பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
📝 நிகழ்வு 401:
ஒரு நாள் எனது அக்காவும் மாமாவும் புட்டபர்த்திக்கு தரிசனத்திற்காக வந்தனர். அவர்களுக்கு இன்டர்வியூ வழங்குமாறு நான் சுவாமியிடம் பிரார்த்தித்தேன். அவரும் எங்களை மறுநாள் காலையில் வருமாறு கூறினார். ஆனால் மறுநாள் கல்லூரி வேலை செய்யும் நாளாக இருந்ததால் மாணவர்களாகிய நாங்கள் பொதுவாக மந்திரத்திற்கு செல்ல இயலாது. ஆகவே அன்றிரவு நான் வார்டனிடம் சென்று அதற்கான அனுமதி கோரினேன். ஆனால் அவரோ, சுவாமியிடமிருந்து இதுகுறித்து எந்த செய்தியும் தனக்கு வரவில்லை என்று கூறிவிட்டார்! ஆகவே வேறு வழியின்றி மறுநாள் நான் எப்போதும் போல கல்லூரிக்குச் சென்றேன். பகற்பொழுது முழுவதும் எனது மனம் அமைதியற்ற நிலையில் இருந்தது. சுவாமி என்ன நினைப்பார்? அவர் கோபித்துக் கொள்வாரா? என்றெல்லாம் சிந்தனைகள்! அன்று மாலையில் தரிசனம் தொடங்கியது. பக்தர்களுக்கு தனது புன்னகை நிறைந்த முகத்துடன் தரிசனம் அளித்த பின்னர் சுவாமி மாணவர்கள் இருந்த பக்கம் திரும்பினார். உடனே அவரது முகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது! என்னை நேராக நோக்கிய அவர், " துன்னப்போத்தா(எருமை)! உன்னை நான் இன்று காலையில் வரச் சொன்னேன்! ஏன் நீ வரவில்லை? என்றார்!
நான் பயந்தபடியே நடந்து விட்டது!! உடனே என் மனம் வார்டனுடன் நடந்த உரையாடலை எண்ணிப் பார்த்தது. எனது கவலையில் எனது உள் உணர்வு என்னை காப்பாற்றிக் கொள்ளுமாறு உரைத்தது! "சுவாமி! அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை!" என்று சொல்லுமாறு அறிவுறுத்தியது! ஆனால் ஏதோ ஒன்று என்னை அப்போது அவ்வாறு கூற விடாமல் தடுத்தது! ஆகவே நான் அமைதியாக இருந்தேன்! உடனேயே, "சுவாமி அனைத்தையும் அறிவார்" என்று என் உள் மனம் கூறியது! ஒரு சில நொடிகளிலேயே சுவாமி தன் முகத்தில் ஒரு இதமான புன்சிரிப்புடன் எனது தோளின் மேல் தன் கையை வைத்து, "கவலைப்படாதே! நான் வார்டனிடம் சொல்கிறேன்!" என்றார்!! உடனே வார்டனை அழைத்து, "இன்டர்வியூவிற்கு நாளை இவனை இங்கே அனுப்பு!" என்றார்!! அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை!
(மறுநாள் என்ன நிகழ்ந்தது என்பதை நிகழ்வு எண் 402-ல் பார்ப்போம்!)
ஆதாரம்: ஏப்ரல் 2025 சனாதன சாரதி-ஆங்கில இதழில் திரு, கோடா சிவகுமார் என்ற முன்னாள் மாணவர் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 402:
(நிகழ்வு எண் 401 இன் தொடர்ச்சி)
மறுநாள் காலையில் தரிசனத்தின் போது சுவாமி எங்களை இன்டர்வியூக்கு அழைத்தார். நான் சுவாமியின் திருப் பாத கமலங்களின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். அதே நேரத்தில் சுவாமியின் படம் பதித்திருந்த ஒரு சாதாரணமான பிளாஸ்டிக் மோதிரம் ஒன்றை நான் அணிந்திருந்தேன். பிருந்தாவனத்தில் கோடை வகுப்பு நடந்தபோது ஒரு சிறிய ஞாபகார்த்தமாக நான் வாங்கிய மோதிரம் அது. இன்டர்வியூவின் போது சுவாமி என் கையைப் பிடித்துக் கொண்டு அந்த மோதிரத்துடன் விளையாட ஆரம்பித்தார்! பின்னர் ஒரு கேலியான புன்னகையுடன், என்னை பார்த்துக்கொண்டே, "இதை எங்கே வாங்கினாய், சிறுவனே!" என்றார்! நான் உடனே, " சுவாமி! பிருந்தாவனத்தின் நுழைவாயிலுக்கு வெளியே" என்றேன்! உடனே அவர், "இதற்கு என்ன விலை கொடுத்தாய்?" என்றார்! அதற்கு நான், " இரண்டு ரூபாய், சுவாமி!" என்றேன்! உடனே சுவாமி, தன் சிரிப்பினை அடக்கிக் கொண்டே, " ஆகவே, எனது மதிப்பு இரண்டு ரூபாய் மட்டும் தான்!" என்றார்! உடனே அந்த அறையில் குழுமியிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்! நான் என் கைகளை கூப்பிக்கொண்டு அமைதியானேன். சுவாமி மேலும் தொடர்ந்து, "என்னிடம் அதைக் கொடு!" என்றார். நானும் அவ்வாறே செய்தேன். அந்த மோதிரத்தைத் தன் வாயின் அருகே வைத்துக் கொண்டு மூன்று முறை அதற்கு அதன் மேல் சுவாமி ஊதினார்! அந்தக் கணத்தில் அந்த பிளாஸ்டிக் மோதிரம், தங்கத்தினால் செய்யப்பட்ட சுவாமியின் உருவம் பதிக்கப்பட்ட, பளபளக்கும் உலோகத்தினால் ஆன மோதிரமாக மாறியது!! அதனைக் கண்ட அனைவரும் ஒரு கணம் ஆச்சர்யத்தில் மூச்சற்று போயினர்! அந்த மோதிரத்தை அனைவரும் பார்க்கக் கொடுத்த சுவாமி அது எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்ற கேள்வியை கேட்டார். ஒரு சிலர் வெள்ளி என்றும் மற்றவர்கள் பிளாட்டினம் என்றும் பதிலளித்தனர். சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் சுவாமி, " இது பஞ்சலோகத்தினால் ஆனது! ஐந்து உலோகங்கள் கூடிய ஒரு கலவையாகும்! இதனை வைத்து தான் கோவில் சிலைகளை செய்வார்கள்!" என்றார். பிறகு அந்த மோதிரத்தை என் கையில் அணிவித்துக் கொண்டே, "இப்போது இதன் மதிப்பு என்ன?" என்றார்! என்னிடம் அதற்கு பதில் இல்லை! சுவாமி சிரித்துக் கொண்டே, "விலைமதிப்பற்றது!" என்றார்! நான் அந்த புதிய மோதிரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சுவாமி என்னை நோக்கி, " இந்த மோதிரத்தை ஒரு கணப்பொழுதில் சுவாமியால் மாற்ற முடியும் என்றால், உன்னை அவரால் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பார்!" என்றார்! அந்த நொடியில் நான் புரிந்து கொண்டேன்! ஒரு உயிரற்ற பொருளை எப்படி சுவாமி ஒரு புனிதமான விலைமதிப்பற்ற பொருளாக மாற்றுகிறாரோ அதேபோல - நாம் அவரை சரணடைந்தோமானால்- நம் ஒவ்வொருவரையும் அவரது திவ்ய சங்கல்பத்தினால் ஒரு விலைமதிப்பற்றவராக சுவாமி மாற்றுவார்!!
ஆதாரம்: ஏப்ரல் 2025 சனாதன சாரதி-ஆங்கில இதழில் திரு.கோடா சிவகுமார் என்ற முன்னாள் மாணவர் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 403:
1972-ல் குரு பௌர்ணமி அன்று அமிர்தம் அடங்கிய வெள்ளி பாத்திரத்தை தாங்கியபடி பக்தர்களின் வரிசைகளுக்கு நடுவே சுவாமியுடன் நடந்து செல்லும் பாக்கியம் எனக்கு கிட்டியது. தன் ஒரு கையால் பாத்திரத்தை தொட்டுக்கொண்டும், மற்றொரு கையினால் வெள்ளி தேக்கரண்டியின் மூலம் பக்தர்களின் நீட்டிய கைகளில் அமிர்தத்தை வழங்கிக் கொண்டும் சுவாமி நடந்து சென்றார். ஒரு சில மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சுவாமி நேராக அவர்களது வாயில் அமிர்தத்தை மெதுவாகப் பொழிந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இவ்வாறாக நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறிது நேரம் கழித்த பின்னர் முறுக்கிய கைகளுடனும் மிகவும் பரிதாபமான முகத்தோற்றத்துடனும் கூடிய ஓர் இளைஞன், வரிசையில் அமர்ந்திருந்ததை கவனித்தேன். உடனே தன் வாயை திறக்குமாறு அவனிடம் நான் கூற விழைந்த தருணத்தில் சுவாமி அவனை பார்க்காமலேயே அவனைக் கடந்து சென்று விட்டார்! ஆகவே சுவாமியின் கவனம் அவன் மீது படும் படியாக அவனை மந்திரத்திற்கு அருகில் அமரும்படி செய்யலாம் என்று நான் நினைத்தேன். நாங்கள் அதே நேரத்தில் அவனது பக்கத்து வரிசையில் சென்று கொண்டிருந்தபோது சுவாமி அவனைப் பார்த்து, "நடிப்பதை விட்டுவிட்டு உன் கையை நீட்டு!" என்றார்!! அடுத்த நொடியில் அந்த இளைஞன் தன் இரு கைகளையும் நேராக நீட்டி அனைவரையும் போல அமிர்தத்தை வாங்கிக் கொண்டான்!! மாற்றுத்திறனாளியை போல நடித்த அந்த இளைஞனின் போக்கிரித்தனமான துணிச்சலைப் பார்த்து நான் திகைத்தேன்! அமிர்தம் அளிக்கும் நிகழ்வு முற்றிலும் முடிந்த பின்னர் நாங்கள் அவனை பிடித்து விசாரித்தோம்! அதற்கு அவன், " சுவாமி என் மேல் பரிதாபப்பட்டு என் வாயில் அமிர்தம் அளிப்பார், அந்த நேரத்தில் நான் என் இரண்டு கைகளாலும் சுவாமியின் பாதத்தை தொட்டு நமஸ்கரித்து விடலாம் என்று எண்ணினேன்! ஆனால் சுவாமியைப் பார்த்த நொடியில் நான் நடுங்கி விட்டதால் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை!" என்றான்!!
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய " லவ் இஸ் மை ஃபார்ம் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 404:
12-5-1968 அன்று சுவாமி, மும்பை தர்மக்ஷேத்ராவில் "சத்ய தீப்" என்று அழைக்கப்படும் தனது புதிய இல்லத்தின் புகுவிழாவை நடத்தினார்! இதனைத் தொடர்ந்து, 16, 17, 18 தேதிகளில் சத்திய சாயி நிறுவனங்களில் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்றது. அந்த தருணத்தில் ஒரு நாள் மாலையில் "பாரதீய வித்யா பவன் " இல் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு சுவாமி முதன்மை விருந்தினராக இருந்தார். அப்போதைய துணை பிரதம மந்திரி, திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள் அதற்கு தலைமை தாங்கினார். அவர் முதலில் பேசிய போது, கர்வத்துடன் "நான், தேசிய மொழியான இந்தியில் பேசப் போகிறேன்! பிறகு பாபா அவர்கள் தனது பிராந்திய மொழியான தெலுங்கில் பேசுவார்! அவரது பேச்சு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்" என்று தொடங்கினார்! அவர் தன் உரையில் சுவாமியின் உயர்ந்த கொள்கைகளையும் சத்திய சாயி நிறுவனங்களையும் பற்றிப் பாராட்டிப் பேசினார். அப்போது மேடையின் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறந்த தேசபக்தரும், "பவன்'ஸ் ஜர்னல்" என்ற சிறந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான திரு. கே. எம். முன்ஷி அவர்கள் அமர்ந்திருந்தார். அப்போது அவர் பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகவே அவரது கைகள் நடுங்கிக் கொண்டே இருந்தன. அதனைப் பார்வையுற்ற சுவாமி, உடனே எழுந்து கீழே இறங்கி சென்று அவரது அருகில் அமர்ந்தார்! விபூதியை வரவழைத்து அவரது கைகளில் தடவினார்! உடனே கைகள் நடுங்குவது முற்றிலும் நின்றது!! அருகில் இருந்த அனைவரும் ஆச்சரியமுற்று, மகிழ்ச்சியில் பலத்த கரகோஷம் எழுப்பினர்!! திரு. மொரார்ஜி தேசாய் பேசி முடித்தவுடன் சுவாமி தனது உரையைத் தொடங்கினார். திரு தேசாய் அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலளிக்கும் படியாக, சுவாமி சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பரிசுத்தமான சமஸ்கிருத மொழியில் பேசினார்!! குழுமியிருந்தோர் ஆச்சரியத்தால் கட்டுண்டு கிடந்த அந்த நேரத்தில் சுவாமி, " வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நமது கலாச்சாரத்தின் பொக்கிஷக் களஞ்சியமான சமஸ்கிருத மொழிதான் இந்தியாவின் தேசிய மொழியாகும்! ஹிந்தியும் ஒரு பிராந்திய மொழிதான்!" என்று கூறினார்!! உடனே அவை முழுவதும் ஆரவாரம் பொங்கியது! மொழிபெயர்க்க நின்று கொண்டிருந்த திரு கஸ்தூரி அவர்கள் தனது இரு கைகளையும் கூப்பி சிரம் தாழ்த்தி சுவாமியை வணங்கினார்!! பிறகு சுவாமி தெலுங்கு மொழிக்குத் தன் உரையை மாற்றிக்கொண்டு, "இந்தியர்களின் தேசிய மொழி சமஸ்கிருதம் தான்! நமது கலாச்சார இலக்கியங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் உள்ளன!! மிகவும் துரதிஷ்டவசமாக அத்தகைய சமஸ்கிருத மொழிக்கு அரசாங்கம் மாற்றான் தாய்க்கு உண்டான அந்தஸ்தை அளித்துக் கொண்டிருக்கிறது!" என்று பரந்த கைத்தட்டல்களுக்கிடையே உரக்க கூறினார்!!
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய "நெக்டர் ஆஃப் லவ் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 405:
1969 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் சுவாமி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ராஜ மகேந்திர வரத்திற்கு நான் சென்று அவரை தரிசித்தபோது அவர் என்னையும் அவருடைய பயணக் குழுவில் சேர்த்துக் கொண்டார். லக்காவரம் என்ற கிராமத்தில் ஸாயி நிறுவனத்தின் ஒரு சுறுசுறுப்பான பணியாளரான திரு.எம். பாலாஜி அவர்களது வீட்டிற்கு சுவாமி விஜயம் செய்தார். அங்கே நிகழ்ந்த ஒரு அற்புதத்தினை நேரில் பார்க்க எங்களுக்கு பாக்கியம் கிடைத்தது.
அன்று காலையில் தான், பாலாஜியின் அன்பிற்கு பாத்திரமான அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்து விட்டது! சுவாமியின் வருகையை முன்னிட்டு வீட்டின் முன்பும் தெரு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிக் கொண்டிருந்தது. ஆகவே பாலாஜி அவர்களுக்குத் தன் நாயின் உடலை முறையாக அடக்கம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஆகவே அதன் உடலை ஒரு மூங்கில் கூடையில் வைத்து, துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக வைக்கோலையும் துளசி இலைகளையும் அதன் மேல் நிரப்பி மூடிவிட்டு, அந்தக் கூடையை வீட்டின் பின்புறம் இருந்த ஒரு மாமரத்தின் அடியில் வைத்து விட்டனர். வீட்டிற்கு விஜயம் செய்த சுவாமி, இல்லத்தார் அனைவரையும் ஆசீர்வதித்தார். பிறகு வீட்டின் பின்புறத்தை நோட்டம் விட்ட சுவாமி, அங்கு வைக்கப்பட்டிருந்த கூடையைப் பார்த்தார்! உடனே, அதில் என்ன இருக்கிறது என்று பாலாஜியிடம் வினவினார்! உடனே பாலாஜி, "சுவாமி! எனது வளர்ப்பு நாய் ஒரு மாதத்திற்கும் மேலாக, நோய்வாய்ப்பட்டு வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தது; கால்நடை மருத்துவர் எவ்வளவு முயற்சித்தும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. இறுதியில் இன்று காலை அது உயிரிழந்தது ஆகவே அதனை இனிமேல்தான் நாங்கள் அடக்கம் செய்ய வேண்டும்" என்றார். உடனே சுவாமி அந்தக் கூடையைத் தன் முன் கொண்டு வந்து வைக்கும்படி பணித்தார்.
மேலே மூடி இருந்த வைக்கோலையும் துளசி இலைகளையும் அகற்றும்படி பாலாஜியிடம் சுவாமி கூறினார். சுவாமி உடனே தன் கையை சுற்றி விபூதியை வரவழைத்து அந்த நாயின் உடலின் மேல் தூவிய பின்னர், அதனை இலேசாகத் தட்டினார்! உடனே அந்த நாய் விழித்துக் கொண்டது! மெதுவாக தன் கால்களில் நிற்க முயற்சித்தது- வெற்றியும் கண்டது! பின்னர் தனது வாலை ஆட்டத் தொடங்கியது!! அதற்கு, குறைந்த சூட்டில் பால் வழங்குமாறு சுவாமி கூறினார்!!
பல நாட்களுக்குப் பிறகு சிவராத்திரி நாளில் புட்டபர்த்தியில் பாலாஜியை நான் சந்தித்தபோது அந்த நாய் மிகவும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்!
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய "நெக்டர் ஆஃப் லவ் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 406:
1974 இல் நடந்த நிகழ்வு: அந்த காலகட்டத்தில் "தசாவதாரம் நுழைவு வாயிலி"ல் இருந்து கோபுரம் வரை இருந்த பாதையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக அமர வைக்கப்படுவர். ஒரு நாள், சுவாமியின் கைக் குட்டையை வைத்துக்கொண்டு, தரிசனத்தின் போது சுவாமியின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது சுவாமி, அந்த நுழைவு வாயிலின் எதிரே, ஆண்கள் பகுதியிலிருந்து பெண்கள் பகுதிக்கு செல்ல ஆரம்பிக்கும்போது, மேலே குறிப்பிட்ட அந்தப் பாதையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நபர், தன் கையில் ஒரு கடிதத்தை உயரப்பிடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். சுவாமி அந்த கடிதத்தை வாங்கிக் கொள்ளவில்லை. உடனே அந்த மனிதர் சுவாமியின் கால்களைப் பற்றி கொண்டார்! உடனே நான் முன் சென்று அவரது கைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். சுவாமி, என்னை, "தடுக்க வேண்டாம்" என்று சைகை செய்த பின்னர், அவரிடம் "என்ன விஷயம்?" என்று கேட்டார். அதற்கு அவர், "சுவாமி! நான் இங்கு வந்து பத்து நாட்கள் ஆகின்றன!" என்ற சொற்களுடன் தொடங்கினார். உடனே சுவாமி, " இல்லை! எட்டு நாட்கள் தான் ஆகின்றன! நீ சென்ற புதன்கிழமை வந்தாய்! இன்றுடன் எட்டாவது நாள்! சரி, பிறகு என்ன?" என்றார்! அதற்கு அவர், " எனது கடிதத்தை , கடந்து எட்டு நாட்களில் ஒரு நாள் கூட சுவாமியிடம் அளிப்பதற்கான நல்வாய்ப்பு கிட்டவில்லை!" என்றார். அதற்கு சுவாமி, " ஆமாம், அந்த இரு தென்னை மரங்களுக்கு நடுவில் உள்ள வரிசையில் நீ அமர்ந்திருந்தாய்! ஆகவே நான் எப்படி உன்னிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கொள்ள முடியும்?" என்றார்! அதற்கு அந்த மனிதர், " இன்றுதான் எனக்கு முதல் வரிசை கிடைத்தது! ஆகவே சுவாமியை அருகிலே பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றேன்!" என்று கூறினார். அதற்கு சுவாமி, " எனக்கு அருகில் இருக்கும் மக்கள், என்னை பார்க்கிறார்கள். எனக்கு தூரத்தில் இருப்பவர்களை நான் பார்க்கிறேன்! உன்னையும் உனது ஆதங்கங்களையும் கவலைகளையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்! உனது மகளின் திருமணம் தொடர்பாக நல்ல ஒரு விவாக சம்பந்தம் வந்தது. ஆனால் அந்த குடும்பத்தினர் வரதட்சணை பிரச்சனையால் விலகிக் கொண்டனர்! நீ உனக்குக் கிட்டிய வேறு ஒரு நல்ல சம்பந்தம் தொடர்பாக சுவாமியின் ஆசீர்வாதம் வேண்டுமென்று உனது கடிதத்தில் எழுதியுள்ளாய்! அந்தப் பையன் நல்ல ஒழுக்கமுள்ளவன்! உன்னுடைய மகளைத்தான் மணப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டான்! ஆகவே உங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள அவனது தந்தை நேற்றுதான் முடிவெடுத்துள்ளார்! நீ உடனே வீட்டிற்கு சென்று இந்த நல்ல செய்தியை உன் மகளிடம் சொல்!!" என்றார்!! உடனே அந்த மனிதர், " நீங்கள் கடவுள்தான், சுவாமி!! நீங்கள் கடவுள்தான்!!!" என்று கூறிக் கொண்டே தனது கையில் இருந்த கடிதத்தைத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்! பிறகு சுவாமி, மேற்கொண்டு தரிசனம் அளிப்பதற்காக பெண்கள் பகுதியை நோக்கி நகர்ந்தார்.
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய "நெக்டர் ஆஃப் லவ் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 407:
சிவராத்திரி 1972 - நானும் எனது நண்பர்களான திரு. பிரசாத் மற்றும் திரு. ராமாராவ் ஆகியோருடன் பர்த்தியில் சுவாமிக்கு பாத சேவை செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு மாணவர், அன்று தபாலில் வந்த 300 கடிதங்கள் அடங்கிய கட்டினைக் கொண்டு வந்த பிறகு சுவாமியின் கட்டிலின் அருகில் இருந்த மேசையில் அவற்றை பரப்பி வைத்தார். அதற்கு நானும் உதவினேன். சுவாமி அவற்றிலிருந்து ஏழு அல்லது எட்டு கடிதங்களை மட்டும் எடுத்துக் கொண்ட பிறகு மற்றவற்றை அங்கிருந்து அகற்றுமாறு அந்த மாணவரிடம் கூறினார். (தீயில் இடுவதற்காக வைக்கப்பட்டுள்ள) ஏற்கனவே பல கடிதங்கள் அடங்கிய மூட்டையினுள் இந்த கடிதங்களும் போடப்பட்டன!
இதில் முக்கியமான விஷயம்- அந்த மூட்டையினுள் இடப்பட்ட கடிதங்களில் என்னுடைய ஒரு கடிதமும் அடங்கும்!
என்னுடைய கடிதத்தில், "எனது குடும்பம் பெரியதான ஒன்றாகும்; பலர் அவ்வப்போது பர்த்திக்கு வந்து சென்று கொண்டிருப்போம். ஆகவே மேற்கு பிரசாந்தியில் முதலாவது பிளாக்கில் எனக்கு ஒரு அறையை ஒதுக்குமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்" என்று நான் எழுதி இருந்தேன். சுவாமி மேசையிலிருந்து எடுப்பதற்கு முன்னதாகவே நான் எனது 'அனுப்புனர் முகவரி' எழுதப்பட்ட கடிதத்தை சுவாமியின் பார்வையில் படுமாறு வைத்திருந்தேன்! ஆனால் அந்த கடிதத்தை சுவாமி தன் கையில் எடுக்காததனால் எனது துரதிருஷ்டத்தை நினைத்து வருந்தினேன்! சிறிது நேரத்தில் சுவாமி எங்களை அங்கிருந்து கிளம்புமாறு கூறினார். நாங்கள் உடனே எழுந்து பாத நமஸ்காரம் செய்துவிட்டு படி இறங்கி கொண்டிருந்தோம். நான் கடைசி படியில் இருந்த போது ' ரமணா! ' என்று அழைக்கும் சுவாமியின் குரல் கேட்டது! நான் உடனே திரும்பி மேலே சென்றேன். தன் அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த சுவாமி, என் தோளின் மீது தன் கையை வைத்து, " ஏன் விளக்கெண்ணெய் பூசிய முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்? இங்கே பார்! உனக்கு மேற்கு முதல் பிளாக்கில் அறை தருகிறேன்! மேலும் இரண்டு மாதத்திற்குள் தெற்கு பிளாக்கும் தயாராகிவிடும். அங்கே உனது தந்தையாருக்கும் அறை கொடுக்கிறேன். இதனை அவருக்குத் தெரிவித்து கடிதம் எழுது!" என்றார்!!
மீண்டும் ஒருமுறை பாத நமஸ்காரம் செய்துவிட்டு நான் கீழே இறங்கினேன்! இந்த நிகழ்விற்கு பிறகு, "ஒவ்வொரு கடிதத்திலும் எழுதப்பட்டவை, அவை எழுதப்படும் போதே சுவாமி அவற்றை நன்கு அறிவார்!" என்ற உண்மையை நான் நன்கு உணர்ந்தேன்!
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய "நெக்டர் ஆஃப் லவ் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 408:
சாயி பக்தரான டாக்டர். போரே கௌடா அவர்கள் 1971இல் விக்டோரியா மருத்துவமனையில், திரு. சூரய்யா அவர்களுக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் என்னையும் டாக்டர். ஶ்ரீனிவாஸ் அவர்களையும் சூரய்யா அவர்களுக்குத் துணையாக இருப்பதற்காக சுவாமி அனுப்பி வைத்தார். திரு.சூரய்யா அவர்கள் மிகவும் உயரமானவர்; வலிமையான, சிறந்த கட்டுமானம் உள்ள தேகத்தை உடையவர். அவர் மிகவும் குறைவாகவே பேசுவார்; ஆயினும் அந்த ஒரு சில சொற்களுமே நேரடியாகவும் தேள்கொட்டுவது போலவும் இருக்கும்! அவர் வெங்கடகிரி எஸ்டேட்டில் வரி வசூலிப்பாளராக இருந்துள்ளார். அவர் சுவாமியின் நெருங்கிய பக்தரும் ஆவார். மருத்துவர் அவரை அணுகி அறுவை சிகிச்சை மறுநாள் காலை 8 மணிக்கு தொடங்கும் என்று கூறினார். மேலும் அதுவரை அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருந்துகளையும் பற்றி எடுத்துரைத்தார்.
அன்று இரவு திரு. சூரய்யா அவர்கள் என்னை அழைத்து, "இதோ பார்! சுவாமி பலருக்கு தன் விபூதியை அளித்து அவர்களது நோய்களை குணப்படுத்துகிறார். ஆனால் என்னை மட்டும் இந்த வேதனைக்கு ஏன் உட்படுத்துகிறார் என்று தெரியவில்லை! நான் மயக்கத்திலேயே உயிரிழந்து விடலாம்! தொடர்ந்து உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையோ, அல்லது இறப்பின் மீது பயமோ எனக்கு இல்லை! எனது உடந்தைகள் மற்றும் சொத்து பற்றிய விவரம் சுவாமிக்குத் தெரியும்! இந்த பெட்டியில் எனது நான்கு ஜோடி உடைகளும் துண்டுகளும் மேலும் ₹350 ரொக்கமும் உள்ளன! நான் இறந்து விட்டால் இவற்றை இந்த மருத்துவமனை ஊழியர்களுக்குப் பகிர்ந்து அளித்து விடு! கோடை வகுப்புகளில் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்கள் இருக்கும் பிருந்தாவனத்திற்கு எனது பூத உடலை கொண்டு சென்று விடாதே! எனது இறுதி வார்த்தைகள் இவை என்று சுவாமியிடம் கூறிவிடு! எனது உடலை அருகில் இருக்கும் மயானத்திற்கு எடுத்துச் சென்று எரித்துவிடு! எனது இறப்பை யாரிடமும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை!" என்றார்!! இந்த சொற்களை கேட்ட நான் மிகவும் பதற்றமடைந்தேன். உடனே சுதாரித்துக்கொண்டு, "நீங்கள் நினைக்கும் படி ஏதும் நிகழாது! சுவாமியின் அருளால் நீங்கள் மறுபடியும் உயிருடன் பிருந்தாவனத்திற்கு திரும்புவீர்கள்!" என்று அவரிடம் கூறினேன். மறுநாள் காலை அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்ல ஒரு தள்ளுவண்டி வந்தபோது அதில் வருவதற்கு மறுத்துவிட்டார் அவர்! மாறாக, தான் நடந்தே வருவதாகப் பிடிவாதம் பிடித்தார்! அவர் அப்படி செய்தால் தன் வேலை பறிபோய் விடும் என்று அந்தப் பணியாளர் கெஞ்சிய பிறகு, அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்! காலை 8:15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை 11:30 மணிக்கு முடிவற்றது. டாக்டர் போரே கவுடா அவர்கள் வெளியே வந்து, சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்ததாகவும் அவருக்கு சுய நினைவு வந்த பிறகு அவர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் என்னிடம் கூறினார். உடனே டாக்டர். ஶ்ரீனிவாசை அங்கேயே இருக்க செய்துவிட்டு சுவாமியிடம் தெரிவிப்பதற்காக நான் பிருந்தாவனம் விரைந்தேன். அங்கு சென்ற நான் உடனே மாடிக்கு அழைக்கப்பட்டேன். நான் சுவாமியிடம் அங்கு நடந்ததை விவரித்தபோது சுவாமி வெறுமனே ஒரு புன்முறுவல் பூத்தார்! பிறகு 9:30 மணி முதல் 10:15 மணி வரை சுவாமி தன்னை மறந்த(து போல) ஒரு சமாதி நிலையில் இருந்ததாகவும், 10:30 மணிக்கு உணவு அருந்த வந்தபோது , "திரு. சூரய்யாவின் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது! நான் அங்கு சென்று இருந்தேன்! டாக்டர் மிகுந்த கவலையுடன் இருந்தார்! நோயாளி ஒரு அடங்காதவர் ஆனால் மருத்துவரோ ஒரு சாது! ஆகவே நான் அங்கே இருந்ததால் இந்த சங்கடமான நிலைமையை மருத்துவரால் சமாளிக்க முடிந்தது!" என்று சுவாமி கூறியதாகவும், திரு. ராமபிரம்மம் அவர்கள் என்னிடம் கூறினார்!!
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய "நெக்டர் ஆஃப் லவ் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 409:
1979 அக்டோபரில் நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அப்போது சுவாமியினுடைய 54 வருட இப்பூவுலக வாழ்க்கையை மனதில் வைத்து 54 நாட்கள் அவரது காலடியில் கழிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் வேடிக்கையாகவும் வினோதமாகவும் எனது 52 வயதைக் குறிக்கும் வண்ணம் 52 நாட்களே தங்குவதற்கு அவரது கருணை என்னை அனுமதித்தது. அச்சமயம் நவம்பரில் அனைத்து உலக அகண்ட பஜனை வழிபாடுகள் முடிந்த மறுநாள் மதியம் சுவாமியின் தரிசனத்திற்காக மந்திரத்தின் வளாகத்தில் ஒரு மரத்தடியில் வயதான காவி உடை அணிந்த சன்யாசி ஒருவரின் அருகில் நான் அமர்ந்திருந்தேன். சுவாமியின் வருகைக்காக காத்திருக்கையில் அந்த சன்யாசியிடம் நான் மெதுவாக உரையாட ஆரம்பித்தேன். அப்போது அவர், " எனது பெயர் ப்ரேமானந்த் ஆகும்; நான் ரிஷிகேஷிலிருந்து வந்துள்ளேன். ஒருநாள் எனது யோகா பயிற்சியின்போது ஏதோ தவறு ஏற்பட்டதன் காரணமாக எனது முதுகுத்தண்டின் பாதியில் இருந்து கீழ் வரை கடுமையான வலியை உணர்ந்தேன். இதனால் எனது சுவாசமும் பாதிக்கப்பட்டது. இந்த உபாதைகள் பல நாட்கள் தொடர்ந்ததால் நான் இறந்து விடுவேன் என நினைத்தேன். ஆகவே நான் மிகவும் தீவிரமாக இறைவனை வேண்டத் தொடங்கினேன். பிறகு ஒருநாள் இரவில் எனது பிரியமான இறைவியான துர்க்கை என் கனவில் தோன்றினாள்! மிகவும் அழகாகவும் ஜ்வலித்துக் கொண்டும் இருந்த அவள் தனது இனிமையான குரலில் என்னை தென்னிந்தியாவில் புட்டபர்த்தியில் வசிக்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவிடம் செல்லுமாறு பணித்தாள்! அவரே கடவுளின் பூரணமான அவதாரம் என்றும் அவர் என்னை குணப்படுத்துவார் என்றும் கூறினாள்!! மறுநாளே நான் எனது ஆசிரமத்தில் இருந்து விடுப்பு பெற்று அங்கிருந்து புறப்பட்டேன்.
இந்தப் பெயரை நான் என் வாழ்வில் முதல் முறையாக என் கனவில் கேள்விப்பட்டேன். ஆகவே சிறிது காலதாமதம் ஆயினும் ஒரு நாள் புட்டபர்த்தியை வந்தடைந்தேன். இன்று அமர்ந்திருப்பதைப் போலவே, கூட்டத்தில் ஒருவராய் இங்கு வந்து அமர்ந்தேன். அனைவரையும் போலவே சுவாமியினுடைய வாயிற்காதவு திறக்கும் நொடியை எதிர்பார்த்து காத்திருந்தேன். சில நிமிடங்களில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அனைவரும் நிமிர்ந்து அமர்ந்தனர். அனைவரது கைகளும் அவர்களது நெஞ்சின் அருகே கூப்பிய நிலையில், தங்களது இமைகளை மூடாத வண்ணம் அந்த கதவினை நோக்கி காத்திருந்தனர். அப்போது குறைவான உயரத்துடன், அடர்ந்த தலைமுடி மற்றும் ஆரஞ்சு நிற அங்கியுடன் ஒரு மனித உருவம் வெளியே வந்தது! அவரது (தங்கத்தைப் போன்று மின்னிக் கொண்டிருந்த) முகத்தை நான் முதன்முறை பார்த்த அடுத்த நொடியில் எனது முதுகு வலியும் சுவாசக் கோளாறும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன!! பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நிஜமாகவே ஒரு பூரண அவதாரம் தான்" என்றார்!
ஆதாரம்: திரு. ஆர். லோவன்பெர்க் அவர்கள் எழுதிய "தி கிரேஸ் ஆஃப் சாய்" என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 410:
பூர்ண சந்திரா ஆடிட்டோரியம் கட்டப்படுவதற்கு முந்தைய நாட்களில் அங்கே சுமார் 6000 பேர் அமரும்படியான ஒரு ஹால் இருந்தது. அங்கே நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் ஒரு நாற்காலியும் மேசையும் சுவாமிக்காக மந்திரத்தில் இருந்து தினமும் எடுத்துவரப்பட்டன. ஒருமுறை என்னிடமும் என் நண்பர் தேசிகாச்சாரி அவர்களிடமும் சுவாமி, "நீங்கள் தசரா பண்டிகைக்கு வரும்போது ஒரு அலுமினிய நாற்காலியும் டெகோலம் ஷீட் ஒட்டப்பட்ட மேசையையும் கொண்டு வாருங்கள்! இங்கே உள்ள மாணவர்கள் அவற்றை சுமந்து செல்வதற்கு எளிதாக இருக்கும்!" என்றார். சுவாமி ஒரு பொறுப்பினை ஒப்படைத்தது குறித்து நாங்கள் இருவரும் மகிழ்ந்தோம்! நாங்களும் ஹைதராபாதில் அவற்றை வாங்கினோம்; தேசிகாச்சாரி, ரூ. 225 கொடுத்து மேசையை வாங்கினார்; நான் மற்றொரு இடத்தில் ரூ. 115 கொடுத்து நாற்காலியை வாங்கினேன். அவற்றில் இருந்த விலை குறிப்பிடப்பட்ட சீட்டுகள் சுவாமியின் கண்களில் பட்டால் அவர் எங்களுக்கு பணம் கொடுத்து விடுவார் என நினைத்தோம். ஆகவே அந்த சீட்டுகளை கவனமாக அகற்றி விட்டோம்!
சுவாமி எங்களது தேர்ந்தெடுப்பு
களைப் பார்த்து திருப்தி அடைந்தார்.
அதே நாற்காலியும் மேசையும் அனைத்து பண்டிகை நாட்களிலும் உபயோகப்படுத்தப்பட்டதைப் பார்த்து நாங்கள் மிகவும் பூரித்தோம்.
தசரா முடிந்து நாங்கள் விடைபெற்றுக் கொள்ளும் நாளன்று, சுவாமி எங்களை அழைத்தார். அவர், " நீங்கள் இருவரும் இந்த பத்து நாட்களும் இங்கே தங்கி விட்டீர்கள். இனி நீங்கள் புறப்பட்டுச் சென்று, அடுத்து பிறந்தநாளுக்கு வாருங்கள்! உங்களது மேசையும் நாற்காலியும் மிகவும் சவுகரியமாகவும் உபயோகமாகவும் இருந்தன! உங்கள் இருவருக்கும் பிரசாதம் அளிக்கிறேன்!" என்று கூறிக்கொண்டே ,விபூதி பொட்டலங்கள் அடங்கிய ஒரு உறையை சுவாமி தேசிகாச்சாரிக்கு அளித்தார். எனக்கென்று தனியாக சுவாமி பிரசாதம் அளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். மேலும் அவருக்கு அளித்ததைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை! ஆகவே நான் உடனே சுவாமியிடம், "சுவாமி! எனக்கு சிறிது அதிகமான பொட்டலங்களை அளியுங்கள்! ஏனெனில் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் கொண்டு வருவதாக நான் வாக்குறுதி அளித்து விட்டேன்!" என்றேன்! சுவாமி சிரித்துக் கொண்டே, "ஆமாம் ஆமாம்! உனக்கு தனியாக தருகிறேன்!" என்றார்! அந்த நேரத்தில் அவருக்கு பின்புறம் நான் இருந்தேன். அவர் மற்றொரு உறையை எடுத்து அதில் விபூதி பொட்டலங்களை நிரப்பி, என் கைகளில் வைத்தார்! நாங்கள் இருவரும் எங்களது பிரசாத உறைகளை எங்கள் பாக்கெட்டுகளில் திணித்துக் கொண்டு, சுவாமிக்கு பாத நமஸ்காரம் செய்துவிட்டு உடனே அவசரமாக வெளியேறினோம்! அவர், மேசை மற்றும் நாற்காலியின் விலையை எங்களிடம் கேட்டுவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தி விடக்கூடாது என்பதே எங்களது அவசரத்திற்கான காரணம்!!
நாங்கள் இருவரும் எங்களது அறைக்கு சென்று உடைமைகளைப் பைகளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது என் நண்பர் திடீரென்று, " எனது உறையில் விபூதி பொட்டலங்களுடன் பாபா ஒரு தொகையையும் வைத்துள்ளார்!" என்று ஆச்சரியத்துடன் கூறினார்! உடனே நான் என் உறையைத் திறந்து பார்த்தேன்! அவரதுஉறையில் ரூ.230- ம், என் உறையில் ரூ. 120-ம் வைக்கப்பட்டிருந்தன!! எங்களை அழைப்பதற்கு முன்னரே பணத்தை உறைகளுக்குள் வைத்து விட்டாரா அல்லது அவை தானாகவே உறைகளுக்குள் உதித்து விட்டனவா என்ற புதிருக்கு என்னிடம் விடை இல்லை!!
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய " லவ் இஸ் மை ஃபார்ம் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 411:
கோடை விடுமுறை கழிந்து 16.06.1963 அன்று நான் வேத பாடசாலைக்குத் திரும்பினேன். மாணவர்கள் அனைவரும் அதிகாலையில் ஐந்து மணிக்குத் துயில் எழுந்து விடுவோம்; பிறகு பிரசாந்தி மந்திரத்தை வலம் வருவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வேதத்தை ஓதிக் கொண்டும் மற்றவர்கள் பஜனை செய்து கொண்டும் செல்வோம். பிறகு நாங்கள் அனைவரும் சித்திராவதி நதிக்கு சென்று நீராடுவோம். அடுத்து,பாடசாலையில் 6:30 மணிக்கு சந்தியா வந்தனம் செய்வோம். இந்த பழக்கங்களை இடைவிடாது நாங்கள் கடைப்பிடித்தோம். ஒருமுறை நாங்கள் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தபோது சுவாமி அங்கே வந்தார். அப்போது அவர், "வானத்தில் உள்ள, உங்கள் கண்களுக்கு புலப்படக்கூடிய சூரிய பகவானே இந்த பூவுலகிற்கு இறங்கி வந்துள்ளார்! ஆகவே உங்களது அர்க்கியங்களை (சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்கப்படும் நீர்) எனக்கு அளியுங்கள்!" என்று கூறி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேருண்மையை எங்களிடம் வெளிப்படுத்தினார்! இத்தகைய மாபெரும் உண்மையை பகவானின் திருவாயிலிருந்து கேட்பதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று நினைக்கும் போது நான் மிகவும் பூரிப்படைகிறேன் !
ஆதாரம்: 1962 முதல் 1972 வரை புட்டபர்த்தியில் இயங்கி வந்த வேத பாடசாலையின் முதல் மாணவராக சேரும் அரிய வாய்ப்பினைப் பெற்ற திரு. பொன்னூரு வேங்கட பாரத்வாஜா அவர்கள் எழுதிய "My journey with Swami (சுவாமியுடன் எனது பயணம்)" என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிவிலிருந்து.
📝 நிகழ்வு 412:
1965 - சுவாமி எங்களுக்கு பாத நமஸ்காரம், விபூதி பிரசாதம், மற்றும் பிரயாணத்திற்கான பணம் ஆகியவற்றை அளித்து, கோடை விடுமுறைக்காக எங்கள் வீடுகளுக்கு அனுப்பினார். குறிப்பிட்ட அந்த வருடம் மட்டும் என்னை அழைத்துச் செல்ல என் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. ஆகவே நான் மட்டும் தனியாக எனது பெட்டியுடன் முதலில் தர்மாவரம் இரயில் நிலையம் சென்றடைந்தேன். இரயில் வரும் நேரம் எனக்குத் தெரியாததால் நான் பயண சீட்டு கவுண்டரை அணுகினேன். ஆனால் மதியம் மூன்று மணிக்குத் தான் திறப்பார்கள் என்று தெரியவந்தது. ஆகவே நான் அருகில் இருந்த இரயில்வே உணவகத்திற்கு முன்னால் அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து என்னை ஏற்கனவே அறிந்தவரை போல ஒருவர், என்னிடம் "நீ எங்கே செல்கிறாய்?" என்று கேட்டார். நான் குண்டூருக்குப் பயணம் செய்யவிருப்பதாகக் கூறியவுடன், அவர் தானும் அங்கே செல்ல இருப்பதாகக் கூறினார்! உடனே அவர், எனக்கும் சேர்த்து பயணச்சீட்டு வாங்கி வருவதாகக் கூறி, என்னிடமிருந்து இருபது ரூபாய் பெற்றுக் கொண்டார். பிறகு அவரது பையினை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்! ஆனால் ஒரு மணி நேரம் கழித்தும் அவர் வரவில்லை! அப்போது இரயில் வருவதற்கான மணி ஒலித்தது; ஆனால் அது வரவில்லை! இரயில் நிலைய தலைமை அலுவலர் ,எனது இரயில் வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆவதாக என்னிடம் கூறினார். அப்போது உணவக மேலாளர் என்னிடம், "உன்னிடம் பணம் பெற்றவர் உன் சொந்தக்காரரா?" என்று கேட்டார்! அதற்கு நான், "இல்லை!" என்று பதிலளித்தேன்.
அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்திருப்பார்கள் போலும்! உடனே ரயில்வே காவலர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த பல குற்றவாளிகளின் படங்களை எனக்கு காண்பித்தனர். அவற்றை பார்த்த பின்னர் என்னை ஏமாற்றியவனை நான் அடையாளம் காட்ட முடிந்தது. உடனே ஒருவர் என்னை அவரது மிதிவண்டியில் அமர வைத்து தர்மாவரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதையில் சென்று கொண்டே அவனைத் தேடிச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக பீடி ஒன்றை புகைத்துக் கொண்டே ஒரு உணவகத்தில் இருந்து அவன் வெளியே வருவதை நான் பார்த்தவுடன் காவலருக்கு உடனே தெரிவித்தேன்! எங்களுடன் வந்த மற்ற காவலர்கள் அவனை உடனே பிடித்து அவனது கைகளைக் கயிற்றால் கட்டினர்! பிறகு இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து, என்னை ஏய்த்ததற்காக அவனை கண்டித்து ஏசினர்! அவனிடம் 6 ரூபாய் மட்டுமே மிஞ்சி இருந்ததாக அவன் கூறிய பின் காவலர்கள் அவனை அடித்து, அந்தப் பணத்தை எனக்குப் பெற்று தந்தனர். பிறகு என்னிடம் வாக்குமூலம் வாங்கிக் கொண்ட காவலர்கள், அவனைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டனர்
சிறிது நேரத்தில் இரயில் வந்தவுடன், உணவகப் பணியாளர்கள், அந்த இரயிலின் கார்டு அவர்களிடம் சென்று எனது நிலைமையை விளக்கிக் கூறினர். என்னிடம் போதிய பணம் இல்லாததால் அவரது பெட்டியிலேயே அமர வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு ஒரு வழியாக மறுநாள் மதியம் 2 மணிக்கு நான் குண்டூர் சென்றடைந்தேன். அங்கிருந்து நான் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே சென்று அங்கிருந்து 50 பைசா கொடுத்து பேருந்தில் பயணித்து என் ஊரான பொன்னுரை அடைந்தேன்!
விடுமுறை நாட்கள் கழிந்த பின்னர் நான் வேத பாடசாலையை வந்து அடைந்தபோது, சுவாமி என்னிடம், " உனது ஊருக்கான பயணம் எப்படி இருந்தது?" என்று கேட்டார்! நான் சுவாமியை வணங்கிவிட்டு நடந்தவற்றை முழுமையாக விவரித்தேன். அப்போது சுவாமி என்னிடம், 'உனது இரயில் மிகவும் தாமதமாக வருவதற்கு நான் தான் காரணம்! நான் தான் நீ ரயிலில் எந்த இடையூறும் இல்லாமல் ஏறி பயணம் செய்ய ஆவன செய்தேன்!!" என்றார்!!!
ஆதாரம்: திரு. பொன்னூரு வேங்கட பாரத்வாஜா அவர்கள் எழுதிய "My journey with Swami (சுவாமியுடன் எனது பயணம்)" என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிவிலிருந்து.
📝 நிகழ்வு 413:
1963- ஜந்தியால பௌர்ணமி நாளன்று (ஆவணி அவிட்டம்) மதியம் நான் வேத பாடசாலையில் சமஸ்கிருதம் பயின்று கொண்டிருந்தேன். அப்போது மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வீரம் ஷேதி என்பவர் என்னை கூப்பிட்டு சுவாமி என்னை மந்திரத்திற்கு வருமாறு அழைப்பதாகக் கூறினார். ஆகவே நான் உடனே மந்திரத்திற்கு விரைந்து சுவாமி வசிக்கும் மாடி அறைக்கு சென்றேன். அப்போது சுவாமி தன் கால்களை நீட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டு இருந்தார். நான், " சுவாமி! நான் வந்து விட்டேன்!" என்றேன். உடனே சுவாமி, "நீ எதற்காக வந்தாய்?" என்றார்! நான் உடனே, "சுவாமி! நீங்கள் என்னை அழைப்பதாக திரு. வீரம் ஷேதி கூறினார்!" என்றேன். அதற்கு சுவாமி, "வீரம் ஷேதி கூப்பிட்டாரா? அப்படி என்றால் அவரிடமே போ!" என்றார்!! என்ன செய்வதென்று அறியாமல் நான் திகைத்தேன். எனக்கு அழுகை வந்துவிட்டது. அங்கே அழுது கொண்டே நின்றேன்! அதனைப் பார்த்து மனம் இறங்கிய சுவாமி, என்னை சமாதானப்படுத்தும் வகையில், "துன்னபோதா! இங்கே வா! என் அருகில் உட்கார்!" என்றார்! நான் சுவாமியின் பாதகமலங்களின் அருகில் அமர்ந்தேன். அவருக்கு பாத சேவை செய்யும் பாக்கியத்தை அவர் எனக்கு அளித்தார். அவரது பாதகமலங்களை மசாஜ் செய்து கொண்டிருந்தபோது, நான் என் சேவையை செவ்வனே செய்வதற்கு ஏதுவாக, சுவாமியின் அங்கியையும் வேஷ்டியையும் சற்றே விலக்கினேன். அப்போது எனக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. நம் சுவாமி தான் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆகையால், அவரது பாதகமலங்களில் சங்கையும் சக்கரத்தையும் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என முயற்சித்தேன்! ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. பத்து நிமிடங்களாக வெற்றி கிட்டாத என் தேடல் முயற்சியை கவனித்த சுவாமி, என் தலையில் அன்புடன் இலேசாகத் தட்டி, " சங்கையும் சக்கரத்தையும் அவ்வளவு எளிதாக பார்த்து விடலாம் என நினைத்தாயோ? அதற்கு ஞானக்கண்கள் தேவை! மேலும் அவற்றை தரிசிப்பதற்கு பல நற்காரியங்கள் புரிந்து இருக்க வேண்டும்!" என்றார்!! நான் முயற்சியாவது செய்தேன் என்று எனக்குள் திருப்திப்பட்டு கொண்டேன். அதே சமயத்தில், அதற்கு தேவையான ஆன்மீக நிலையை நான் அடையவில்லை என்ற உண்மையையும் அறிந்து கொண்டேன்!
ஆனால், அந்த அனுபவத்தை என்றும் நினைவில் வைத்து, தியானத்தில் திளைத்து இருப்பதையே எனது இன்றைய கடமையாகக் கருதுகிறேன்!
ஆதாரம்: திரு. பொன்னூரு வேங்கட பாரத்வாஜா அவர்கள் எழுதிய "My journey with Swami (சுவாமியுடன் எனது பயணம்)" என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிவிலிருந்து.
📝 நிகழ்வு 414:
12.11.1966 அன்று கார்த்திகை மாதத்தில் (தெலுங்கு பஞ்சாங்கத்தின் அடிப்படையில்) ஜாம்நகர் ராஜமாதா அவர்கள் சத்யநாராயண சுவாமி விரதம் அனுசரிக்க விரும்பினார். ஆகவே அவர் சுவாமியின் அனுமதியை வேண்டினார். மேலும் சுவாமியையும் அந்த நிகழ்ச்சிக்கு அவர் வரவேற்றார். சுவாமியும், "பங்காரு! நான் கண்டிப்பாக விரதத்திற்கு வருகிறேன்!" என்று கூறினார். அப்போது ராஜமாதா அவர்கள் டாக்டர்.ராமகிருஷ்ண ராவ் அவர்களின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். மேலும் அவர் சுவாமியிடம், " சுவாமி! அந்த பூஜையை செய்வதற்கு எனக்கு ஒரு பூசாரி தேவை. நீங்கள்தான் தயவுசெய்து எனக்கு வழிகாட்ட வேண்டும்" என்று கேட்டார். சுவாமி உடனே திரு. வி.பத்மநாப சாஸ்திரி அவர்களை அழைத்து, அவருடன் மேலும் 5 பாடசாலை மாணவர்களையும் கூட்டிக்கொண்டு சென்று அந்த பூஜையை செய்யும் படி பணித்தார். சுவாமியின் கட்டளைக்கு இணங்க அவரும் சாஸ்திர நூல்களில் விதிக்கப்பட்ட வண்ணம் பூஜையை மேலே குறிப்பிட்ட நாளில் செய்தார். ராஜமாதா அவர்களுக்கு தெலுங்கு மொழி தெரியாது; ஆகையால் சாஸ்திரிகள் தெலுங்கில் கூறுவனவற்றை ஹிந்தியில் மொழி பெயர்த்து ராஜ மாதா அவர்களுக்கு சொல்லுமாறு சுவாமி பெத்த பொட்டு அம்மையாரிடம் கூறினார். பூஜையின் முடிவில் மதியம் 1:45 மணிக்கு மிகுந்த பிரகாசத்துடனும் கம்பீரமான புன்னகையுடனும் சுவாமி அங்கு வந்தார். அங்கு குழுமியிருந்த பக்தர்கள் சுவாமியின் இந்த தோற்றத்தைப் பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தனர். சுவாமி அங்கு வந்தவுடன், ஆவலுடன் காத்திருந்த ராஜமாதா சுவாமிக்கு மாலை இட்டு வரவேற்றார். இவ்வாறு தனது வேண்டுதலையும் அவர் நிறைவேற்றிக் கொண்டார். அப்போது சுவாமி மிகவும் முக்கியமான, ஆழ்ந்த பொருள் பதிந்த ஒரு உண்மையை வெளிப்படுத்தினார்! "இப்போது கடவுள் சத்யநாராயணாவே தான் உங்களுக்கு தரிசனம் அளித்து கொண்டிருக்கிறார்! இந்த சத்ய சாயி தான் அந்த சத்ய நாராயணா ஆவார்!! இதுதான் உண்மை!!! சிலையை வழிபடுவது நமது மரபு; ஆனால் நான் உங்கள் அனைவருக்கும் ஒரு உண்மையை கூறுகிறேன். இங்கு இருப்பவர்கள் அனைவரும் மிகவும் கவனமாக கேளுங்கள்! தினமும் பொய்களையே உரைத்துக் கொண்டு அதே சமயம் சத்யநாராயண பூஜை செய்வதனால் எந்த வித பலனும் இல்லை! அவ்வாறு வழிபடுபவர்கள் யாராக இருப்பினும் சரி, இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! இப்போது கடவுள் சத்யநாராயணாவே உங்கள் முன்னால் நின்று கொண்டு உங்களது பூஜையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்!!" என்று கூறினார்! பிறகு பூஜையில் பங்கேற்ற ராஜ மாதா, அவரது குடும்பத்தினர், திரு பத்மநாப சாஸ்திரி மற்றும் வேத பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு சுவாமி தனது ஆசிகளை வழங்கினார். சுவாமியே தன் கையினால் எங்கள் அனைவருக்கும் தீர்த்தம் அளித்து பாத நமஸ்காரம் செய்து கொள்ளவும் அனுமதித்தார். அப்போது நான் சுவாமியின் பாதரக்ஷைகளை என் கைகளில் பக்தியுடன் பற்றி கொண்டிருந்தேன்! ஏனெனில் இத்தகைய வாய்ப்பு மறுபடியும் எதிர்காலத்தில் கிடைக்குமோ என்ற ஒரு ஐயம் இருந்தது. இதனை கவனித்த சுவாமி, தான் தீர்த்தமளிப்பதில் மும்மரமாக இருந்த போதிலும், என்னை நோக்கி, " ஏய், துன்னபோதா! நான் தீர்த்தம் அளிக்கும் போதாவது நீ பாதரக்ஷைகளை விட்டுவிட்டு வந்து, தீர்த்தம் வாங்கிக் கொள்ள மாட்டாயா?" என்றார்! உடனே நான் சுவாமியிடம் ஓடிச்சென்றேன்; அவரும் எனக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை அளித்தார்.
ஆதாரம்: திரு. பொன்னூரு வேங்கட பாரத்வாஜா அவர்கள் எழுதிய "My journey with Swami (சுவாமியுடன் எனது பயணம்)" என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிவிலிருந்து.
📝 நிகழ்வு 415:
திரு கே.ஆர்.கே. பட் அவர்களின் குடும்பத்தினர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியையே குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். அவர் இன்சூரன்ஸ் துறையில் உயர்பதவி வகித்ததால் வேலையில் மும்முரமாக இருந்தார். ஆகவே அவரது இளம் மனைவியே வீட்டில் முறையாக சுப்பிரமணிய பூஜையை செய்து வந்தார். 1943-ல் திருமதி. பட் அவர்கள் கர்ப்பப் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தாலும் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. அப்போது திரு. பட் அவர்களின் தாயார் வீட்டில் இருந்தார். அவர் தனது மகனிடம்," சுப்பிரமணிய சுவாமி தான் உன் தந்தையை, அறுவை சிகிச்சை இன்றி புற்றுநோயிலிருந்து காப்பாற்றினார்! அதேபோல அந்தக் கடவுள் உன் மனைவியையும் காப்பாற்றுவார்!" என்று ஆணித்தரமான நம்பிக்கையுடன் கூறினார். தாயின் சொற்களுக்கு மதிப்பளித்து தம்பதியினர் அறுவை சிகிச்சையை புறக்கணித்தனர்! இறைவன் முருகனிடத்திலேயே தங்களை ஒப்படைத்து விட்டனர்! முருக வழிபாடுகள் அதிகமாகின; வழிபாட்டிற்கு நேரம் அதிகம் செலவழித்தனர்; தற்போது பூஜைகளைத் தாயார் ஏற்று செய்ய ஆரம்பித்தார்- ஏனெனில் மருமகள் உடல் மெலிய ஆரம்பித்து வலிமையற்று படுக்கையில் இருந்தார்! இவ்வாறு ஆறு மாதங்கள் கழிந்தன; பிறகு ஓர் இரவு, அரைத் தூக்கத்தில் இருந்தபோது, அறையில் சந்திரனின் மெல்லிய வெளிச்சத்தில், தனது படுக்கையை ஒரு பெரிய நாகம் சுற்றி வருவதை நோயாளியான திருமதி. பட் பார்த்து, பயந்து போனார். உடனே பக்கத்தில் இருந்த மேசை-மின் விளக்கைப் போட்டுவிட்டு அதே அறையில் படுத்து கொண்டிருந்த தனது மாமியாரையும் எழுப்பினார். (அப்போது கணவர் வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்தார்) ஆனால் எந்த ஒரு பாம்பும் அங்கே தென்படவில்லை! ஆயினும் விளக்கை அணைத்தவுடன் திரும்பவும் அதே காட்சி தோன்றியது! உடனே அந்த பாம்பு சுப்பிரமணியரின் உருவத்தை எடுத்து நின்றது! வீட்டில் இருந்த போட்டோவில் காணப்பட்ட அதே உருவம்! தனக்கு மேல் முருகன் மிதந்து கொண்டிருப்பதைப் போல ஒரு காட்சி! அவர் தனது வேலாயுதத்தால் திருமதி. பட் அவர்களின் இதயத்தில் குத்தி அவரை தன்னுடன் அழைத்துச் செல்கிறார்! சில நொடிகளில் ஒரு பெரிய கல்லால் ஆன குன்றின் மீது முருகனுக்கு எதிரில் தான் நிற்பதாக உணர்கிறார்! அந்தப் பெண்மணி முருகனின் பாதங்களில் மண்டியிட்டு வணங்கிய பின்னர் முருகன் அவருடன் பேச ஆரம்பிக்கிறார்! அந்தப் பெண்மணியிடம், " நீ என்னுடன் இருக்க விரும்புகிறாயா அல்லது உலகத்திற்கு திரும்ப விழைகிறாயா ? "என்று கேட்கிறார்! தனது கணவன் குழந்தைகளை எண்ணிப் பார்த்த அவர், தான் திரும்பிப் போக விரும்புவதாக பதில் அளிக்கிறார்! மேலும் சில நிமிட உரையாடல்களுக்குப் பிறகு முருகன் இவரிடம், " நீ உனது நோயிலிருந்து இப்போது முற்றிலும் குணமடையப்பெற்றாய்!! மீண்டும் பலம் பெறுவாய்!! உன் வாழ்நாள் முழுவதும் நான் உன்னைக் காப்பேன்!! நீ என்னை நினைக்கும் போதெல்லாம் நான் அங்கு இருப்பேன்!! இப்போது நீ போகலாம்!!" என்கிறார்!! அதற்கு அவர், " எப்படி?" என்று கேட்கிறார்! அப்போது அவரது கால்களுக்கு அருகே தோன்றிய நீளமான குறுகலான வளைந்து சென்ற படிக்கட்டை காண்பிக்கிறார் சுப்பிரமணியசுவாமி!! அவ்வழியே அவர் இறங்க ஆரம்பித்த உடனேயே தனது விழிப்புணர்வில் ஒரு தடங்கல் ஏற்படுகிறது!! திடீரென்று அவர் தன்னுடைய அறையில் தன் படுக்கையில் இருப்பதை உணர்கிறார்!
உடனே தனது மாமியாரை எழுப்பி தனக்கு ஏற்பட்ட காட்சிகள் அடங்கிய அனுபவத்தை விவரித்தார். பின்னர், ஊரிலிருந்து திரும்பிய கணவரிடம் தெரிவித்தார்.
ஆனால் இந்த அனுபவத்தை அவர்கள் வேறு யாரிடமும் கூறவில்லை.
அன்றிலிருந்து உடல் நிலையில் அவருக்கு முன்னேற்றம் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோயின் அறிகுறியே இல்லாமல் போயிற்று!!
20 வருடங்கள் கழித்து இந்த தம்பதியினர் புட்டபர்த்தி வந்தனர். சுவாமி திருமதி. பட் அவர்களிடம், " நான் 20 வருடங்களுக்கு முன்னர் உன்னிடம் பேசி உள்ளேன்!" என்றார்! ஒன்றும் புரியாத அந்த பெண்மணி, " இல்லை, சுவாமிஜி! இதுதான் என்னுடைய முதல் வருகை!" என்றார்! இதற்கு சுவாமி, "ஆமாம், ஆமாம்! ஆனால் நீ மைசூரில் இருந்த போது நான் உன்னிடம் வந்தேன்!" என்றார்! புற்றுநோய் வந்த போது அவர் வசித்த ஊர், தெரு ஆகியவற்றை சுவாமி அவரிடம் கூறினார்! பிறகு இன்டர்வியூ அறைக்கு அருகில் இருந்த, (சுவாமியினுடைய அறைக்கு செல்லும்) வளைந்து செல்லும் குறுகலான மாடிப்படிகளில் அவரை அழைத்துச் சென்ற சுவாமி மேலிருந்து அவரை கீழே பார்க்குமாறு கூறினார். உடனே அவருக்கு அந்த வினோத காட்சிகள் ஞாபகத்திற்கு வந்தன!! அப்போது முருகனால் காண்பிக்கப்பட்ட படிகளும் இப்போது தான் பார்க்கும் படிகளும் ஒரே மாதிரியாக இருந்தன! முருகனின் தேரில், தன்னை சுற்றி படர்ந்த நாகத்துடன் தான் இருப்பதைப் போல ஒரு படத்தை சுவாமி ச்ரிஷ்டித்தார்! இப்போது அந்தப் பெண்மணிக்கு அனைத்தும் புலனாயிற்று!! 20 வருடங்களுக்கு முன்னால் தனக்கு காட்சி அளித்த முருகன் தான் இப்போது தன் முன்னால் நிற்கும் சத்யசாய் பாபா என்பதை பூரணமாக உணர்ந்தார்! சுவாமியின் கால்களில் விழுந்து தன் ஆனந்த கண்ணீரினால் அவரது பொற்பாதங்களை நனைத்தார் !!
ஆதாரம்: ஹோவர்ட் மர்ஃபெட் அவர்கள் எழுதிய "மேன் ஆஃப் மிரகிள்ஸ்" என்ற புத்தகத்தில் இருந்து.
தீர்த்தம் வாங்கிக் கொள்ள மாட்டாயா?" என்றார்! உடனே நான் சுவாமியிடம் ஓடிச்சென்றேன்; அவரும் எனக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை அளித்தார்.
ஆதாரம்: திரு. பொன்னூரு வேங்கட பாரத்வாஜா அவர்கள் எழுதிய "My journey with Swami (சுவாமியுடன் எனது பயணம்)" என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிவிலிருந்து.
📝 நிகழ்வு 416:
சுவாமி, " ராதா பக்தி", " சதி சக்குபாய்" என்ற நாடகங்களை எழுதி, வேத பாடசாலை மாணவர்களாகிய எங்களை நடிக்க வைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் - சுவாமி தனது பக்தரான இந்திரா தேவியை அழைத்தார். எங்களது நாடகத்தைப் பற்றி அவருக்கு ஆங்கிலத்தில் விவரிக்கும்படி சுவாமி திரு.கஸ்தூரி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்போது திடீரென்று சுவாமி ஒரு வைர மோதிரத்தை இந்திரா தேவி அவர்களுக்காக சிருஷ்டித்தார். உடனே அவர், " சுவாமி! கடந்த 20 வருடங்களாக நான் எந்த அணிகலன்களையும் அணிவதில்லை" என்று கூறி அதனை வாங்க மறுத்துவிட்டார்! உடனே சுவாமி அந்த மோதிரத்தை மறைந்து போகச் செய்த பின்னர், உனக்கு வேறு ஒரு அன்பளிப்பை தருகிறேன் என்று கூறியபடி நீலக்கல் பொருத்தப்பட்ட ஒரு மோதிரத்தை வரவழைத்தார்! அதனை அவரிடம் அளித்தபடியே, " நீ விரும்பும் போதெல்லாம் இதில் என் தரிசனத்தை பெறலாம்! உன்னால் மட்டுமே என்னை பார்க்க முடியும்! வேறு யாராலும் முடியாது! நீ மோதிரத்தின் உள்ளே பார்க்கும் சமயத்தில், நான் இந்தியாவில் அந்த நேரத்தில் எங்கு, எப்படி இருக்கிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் ஆகியவற்றை அப்படியே உன்னால் பார்க்க முடியும்! உன்னால் அடிக்கடி புட்டபர்த்திக்கு வர இயலாது! ஆகவே இது உனக்கு உதவியாக இருக்கும்! இதனை சுவாமியின் பிரசாதமாக வாங்கிக்கொள்!" என்றார்! அப்போது இந்திரா தேவி அம்மையார், " மெக்சிகோவில் எங்கோ தொலைவில் உள்ள டிகேட் என்ற கிராமத்தில் நான் ஒரு வீடு கட்டி உள்ளேன். இங்கே சாயி பக்தர்கள் நாங்கள் எங்கள் ஆன்மீக சாதனைகளை பயிற்சி செய்து வருகின்றோம். ஆகவே அங்கு பக்தர்கள் கேட்கும்போதெல்லாம் கொடுப்பதற்கு வசதியாக, சுவாமி, எனக்கு விபூதி நிரம்பிய ஒரு அட்சய பாத்திரத்தை கொடுக்க வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்! உடனே சுவாமி, வெள்ளியினால் ஆன, மூடியுடன் கூடிய ஒரு சிறிய டப்பியை தனது கை அசைவின் மூலம் வரவழைத்தார்! பிறகு மூடியின் மேல் தன் கையினால் தட்டினார்! பிறகு அதனை அவரிடம் கொடுத்து, " இதுதான், எடுக்க எடுக்கக் குறையாத தன்மையுடைய விபூதிப் பெட்டகம்!" என்று கூறினார்! உடனே அவர் , "சுவாமி! இது எந்த வியாதியை வேண்டுமானாலும் குணப்படுத்துமா?" என்று கேட்டார்! அதற்கு சுவாமி, "முற்பிறவியில் செய்த தீய வினைகளால் தற்போது கிடைத்துள்ள நோய்களைத் தவிர மற்ற அனைத்து நோய்களையும் இது கண்டிப்பாக குணப்படுத்தும்!" என்றார்! உடனே இந்திரா தேவி அவர்கள், "அப்படி என்றால், அனைத்து நோயாளிகளையும் இது குணப்படுத்தாது?" என்றார்! அதற்கு சுவாமி, (முற்பிறவியின் தீய செயல்களால் ஏற்படும்) கிரகங்களின் தாக்கங்களினால் துன்பப்படுபவர்கள், அந்த துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும்! ஆயினும், யார் யார் சுவாமியின் பூரண அனுக்கிரகத்திற்குப் பாத்திரர்கள் ஆகின்றார்களோ அவர்களை எந்த கிரகமும் பீடிக்க இயலாது! ஆகவே ஆன்மீக சாதனைகளை இடைவிடாது செய்து சுவாமியின் அருளைப் பெற முயற்சி செய்தல் அவசியம்!!" என்று அறை கூவினார்!!
இந்திரா தேவியை ஒரு கருவியாக பயன்படுத்தி, அவரின் மூலம் எங்கள் அனைவருக்கும் சுவாமி ஒரு மகத்தான உண்மையை எங்களுக்கு போதித்தார். இத்துடன் அன்றைய நிகழ்வு முடிவுற்றது.
ஆதாரம்: திரு. பொன்னூரு வேங்கட பாரத்வாஜா அவர்கள் எழுதிய "My journey with Swami (சுவாமியுடன் எனது பயணம்)" என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிவிலிருந்து.
📝 நிகழ்வு 417:
செப்டம்பர் 1962 ல் ஒருநாள் - திரு. வி. டி. பிரசாத ராவ் அவர்களுக்கு, நான் அன்று இரவு புட்டபர்த்திக்கு புறப்படுகிறேன் என்ற செய்தி எப்படியோ தெரிய வந்தது. அவர் உடனே என் அலுவலகத்திற்கு போன் செய்தார். திரு புர்குல ராமகிருஷ்ண ராவ் அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவர் சுவாமிக்கு அளிக்கும் அவசரக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதனை மறுநாள் காலையிலேயே சுவாமியிடம் அளிக்கும்படியும் என்னை கேட்டுக் கொண்டார். நானும் அன்று மாலை அவரது வீட்டிற்குச் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு அவரிடமிருந்து கடிதத்தைப் பெற்றேன். நான் பெங்களூரு விரைவு ரயில் ஏறி தர்மாவரத்திற்கு மறுநாள் காலை 3 மணிக்கு வந்தடைந்தேன். பிறகு 5 மணிக்கு பேருந்தில் ஏறி புட்டப்பர்த்திக்கு வந்து சேர்ந்தேன்
சரியாக 8 மணிக்கு நான் கையில் கடிதத்துடன் தரிசன வரிசைகளின் பின்னால் நின்று கொண்டிருந்தேன். சுவாமி தரிசனத்திற்காக வெளியே வந்த பின்னர் என்னைப் பார்த்தவுடன், என் அருகில் வந்து என் கையில் இருந்த கடிதத்தை வாங்கிக் கொண்டார். பிறகு மிகவும் சீரியஸாக," ஆகவே, நீ சுவர்க்கத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்துள்ளாய்! நீ எப்போது சுவர்க்கத்திற்கு சென்றாய்?" என்று கேட்டார்! உடனே எனக்கு தூக்கி வாரி போட்டது! நான்தான் உயிருடன் இருக்கிறேனே, நான் எப்படி சொர்க்கத்திற்கு சென்றிருக்க முடியும்?! சுவாமி மேலும் அதே கடுமையான தோற்றத்துடன், " புர்குல ராமகிருஷ்ணராவ், எங்கே இந்த கடிதத்தை உன்னிடம் அளித்தார்?" என்று கேட்டார்! அதற்கு நான், "ஹைதராபாத், சுவாமி!" என்றேன்! மெதுவாக என்னிடமிருந்து தன் தலையைத் திருப்பிக் கொண்டே, "அவர் சொர்க்கத்திற்கு செல்லவில்லையா?" என்றார்! ஒன்றும் புரியாமல் திகைத்த நான், அமைதியாக நின்றேன்! ஒரு சில அடிகள் முன்னே எடுத்து வைத்த பின்னர் என்னை நோக்கி திரும்பியவர், புன்னகைத்துக் கொண்டே, " துன்னபோதா! அவர் நேற்று இரவு சொர்க்கத்தை அடைந்து விட்டார்!" என்றார்!!
பிறகு தான் எனக்கு புரிந்தது -அவர் நேற்று மாலை என்னிடம் கடிதத்தை அளித்துவிட்டு இரவில் இறந்து போயிருக்கிறார் என்று!
ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய "நெக்டர் ஆஃப் லவ் " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 418:
(1960-களின் இறுதியில்) திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவாமியை நம்பாத சிலர் அடங்கிய ஒரு அமைப்பு சுவாமியையும் அவரது அற்புதங்களையும் இகழும் நோக்கத்துடன் ஒரு திட்டம் வகுத்தனர் போலும்! (கூட்டத்தின்) மேடையின் மீது பிறவியில் இருந்தே காது கேளாத மற்றும் ஊமையான ஒரு சிறுவனைக் கொண்டு வந்து நிறுத்தினர்! பிறகு அவனைப் பேச வைக்கும்படி சுவாமிக்கு சவால் விட்டனர்! கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பக்தர்கள் உடனே மேடைக்கு அருகில் வந்து அவர்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டனர்! ஆனால் சுவாமி அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்த சிறுவனை தன் அருகில் அழைத்தார்! அவனை ஒலிபெருக்கியின் முன்னால் நிற்க வைத்து அவனிடம், " அன்பே! உன் பெயர் என்ன என்று சொல்?" என்றார்! உடனே அந்த சிறுவன், " என் பெயர் வெங்கட்டநாராயணா!" என்று கூறினான்! உடனே கைத்தட்டல்களினால் அந்த மைதானமே அதிர்ந்தது! அந்த விஷமிகள் அவமானத்தால் தலை குனிந்து அந்த இடத்திலிருந்து விலகினர்! சுவாமியின் அருளால் அந்த சிறுவன் தனது இரு குறைகளிலிருந்தும் விடுதலை பெற்றான்! மறுநாள் அதிகாலையிலேயே ஏராளமான பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் ஊமைகள், சுவாமி தங்கியிருந்த வீட்டின் வாயிலில் வந்து குவிந்தனர்! ஆனால் இதனை முன்பே அவர் எதிர்பார்த்ததால் அதற்கு முன்னரே அங்கு இருந்து அவர் கிளம்பி விட்டார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 419:
ஓர் இரவு திடீரென்று சுவாமி தன் படுக்கையில் இருந்து எழுந்து, " இதோ! இந்த தாயத்தினைப் பார்! மதராசில் இருக்கும் ஒரு பக்தர் இதனை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறார்! நான் உடனே அங்கு சென்று அவரிடம் இதனை கொடுக்க வேண்டும்!" என்றார்! இந்த இரவு நேரத்தில் சுவாமி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அருகில் இருந்த பக்தர்கள் மிகவும் தீவிரமாக வேண்டினர். சுவாமி உடனே திரு. சேஷகிரி ராவ் அவர்களை அழைத்து, அவரிடம் அந்த தாயத்தினைக் கொடுத்து , காலைப் பொழுது புலரும் வரை அதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கூறினார். அவரும் அதனை துண்டு ஒன்றில் வைத்து தன் இடுப்பில் இறுக்கிக் கட்டிக்கொண்டார்! மறுநாள் காலையில் சுவாமி சேஷகிரி ராவை அழைத்து, அதனைத் திருப்பிக் கொடுக்கும் படி கேட்டார்! அவர் உடனே தன் துண்டை அவிழ்த்துப் பார்க்கையில் அது அங்கே இல்லை எனத் தெரிந்தபின் வாயடைத்து போனார்!! அப்போது சுவாமி சிரித்துக் கொண்டே, "நான் முன்னரே மதராசுக்கு சென்று, அந்த தாயத்தினை அதற்கு உரியவரிடம் சேர்ப்பித்து விட்டேன்!" என்று கூறினார்!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 420:
ஒரு நாள் ஈஸ்வராம்மா அவர்கள் மிகுந்த ஜுரத்துடன் படுக்கையில் கண்கள் மூடியவாறு படுத்துக் கொண்டு நாமஸ்மரணையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று தன் அருகில் யாரோ ஒருவர் இருப்பதைப் போல உணர்ந்தார்! உடனே கண்களைத் திறந்த அவர், தன் கையில் வில்லுடன் சாட்சாத் பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே தன் எதிரில் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியில் ஒரு சில நொடிகள் பேச்சு மூச்சற்றுப் போனார்! தாம் சரியாகத்தான் பார்க்கிறோமா என்ற சந்தேகத்தில் தன் கண்களை துடைத்துக் கொண்டார்! உடனே அவர் எழுந்திருக்க முயற்சித்த போது ராமபிரான் இருந்த இடத்தில் நாம் சுவாமியே காட்சியளித்தார்! அவர் அம்மாவிற்கு விபூதி வரவழைத்துக் கொடுத்து, சிரித்துக் கொண்டே, "கண்டிப்பாக ஜுரம் மறைந்துவிடும்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 421:
1958- ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் சுவாமியும் ஒரு சில பக்தர்களும் இரண்டு கார்களில் வெங்கட கிரியிலிருந்து சேப்ரோல் வழியாக கொவ்வூருக்குப் பயணித்தனர். சுவாமி அன்று மாலையில் இராஜ மகேந்திரவரத்தை அடைவதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் கொவ்வூரையும் இராஜமகேந்திர வரத்தையும் இணைக்கும்படியான சாலை-மற்றும்-ரயில்- பாலம் (road- cum- rail bridge) கட்டப்பட்டிருக்கவில்லை; ரயில் பாலம் மட்டுமே அன்று இருந்தது. ஆகவே ஒரு சில ரயில்கள் தவிர கோதாவரியைக் கடந்து செல்வதற்காக இருந்த ஒரே வசதி மோட்டார் படகு மட்டுமே. அந்தப் படகும் ஓர் இடத்தில் ரயில்வே பாலத்திற்கு அடியில் செல்ல வேண்டும்! ஆனால் சுவாமியின் இந்த பயணத்தன்று கோதாவரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது! அப்போது பாலத்திற்கும் , நீரின் மேல் மட்டத்திற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி மட்டுமே இருந்தது! ஆகவே கொவ்வூரிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் படகு சவாரிகளை அனுமதிக்கவில்லை. அவர்கள் மிகுந்த மரியாதையுடன் தடை உத்தரவினை சுவாமியிடம் தெரிவித்தனர். ஆனால் சுவாமியோ தான் இராஜ மகேந்திரவரத்தை அன்று மாலைக்குள் அடைந்து விட வேண்டும் என்று உறுதியாகக் கூறினார்! ஆகவே அதிகாரிகளும் வேறு வழி இன்றி படகு சவாரிக்குத் தானே பொறுப்பேற்பதாக சுவாமியை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டனர்! சுவாமியும் உடனே அவர்கள் அளித்த காகிதத்தில் 'எங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது' என்று எழுதி கையொப்பம் இட்டுக் கொடுத்தார்! பிறகு சுவாமி தனது குழுவினருடன் படகினை நோக்கி சென்றார் அப்போது சுவாமி காருண்யானந்தா அவர்களும் திரு ராஜா ரெட்டி அவர்களும் சுவாமியுடன் ஒரே படகில் சென்றனர். அவர்கள் மேற்கூறிய பாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்போது படகில் மற்ற பக்தர்கள் அனைவரும் அமைதியாக சுவாமியிடம் மனதில் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தனர்! ஏனெனில் பாலத்தைப் படகு கடக்கும் போது அவர்களது தலைகள் அடி வாங்குமோ என்ற பயம்! அப்போது சுவாமி, படகு ஓட்டுனர் உட்பட அனைவரையும் ஒரு கணப்பொழுது கண்களை மூடிக்கொள்ளும்படி கூறினார்! சுவாமியின் மீது முழு நம்பிக்கையுடன் அவர்களும் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர்! அப்போது திடீரென்று அவர்களது படகு தண்ணீருக்குள் சென்று விட்டது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது! அடுத்த கணம் சுவாமி அனைவரையும் தங்கள் கண்களை திறக்கும் படி கூறினார்! அவர்கள் தங்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, உடலில் ஒரு சிறிய உரசல் கூட ஏற்படாமலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தங்கள் உடைகளின் மேல் படாமலும் தாங்கள் அனைவரும் பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டனர்!! இத்தகைய புல்லரிக்கும் ஒரு அனுபவத்தை பெறுவதற்கு அந்த பக்தர்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலிகளாக இருந்திருக்க வேண்டும்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக