தலைப்பு

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

ஒரு டாக்டரையே குணமாக்கிய டாக்டர்களின் டாக்டர் பாபா!

எவ்வாறு ஒரு மருத்துவரின் தொண்டைப் புற்று நோயையும் நீக்கி அவரின் குடும்பத்தையே நலமாக வாழ வைத்த சாயி மகிமை, சுவாரஸ்யமாக இதோ...

அவர் பெயர் டாக்டர் கேக்கி எம். மிஸ்ட்ரி. அவர் ஒரு பல் நிபுணர்! ஆர்த்தோடோனிஸ்ட் (Orthodontist) என்பது பற்களை சீர் செய்யும் ஒரு மருத்துவ துறை! அந்தத் துறையில் பம்பாயில் (தற்போது மும்பை) மருத்துவராக பணி ஆற்றுகிறார்! அது 1964. திடீரென அவருக்கு தொண்டையில் வலி ஏற்படுகிறது! ENT மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள தொண்டையின் மேற்பகுதியில் (nasopharynx) கோல்ஃப் பந்து அளவிற்கு கட்டி ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது! உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ஆனால் அப்படி செய்தால் வழக்கம் போல் பேசுவது சிரமமாகிவிடும், பேசாமல் எப்படி மௌன மருத்துவம் பார்க்க இயலும், மனிதர்கள் எல்லாம் பேரிறைவன் பாபா இல்லையே! அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டால் அது பிற்காலத்தில் உயிருக்கே ஆபத்தாக விளையும்! டாக்டர் இவ்வாறு விவரிக்க... "ஒரு பெண்ணை நேசித்து திருமணம் செய்யும் இந்த நேரத்திலா தனக்கு இவ்வாறு ஒரு திடுக்கிடும் சம்பவம் ஏற்பட வேண்டும்" என்று கேக்கி அதிர்ச்சி அடைகிறார்! 

அறிவை சிகிச்சை நடந்து, பழைய குரல் வந்த பிறகு திருமணம் செய்யலாம் என்று யோசனை, பெண் வீட்டாரும் அதையே எதிரொலிக்கிறார்கள்! தொண்டை கட்டிற்குப் பிறகே கால் கட்டு! ஆனால் அந்தப் பெண்ணோ முதலில் திருமணம் பிறகு தொண்டை நிவாரணம் என்கிறாள்!‌ அவர் மேல் அப்படி ஒரு தூய்மையான அன்பு அவளுக்கு! என்ன செய்வது ஒன்றும் விளங்கவில்லை! தாலிக் கட்டியா? தொண்டைக் கட்டியா? எப்படி வாழ்வை எதிர் கொள்ளப் போகிறோம்?!


கேக்கியோ யூத இனம்! ஆகவே அந்த இனத்தின் இறைத்தூதரான ஸோராஷ்டிரரை வழிபடுகிறார்! அவரது வருங்கால மனைவியின் குருவோ பரமஹம்ஸ ஸ்ரீ  யோகானந்தர்! 

ஒருமுறை ஒருவர் ஒரு புத்தகம் தருகிறார்! அதை ஒரு பொருட்டாக முதலில் கேக்கி எடுத்துக் கொள்ளவே இல்லை! பிறகு ஓர் இரவு படுக்கையில் அந்தப் புத்தகம் தென்பட.. வாசிகக ஆரம்பிக்கிறார்! ஓரிரு பக்கங்கள் வாசித்த பிறகு.. பக்கம் தனது பக்கம் இழுக்க ஒரே மூச்சாக இரவு முழுவதும் அந்தப் புத்தகத்தில் முழுகி முத்தெடுக்கிறார்! அதிகாலை ஒரு தெளிவுக்கு வருகிறார்! அது தான் பாபா பற்றிய தெளிவு! அந்தப் புத்தகம் தான் சேவைத் திலகம் கஸ்தூரி எழுதிய "சத்யம் சிவம் சுந்தரம்"! பாபாவை நோக்கிய பிரார்த்தனை - தியானம் என நாட்கள் நகர்கின்றன! சரி திருமணம் செய்து கொண்டு அறுவை சிகிச்சையை அணுகலாம் என்ற தெளிவுக்கு அவர் வர, திருமணம் நடக்கிறது! தேநிலவுக்கு சிம்லா - டார்ஜலிங் என்று வீணாக ஊர் சுற்றாமல் பெங்களூர் வருகிறார்கள்! அங்கே பாபா வந்திருப்பதாக தகவல் பெறுகிறார் கேக்கி! ஆனால் மனைவிக்கு பாபாவை பிடிக்குமா? மனைவியோடு தான் பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற திட்டம்! அதை மெதுவாக பம்பாய் செல்கிற வழியில் அவளிடம் கேக்கி சொல்கிறார்! பிறகு இருப்பிடமான பம்பாய் வருகிறார்கள்! சில நாளில் பம்பாய்க்கு பாபா வந்திருப்பதான தகவல்! மனைவியிடம் கேக்கி தெரிவிக்க..

"எனக்கும் பாபாவை தரிசிக்க விருப்பமே! ஆனால் உங்களிடம் சொல்லவில்லை!" என்று மனைவி ஒரு ட்விஸ்ட் தருகிறார்! கேக்கிக்கு ஒரே ஆச்சர்யம்!

குடும்பத்தோடு அடுத்த நாளே பாபா தங்கி இருக்கும் இடத்திற்கு செல்கிறது கேக்கி குடும்பம்! அப்போது பாபா மகாராஷ்டிரா மூத்த அமைச்சர் ஒருவரின் மேன்ஷனில் தங்கி இருக்கிறார்! அங்கு ஒரே கூட்டம்! ஆண் பெண் என லட்டுவை சுற்றி எறும்புகளாய் பாபா தரிசனம் பெற திரண்டிருக்கிறார்கள்! காலை 8.30'க்கே பாபா தரிசனம் தர வேண்டும்! ஆனால் அன்று தரவில்லை... பம்பாய் வெய்யிலோ பாம் வீசுகிறது! வேர்வைக் கொப்பளிக்கிறது! பன்னீரை தெளித்து வரவேற்க வேண்டிய பாபாவை வேர்வையை தெளித்தபடி காத்திருக்கிறார்கள் கூடிய ஜனங்கள்! மதியம் ஆகிறது.. கேக்கி தாயார் வயதானவர், காத்திருக்க உடல்நலம் ஒத்துழைக்காமல் கிளம்பிவிடுகிறார்! என்ன நேர்ந்தாலும் பாபாவை தரிசித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியம் கேக்கிக்கு, காரணம் மருத்துவர் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்துகிறார்! பயமுறுத்துகிறார்! ஆனால் அதற்கு மனம் இசையவே இல்லை கேக்கிக்கு! மதியம் மணி 2 அடிக்க 15 நிமிடம் இருக்கிறது! பாபா பால்கனி தரிசனம் தந்த அடுத்த நொடியே கேக்கியை விரல் நீட்டி  அழைக்கிறார்! காவலர் அதை கவனியாது முதலில் விட மறுக்க.. பிறகு பாபாவே கதவருகே வந்து அழைக்க.. கேக்கியும் அவரது மனைவியும் மாடி ஏறுகிறார்கள்! அது வெறும் மாடி ஏற்றம் அல்ல வாழ்வின் ஏற்றம் என்று அப்போது அவர்கள் உணர வாய்ப்பில்லை! 

பாபாவை தரிசித்த மாத்திரத்திலேயே கால்களில் விழுந்து அழுகிறார் கேக்கி! பிறகு எழுகிறார்! கண்ணும் கண்ணும் உரசுகிறது! "உன் தாய்க்கு உடல் நலம் சரியில்லை!" என்று அவர்களை பாபா பார்த்த மாத்திரத்திலேயே தெரிவிக்கிறார்! "ஆம் பாபா! அவர்களுக்கு ஆஸ்துமா!" என்று கேக்கி தெரிவிக்க.. "நாளை காலை 9 மணிக்கு அவர்களையும் அழைத்து வாருங்கள்!" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் பாபா!

கேக்கி'க்கோ தன்னுடைய தொண்டைப் பிரச்சனை தொண்டை வரை இருந்தும், பாபாவோடு எதுவும் பேச இயலவில்லை! 

அடுத்த நாள் தாயோடும் கேக்கி வர... ஆசிரம வழக்கப்படி ஆண்கள் - பெண்கள் தனித்தனியாக அமர, தரிசன நேரத்தில் பாபா கேக்கியை நேர்காணலுக்கு குடும்பத்தோடு அழைக்கிறார்!

அது நேர்காணல் அறை! கேக்கியின் தாயே முதலில் பேசுகிறார் "பாபா என் மகனுக்கு தொண்டையில் வந்திருப்பது புற்று நோயா?" அறை எங்கும் நிசப்தம்! என்ன பதில் பாபாவிடம் இருந்து வரும்...? திக் திக் நொடிகள்! கேக்கி'க்கோ ஒரே பதட்டம்! 

"அவன் உன் மகன் அல்ல! என் மகன்! அவனுக்கு எப்படி கேன்சர் வரவிடுவேன்!" என்று பாபா கேட்க... கேக்கிக்கு ஆனந்தக் கண்ணீரே வருகிறது! 

"பாபா என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை!" என்கிறார் கேக்கி! 

'அவன் கருவுற்றிருக்கிறாள்!" என்று சொல்லி கேக்கியின் மனைவியைப் பார்த்து "கவலைப்படாதே! உடல்நலம் சரியாகிவிடும்! ஆகஸ்ட் 22 ஆம் தேதி உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்! அவன் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வான்!" என்கிறார் பாபா!

நிறைய நிறைய சிருஷ்டி விபூதி எடுத்து அதை கேக்கியின் தாய் (ஆஸ்துமாவுக்காக), கேக்கி (தொண்டைக் கட்டிக்காக) மற்றும் கேக்கி மனைவியை (சுகப் பிரசவத்திற்காக) தண்ணீரில் கலந்து தினசரி குடித்து வரச் சொல்கிறார்!


பிறகு , சாயி வாக்கு சத்ய வாக்கு என்கிற பேருண்மையின் படி பாபா சொன்ன அதே நாளில் ஆண் குழந்தை பிறக்கிறது! கேக்கியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்! ஆறு மாதம் கடந்து திடீரென ஒரு நாள் கேக்கி ரத்த வாந்தி எடுக்கிறார்! ஆகையால் மருத்துவமனையில் பரிசோதனைக்கு பாபாவை நினைத்துக் கொண்டே செல்கிற போது, எந்த டாக்டர் அறுவை சிகிச்சையை அறிவுறுத்தினாரோ அதே டாக்டர் வியந்து போகிறார்! "அந்த கட்டி இருந்த அறிகுறியே தென்படவில்லை- ஒரே ஆச்சர்யம்! உங்களுக்கு இனி ஒரு பிரச்சனையும் இல்லை!" என்கிறார்!

அப்போது கேக்கியின் காதுகளில் அந்த டாக்டரின் வார்த்தையைத் தாண்டி 

"அவன் என் மகன் ! அவனுக்கு எப்படி கேன்சர் வரவிடுவேன்?" என்ற பாபாவின் வார்த்தையே மீண்டும் மீண்டும் கேக்கியின் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது!

(Source : Miracles of Divine love - vol1 | Page : 75 - 80 | compiled by p.guru moorthy) 


சாயி வாக்கு சத்ய வாக்கு! பேரிறைவன் பாபா எது சொன்னாரோ - சொல்கிறாரோ அது மட்டுமே நிகழ்கிறது! இனியும் அது மட்டுமே நிகழும்! இந்த பேருண்மையை நாம் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்வதே ஆன்மீக முன்னேற்றத்திற்கான அஸ்திவாரம்! அந்த சத்ய அஸ்திவாரமே பிரேம கோபுரத்தை எழுப்பி பேரானந்தக் குட முழுக்கை அனைத்துலக ஆன்மாவிற்கும் விரைவில் நிச்சயம் நிகழ்த்தும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக