தலைப்பு

திங்கள், 1 ஏப்ரல், 2024

"மறு ஜென்மம் எடுத்தேன்!" -- நடிகர் ரகுவரன்

(கல்கி பத்திரிகையில் 26-11-2000'ல் வெளியான ஆச்சர்யக் கட்டுரை)

பிரபல நடிகர் ரகுவரன் எவ்வாறு பேரிறைவன் பாபாவின் கருணை வளையத்திற்குள் வந்தார்? என்பது பற்றியும், எத்தகைய அகம் - புறம் மாற்றத்தை அவர் பெற்றார் எனும் ஸ்ரீ சத்ய சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...! 

நடிகர் ரகுவரன் இப்போது தீவிரமான சாயிபாபா பக்தராக மாறிவிட்டார்! அவருடைய அனுபவம்.. 

"ஏழாவது மனிதன்'ல நடிச்சப்போ , எனக்குப் பதினெட்டு வயசு தான்! அதற்குப் பிறகு ஸ்ரீதர் சார் படம், ஆர்.சி.சக்தி படம்னு ரொம்ப பிஸியாயிடேன். கை நிறைய பணம்... திடீர் புகழ்... வழி காட்டறதுக்கு யாருமில்லை. இளம் வயசு வேற.. சுலபமா சறுக்கிட்டேன்! நாலே வருஷத்துல மோசமான நிலைமைக்குப் போயிட்டேன்! மார்க்கெட் அவுட்! உடம்பு வேற ரொம்ப கிரிட்டிக்கலா ஆயிடுச்சு! டாக்டர்ஸ் எல்லாம் கைவிட்டுட்டாங்க.. ஆஸ்பத்திரி பில்லுக்கு பணம் கட்ட காசு இல்ல! ரொம்ப விரக்தியா படுத்திருந்தேன்! வாய் விட்டு அழணும்னு நெனைக்கிறேன், ஆனா அதுக்குக் கூட திராணி இல்ல! அப்போ அவர் உள்ளே வர்றார்!

புட்டபர்த்தி சாயிபாபா!

"அட! இவர் மேஜிக் எல்லாம் பண்ற சாயிபாபா ஆச்சே! இவர் ஏன் இங்க வர்றாரு'ன்னு நான் நெனைக்கிறேன்! அதுக்குள்ள அவர் என்னை இன்னும் நெருங்கி வந்துட்டாரு! 

"கவலைப்படாத! நான் இருக்கேன்! நீ ஒண்ணும் அநாதைக் கிடையாது! தைரியமா இரு'ன்னு சொல்லி என் தலையை வாஞ்சையா தடவிக் கொடுக்கறார்!

எனக்கு இது கனவா இல்லை நிஜமா நடக்குதான்னு கூட தெரியலை. 

அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்குத் தூக்கத்துல நடந்தது போலத் தான் இருக்கு!

அடுத்து அறுபதாவது மணி நேரத்துல நான் புட்டபர்த்தியில இருக்கேன்! ஆஸ்பத்திரியில படுத்த படுக்கையா இருந்த நான் எப்படி அங்க போனேன்? எதுக்காக போனேன்? யார் என்னை அழைச்சது? சுத்தமா ஞாபகம் இல்ல! ஞாபக வலையில் துழாவித் துழாவிப் பார்த்துட்டேன்... எதுவும் பிடிபடலை! 

பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தேன்! பிரார்த்தனை மண்டபம் நிரம்பி வழியறது! நான் இரும்பு கேட்'டுக்கும் வெளியே நிற்கிறேன்! அதுவும் கூட்டத்தின் கடைசி ஆளாக! 

பாபா வருகிறார்... கூட்டத்தைப் பார்க்கிறார்... வெகு தூரத்தில் நிற்கும் என்னை வரச் சொல்லி சைகை செய்கிறார்"யாரையோ அழைக்கிறார் " என்று நான் சும்மா இருந்தேன்! அருகில் இருந்த சேவாதள்ஸ் "உங்களைத் தான் பாபா கூப்பிடுகிறார்" என்றார்கள்! எனக்கு ஒரே அதிசயம்! 

அத்தனை ஜனமும் ஒதுங்கி எனக்கு வழிவிட , நான் பாபாவுக்கு மிக அருகில் நிற்கிறேன்!

அவர் என்னைக் கனிவோடு தொட்டு... முன் வரிசையில் உட்கார வைக்கிறார்! 

அந்தத் தொடுகை! அந்தச் சிலிர்ப்பு! ஆயிரம் நாக்கு இருந்தாலும் என்னால் அதை வர்ணிக்க முடியாது... அப்படியே அவருடைய காலடியில் அழுதபடியே உட்கார்ந்துவிட்டேன்! பிரசாந்தியிலேயே தங்கினேன்! அந்த இடத்தை விட்டுப் போகும் எண்ணமே இல்லை! 

மறுநாளும் என்னைப் பார்த்தார்! 

"நிறைய வேலைகள் இருக்கே.. போ! பண்ணு! நான் இருக்கேன்!" -- பாசத்தோடு விரட்டினார்!

நான் சென்னைக்குப் புறப்பட்டேன்! வரும் வழி எல்லாம் பாபாவின் ஸ்மரணை தான்! 

மறுஜென்மம் எடுத்தவனாக ஊர் வந்து சேர்ந்தேன்! நிறையப் படங்கள் கிடைத்தன! நான்கு மொழியிலும் பிஸியாகிவிட்டேன்! ரோகிணி கிடைத்தார்! சாய்ரிஷி பிறந்தான்! அன்பான குடும்பம் அமைந்தது! இப்போது என்னிடம் குழப்பம் இல்லை! 'விஷன்' என்பார்களே அது என்னவென்று தெளிவாகப் புரிந்துவிட்டது! 

'சர்வீஸ் டு ஹியுமானிட்டி - சர்வீஸ் டு காட்' என்ற சிந்தனையில் நம்பிக்கை பிறந்தது! நாலு பேருக்கு நல்லது செய்யச் செய்ய, கடவுள் நம்மை நெருங்கி வருவார் என்பது புரிந்தது! பிரார்த்தனையின் பலம் புரிந்தது! இதை விட எனக்கு என்ன தேவை!!"

கேட்டுவிட்டு மௌனத்தில் ஆழ்ந்தார் ரகுவரன்!


"பாபா உங்களுக்கு மோதிரம், லிங்கம், பூ இப்படி ஏதாவது வரவழைச்சுக் கொடுத்திருக்காரா?"

"இல்லை! அதெல்லாம் எனக்கு தேவையே இல்லை! ஏதாவது மன சஞ்சலம்'னா, 'டியர் பாபா'ன்னு லெட்டர் எழுதுவேன்! கடிதம் எழுதி முடிப்பதற்குள்ளேயே பிரச்சனை தீர்ந்திடும்! "பாபா! எனக்கு உங்களை பார்க்கணும்'னு நினைச்சுப்பேன்... மறுநாள் அவர் தரிசனம் கிடைச்சுடும்! எவ்வளவு பெரிய கூட்டத்துலயும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுடுவார்! "வந்துட்டியா!?"ன்னு ஒரு சைகை! "நல்லா இரு'ன்னு ஆசீர்வாதம்! அதுலேயே பரம திருப்தி!

பாபா தான் உங்க கிட்ட ரொம்ப நெருக்கமா இருக்காரே... அவர் கூட ஃபோட்டோ எடுத்துக்கோங்க ‌.. ஒரு இன்டர்வியூ வேணும்'னு கேளுங்கன்னு கூட இருக்கிறவங்க தூண்டி விடுவாங்க.. எனக்கு அது எல்லாம் கேட்கணும்'னே தோணாது... ஏன்னா, எனக்கும் அவருக்கும் இருக்கற காஸ்மிக் கனெக்ஷன் இருக்கே, அது ஜென்ம ஜென்மமா தொட்டுத் தொடரும் விஷயம்" என்கிறார் நம்பிக்கையாக!

சாயிபஜனை , நாமாவளி பாடுவது இதெல்லாம் கூட ரகுவரன் செய்வதில்லையாம்!


"இந்த உலகமே நீங்க தான்! நான் உங்கள் பிள்ளை! என்னை சரியான பாதையில் நடத்துங்கள்! மற்றவர்களுக்கு உதவ எனக்கு உதவுங்கள்... இந்தச் சின்ன பிரார்த்தனை மட்டுமே செய்கிறேன்! சாய் சமாஜம் செய்யும் ஆன்மீகப் பணிகளில் கலந்து கொள்கிறேன்! முடிஞ்ச உதவி பண்றேன்! தட்ஸ் ஆல்!


"உங்கள் மனைவியும் சாயி பக்தையாக மாறியது எப்படி?" என்று கேட்ட போது,

"ரோகிணியிடமே கேட்டுக்கோங்க , சாய்ராம்" என்று அமைதியாக உட்கார்ந்துவிட்டார்!

"இவரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சாய்பாபா பற்றி அதிகமாய் தெரியாது... ஏதோ சாமியார் என்ற அளவில் தான் தெரிந்து வைத்திருந்தேன். ரஞ்சிதா, ரேவதி, கமீலா நாசர், நான் , நான்கு பேரும் சேர்ந்து "சுவாபிமான்" என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கி நல்ல விஷயங்கள் செஞ்சுக்கிட்டிருந்தோம்! அப்பத் தான் இவர் , "நீங்க செய்யற அதே சர்வீஸை தான் பாபா, பெரிய அளவுல செய்யறாரு... அதைப் பார்த்தா உனக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும்னு சொல்லி புட்டபர்த்திக்கு அழைச்சுட்டுப் போனார்! அங்கே போன பிறகு தான், கல்வி, மருத்துவம் , ஆன்மீகம்'னு பல துறைகளில் அவங்க தொண்டு செய்யறது தெரிஞ்சது, அன்றைக்கு பாபா மீது ரொம்ப மரியாதை ஏற்பட்டது!

"அப்பறம் , எனக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டு , ரொம்ப மன வேதனையுடன் இருந்த போது , பாபா நாமத்துக்கு உள்ள மகிமை தெரிந்தது! சாய் ரிஷி கர்ப்பத்துல இருந்த போது பாபாவை ஒருகணம் கூட நினைக்க தவறியதில்லை! அவர் எப்போதும் என் கூடவே இருப்பது போல தைரியம் பிறந்தது... அந்த அனுபவத்துக்குப் பிறகு நானே தீவிர பக்தையாகிவிட்டேன்!" என்று ரோகிணி உணர்ச்சிகரமாய் முடித்தார்!

அப்போது ரோகிணியின் மடியில் இருந்த அவரது இரண்டரை வயது மகன் சாய்ரிஷி , பாபாவின் படத்தைக் காட்டி "பாபா" என்று மழலையில் சொல்லி, அவரைப் போலவே இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசீர்வாதம் செய்ய... ரகுவரன் ரோகிணி முகத்தில் தான் எத்தனைப் பரவசம்!!

-- எழுதியவர் : மூத்த பத்திரிகையாளர் திருமதி அனுராதா சேகர்! 


பாத்திரத்தோடு பாத்திரமாக மாறிவிடும் ஒரு சில நடிகர்களில் ரகுவரனும் ஒருவர்! அவரின் தொழில் அர்ப்பணிப்பு மட்டுமல்ல பேரிறைவன் பாபாவின் மேல் கொண்ட பக்தி அர்ப்பணிப்பும் சிறப்பானது! தனக்கு டாலர், லிங்கம் - ஏன் நேர்காணல் கூட பாபாவிடம் இருந்து தேவையில்லை! தனக்கும் பாபாவுக்கும் இருக்கும் தொடர்பு பிரபஞ்சத் தொடர்பு - அது ஜென்ம ஜென்மமாக தொடரும் என்றார் பார்த்தீர்களா! அது தான் தூய்மையான பக்தி! அவரும் எங்கேயாவது மீண்டும் பிறந்திருப்பார்! பாபா தொடர்ந்து அவரை வழிநடத்திக் கொண்டும் வருவார் என்பதில் சந்தேகமே இல்லை! நடிப்பிலும், பக்திப் பிடிப்பிலும் , சாயியை சுமந்த நாடித் துடிப்பிலும் ரகுவரன் ஒரு சகாப்தம்!


 பக்தியுடன் 

வைரபாரதி






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக