குமார் என்பவர் இதே பிரசாந்தி நிலையத்தில் ஒளி பொருந்திய சில உருவங்கள் வலம் வருவதைப் பார்த்து... பயந்து போய் வேலையை விட நினைக்கையில்... பாபா அவரை ஆற்றுப்படுத்தி தைரியப் படுத்தி.. அது தேவதைகள் - வேற்றுலக வாசிகள் - அதீத ரூபங்கள் என புரிய வைத்ததில்... சமாதானப்படுகிறார் வாட்ச் மேன் குமார்!


இது போலவே ஒருமுறை சென்னைக்கு வருகிற போது... எதிரே பாராது பாபாவை எதிர் கொள்கிற ஒரு பக்தர் வீடு அது! அவர்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... சரியான முறையில் வரவேற்கக் கூட அவர்களிடம் பூக்களோ பழங்களோ இல்லை... இதனை அங்கலாய்ப்போடு பாபாவிடம் தெரிவிக்க...ஒன்றும் பிரச்சனை இல்லை என்று தான் வந்த காரை பாபா ஒருமுறை நோக்க..‌ கார் கதவைத் திறந்து இரண்டு தேவதைகள் வெள்ளித் தட்டில் பூக்களையும் பழங்களையும் கையில் ஏந்திய படி வருகிறார்கள்! இந்த வெள்ளித் தட்டை வேறொரு முறை பாபா தனது மாணவர்களோடு வர.. அந்த பக்தர் வீட்டில் இருந்த அந்த "தேவதைகள் சுமந்த வெள்ளித் தட்டு" காட்டப்படுகிறது! அது அந்த சம்பவமே என்று சுட்டிக் காட்டப்படுகிறது! இதே இந்த அற்புத சம்பவத்தை திரு ஹிஸ்லாப் ஆக்லேண்டில் (Auckland ) விவரிக்கிற போது அங்குள்ளவர்கள் ஹிஸ்லாப் அவர்களின் பின்னே பாபா இரண்டு தேவதைகளோடு நிற்பதை கண்டு மெய்சிலிர்த்துப் போகிறார்கள்!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page No: 73 - 76 | Author : Dr. J. Suman Babu ) 


பாபாவின் அத்தனை சிருஷ்டிக்கு காரணமும் தேவதைகளா? என்ற ஒரு சந்தேகம் எழலாம்! ஒரே பதில் இல்லை என்பதே! காரணம் தேவதைகளே பாபாவின் கட்டளைக்கு எப்போதும் தயாராக இருந்ததே தவிர தேவதைகளிடம் இருந்து எதையும் பெறும் நோக்கம் பாபாவுக்கு இருந்ததே இல்லை! தான் சிருஷ்டித்ததை ஏந்தும் கருவிகளாகவே வானுலக தேவதைகளாக இருக்கின்றனர் பாபாவுக்கு! அட்சயப் பாத்திரமே ஏன் அரசிக்காக யாரிடமாவது கையேந்த வேண்டும்?! அது போல் தான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரும்! 

சுய திருப்திக்கு எந்த வித சுயநலத் தேவைகளும் இல்லை! அந்த சுய திருப்தியே ஸ்ரீ சத்ய சாயியாக உருவம் கொண்டிருக்கிறது! பகவான் என்ற வடமொழிச் சொல்லுக்கே "சுய திருப்தியாளர்!" என்பது தான் பொருளே!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக