தலைப்பு

வியாழன், 4 ஜனவரி, 2024

351-400 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..





📝 நிகழ்வு 351:

ஒரு நாள் காலை சாயி ரமேஷ் ஹாலில் குழுமியிருந்த பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்காக சுவாமி, த்ரயீ பிருந்தாவனத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பார்த்து, கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோடை வகுப்பிற்கு செல்லுமாறு பணித்தார். சுவாமியின் கட்டளைக்கு அடிபணிந்து அனைவரும் அங்கு சென்றனர். அன்றைய வகுப்புகளும் சிறப்பாக நடந்து முடிந்தன. பிறகு மாலையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் உரையாற்றுவதற்காக  உள்ளே மேடையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த சுவாமி திடீரென ஒரு முதியவரின் முன்னால் நின்றார். அவர் ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார்; அவரிடம் சிரித்துக்கொண்டே ,"இன்று காலை நீ உன் நெற்றியில் ஒரு பிளாஸ்டிக் பொட்டு (திலகம்)

 வைத்திருந்ததை பார்த்தேன்! ஆனால் இப்போது மாலையில் நேர்த்தியான ஒரு குங்குமப் பொட்டுடன் வந்திருக்கிறாய்! ஏன் இந்த வித்தியாசம்?" என்று கேட்டார்!  அதைக் கேட்ட நான் அதிர்ந்து போனேன்! ஏனெனில், அந்த முதியவர் காலையில் சுமார் ஒரு 50 வது வரிசையில் அமர்ந்திருந்ததை நான் அறிவேன்! ஆனால் இந்த கடவுளோ அத்தனை தொலைவில் அமர்ந்திருக்கும் ஒருவரது நெற்றியில் உள்ள பிளாஸ்டிக் பொட்டினை கவனித்திருக்கிறார்! அது மட்டுமல்ல!! மாலையில் அவரிடம் அதைப் பற்றி கேட்டும் விட்டார்!! எனக்கே உரித்தான ஆர்வக்கோளாறின் காரணமாக, "சுவாமி! நீங்கள் எப்படி அந்த சிறிய பொட்டினை கவனித்தீர்கள்?  அவர் வெகு தூரத்தில் அமர்ந்திருந்தார்! எப்படி இது சாத்தியம், சுவாமி? எனக்குப் புரியவில்லை!"என்று சுவாமியிடம் கூறிவிட்டேன்! அதற்கு சுவாமி சிரித்துக்கொண்டே , "யாரும் எனக்கு எதுவும்  சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! அனைத்து நடப்புகளும் என் பார்வைக்கும் கவனத்திற்கும் வந்து கொண்டுதானிருக்கும்! யாரும் எனக்கு சொல்ல வேண்டாம்!" என்று பதில் அளித்தார்!! இது எனக்கு கிடைத்த , சுவாமியைப் பற்றிய ஒரு பெரிய தெளிவாகும் !

ஆதாரம்: திரு. டாக்டர். அனில் குமார் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.


📝 நிகழ்வு 352:

 மூர் என்னும் பெயர் கொண்ட ஒருவன் இங்கே பிரசாந்தி நிலையத்திற்கு வந்து தரிசன வரிசையில் அமர்ந்தான். சுவாமி அவனை அழைத்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார்! அதற்கு அவன், " விபூதி!" என்றான்! உடனே சுவாமி அவன் மீது விபூதியைப் பொழிந்தார்! அவனுக்குள் விபூதியைப் புகுத்தினார் எனச் சொல்லலாம்! இதற்கு காரணம் என்ன? மூர் ஒரு சிறந்த  பாடகனாக இருந்தான்.  பிறகு அவன் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் பணி செய்பவனாகவும் , உணவு பரிமாறுபவனாகவும் பணியாற்றிய பிறகு உதவி மேலாளராக பணி உயர்த்தப்பட்டான்.  தான் ஒரு நாள் மேலாளராக மாறுவோம் என்று எதிர்பார்த்தான்! ஆனால் அது நடக்கவில்லை! ஏனெனில் அவன் ஒரு கருப்பர் இனத்தைச் சார்ந்தவன். ஆனால் அவன் பணி செய்த உணவகமோ ஒரு வெள்ளைக்காரருடையது. அதனால் அவன் மிகவும் வெறுப்படைந்தான். இந்த நிகழ்வு, பொதுவாகவே தனது இனத்தைச் சார்ந்தவர்கள்  அனுபவிக்கும் இன்னல்களை குறித்து அவனை ஆலோசிக்க தூண்டியது. இதன் விளைவாக நாளடைவில் ஒரு கருப்பர் இனக் கூட்டத்தின் தலைவனாக மாறினான். பிறகு ஒரு கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்து கடத்தல்களில் ஈடுபட்டான்! தன் வீட்டின் மாடியில் அந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் வசித்து வந்தான். மூர் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவளைப் பலவாறு துன்புறுத்தி வந்தான். இதனைக் கேள்வியுற்ற மனைவியின் சகோதரன் அவளை தன்னிடம் வந்து ஒரு மாதம் தங்குமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு செவி சாய்த்து அவள் தன்  அண்ணனின் ஊரான கலிபோர்னியாவிற்கு சென்றாள். அங்கே அவள் சுவாமியின் பக்தர்களின் வீட்டில் நடந்த பஜனைகளில் கலந்து கொண்டாள். அங்கே சுவாமியின் படங்கள், மற்றும் சில புத்தகங்களை வாங்கி இருந்தாள்.  அவள் மறுபடியும் தன் கணவன் வீட்டுக்கு வந்த போது அந்த வீட்டில் ஆங்காங்கே சுவாமியின் படங்களை சுவற்றில் மாட்டினாள். மாடியில் ஒரு சிறிய  மேசையை சுற்றி அமர்ந்து. இந்தக் கொள்ளைக் கூட்டத்தினர் திட்டம் போடுவது வழக்கம். அந்த மேசையின் மீது சுவாமியின்  புத்தகத்தை வைத்தாள்! ஒருநாள் அந்த கூட்டத்தினர் ஒரு வங்கியை கொள்ளை அடிப்பதற்காக  ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒருவன் உள்ளே நுழைந்து, " வங்கிக் கொள்ளை நம்மால்  இனிமேல் செய்ய முடியாது! காவல்துறையினருக்கு நமது திட்டம் பற்றிய தகவல் கிடைத்துவிட்டது!" என்றான்! உடனே மூர்   மிகவும் கோபமடைந்தான். எவ்வளவு பக்குவாக ஆராய்ந்து தீட்டிய திட்டம் இப்போது பாழாகிவிட்டதே  என்ற ஏமாற்றத்திலும் கோபத்திலும் தன் கால்களை வெகுவேகமாகத் தரையில் ஊன்றியதில், நிலை தடுமாறி அவன் (தலை கீழ்நோக்கி இருக்கும்படியாக) கீழே விழுந்தான்! அப்போது அவனது தலை அந்த மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த சுவாமியின் புத்தகத்தின் மீது மோதியது! அந்தப் புத்தகத்தையும் அதனுள் இருந்த சுவாமியின் படத்தையும் அப்போது அவன் பார்த்தான்! உடனே அந்த புத்தகத்தைத் தன் கையில் எடுத்தான்! அதன் விளைவு தான் அந்த "விபூதி அனுபவம்"!

 உனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த சுவாமி மேற்கொள்ளும் வழிகளில் ஒன்று தான் 'உன் தலையில் அடித்து ' உணர்த்துவது! 

ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 353:

 எனது இளைய சகோதரி பிரேமா தன் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். ஒருநாள் அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுபவித்த சிரமத்தையும் வேதனையையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அன்று இரவு மருத்துவர்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர். நாங்கள் மிகவும் கவலை மிகுந்த நிலையில் சுவாமியிடம் வேண்டிக் கொண்டிருந்தோம். எங்களைக் கைவிடாமல், எப்படியும் சுவாமி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். சுவாமிக்கு ஒரு தந்தி அனுப்பினோம். இரவு முழுவதும் சுவாமியையே நினைத்துக் கொண்டிருந்தோம். மறுநாள் காலையில் பிரேமாவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. அவரது சுவாசமும் சிறிது எளிதாகத் தெரிந்தது. இது கண்டிப்பாக சுவாமியினுடைய அனுக்கிரகமாகத்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். பத்து நிமிடங்களுக்கு பிறகு பிரேமா, தனக்கு பசியாக இருக்கிறது என்றும் தனக்கு ஏதாவது உணவு கொடுக்குமாறும் கேட்டபோது நாங்கள் பெருமூச்சு விட்டோம். உணவை முடித்த பின்னர் தனக்கு கிடைத்த அனுபவத்தை பிரேமா எங்களிடம் பகிர்ந்தார்:" சுமார் 2 மணி இருக்கும்; அப்போது எனது மூச்சுத் திணறல் என்னால் பொறுக்க முடியாத நிலையை எட்டியது. அப்போது நான் சுவாமியிடம், " சுவாமி என்னால் இதனை பொறுக்க முடியவில்லை! இனிமேல் என்னால் இந்த வேதனையை தாங்க இயலாது! ஆகையால் எனது உயிர் உங்களது பாதகமலங்களை வந்து சேரட்டும்!" என்று முறையிட்டேன். அப்போது ஒரு வினோதம் நிகழ்ந்தது! நான் , எனது மூச்சை உள்ளே இழுப்பதற்கும் வெளியே விடுவதற்கும், எவ்வாறு அவதிப்படுகிறேனோ அதேபோல சுவாமியும் அவதிப்படுவதை என் கண்களால் பார்த்தேன்!! இந்த நிகழ்வு எனது இதய வேதனையை மேலும் அதிகரித்தது. என் கைகளை கூப்பிக்கொண்டு கண்களிலிருந்து நீர் வழிய, சுவாமியிடம், "சுவாமி! தயவு செய்து இவ்வாறு செய்யாதீர்கள்! எனது விதி எனக்கு இட்டுள்ள இன்னல்களை நானே அனுபவித்துக் கொள்கிறேன்! நீங்கள் ஏன் என்னுடன் சேர்ந்து இந்த துன்பத்தை அனுபவிக்கிறீர்கள்? எனது துன்பங்களை நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? வேண்டாம், சுவாமி! நிறுத்திக் கொள்ளுங்கள் சுவாமி!! " என்று கெஞ்சினேன்! ஆனால் சுவாமி நிறுத்தவே இல்லை! பக்தர்களைக் காத்தருளும் அவர் எப்படி நிறுத்துவார்? அவர்தானே நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் ஆவார்! அவர்தான் அன்பின் உருவமாயிற்றே ! அரை மணி நேரத்திற்கு பிறகு நான் என்னை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தேன். விழித்தவுடன், நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். எனது சுவாசமும் எந்தவிதமான தங்கு தடை இன்றி இருப்பதை உணர்ந்தேன். சுவாமியினுடைய அளவிலாத அன்பு தான் இதற்குக் காரணம்! சுவாமியிடமிருந்து நாம் பெற்ற கடனை திருப்பி அளிக்க எந்த விதத்திலும் நம்மால் முடியவே முடியாது! இந்த நிகழ்வை இப்போது நினைத்தால் கூட நான் பூரிப்படைகிறேன்" என்று கூறி முடித்தார். மறுநாள் அவரை வந்து பார்த்த மருத்துவரது முகம், நடந்ததை நம்ப இயலாமல் வெளிரியது!

ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய, " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 354:

ஒரு நாள் ஒரு சிறுவனுக்கு திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவனது பெற்றோர்கள் அவனை சுவாமியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு தங்களது ஊருக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் அவனது வயிற்றுப்போக்கு ஒரு வார காலம் நீடித்தது. மேலும் அவன் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தான். ஆனாலும் சுவாமி அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை! ஆனால் அதே சமயம் சுவாமிக்கு தன் குழந்தைகளின் மேல் இருக்கும் எல்லையற்ற அன்பினை நாம் கவனிக்க முயற்சிப்போம்! அவனது உடல்நலப் பாதுகாப்பு சுவாமியின் பொறுப்பில் தான் இருந்தது! அந்த காலத்தில் கழிப்பறைகள் இல்லாததால் கையில் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சுவாமிதான் அவனுடன் வெளியில் செல்வாராம்! யாருக்கும் அப்போது இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை! இதற்கு முந்தைய யுகத்தில் திரௌபதியின் பாதரட்சைகளை ஸ்ரீ கிருஷ்ணர் தன் கையில் இடுக்கிக் கொள்ளவில்லையா? தனது பக்தர்கள் உணவு உண்டு முடித்த பின்னர் அவர்களது எச்சில் இலைகளை அவர் எடுக்கவில்லையா? கடவுளின் அன்பு அத்தகையது! மறுநாள் இரவில் அந்த சிறுவன் வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டபோது அவனை அந்த அறையை விட்டு வெளியே செல்ல சுவாமி அனுமதிக்கவில்லை! 'என்னால் அடக்க முடியவில்லை' என்று அவன் எவ்வளவோ கெஞ்சியும் சுவாமி கடுமையான குரலில் *'எங்கும் செல்லக்கூடாது, இங்கேயே உட்கார்!'* என்று சொல்லிவிட்டார்!! அவனும் எப்படியோ தனக்கு ஏற்பட்ட உந்துதல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தபோது சுவாமி அவனைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து இருந்தார்! அரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் அவனது வயிற்று வலி முற்றிலும் குறைந்தது!! அவன் உறங்கத் தொடங்கினான்!! அதற்குப் பிறகு அவனுக்கு வயிற்று வலி மறுபடியும் வரவே இல்லை!!! 

ஒருவரை குணப்படுத்துவதற்கு இறைவன் கையாளும் ஒரு புதிய வழிமுறை இதுபோலும்!

ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய, " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 355:

சுவாமி எவ்வாறு "மருத்துவர்களுக்கெல்லாம் பெரிய மருத்துவராக" இருக்கிறார் என்பதை இப்போது நான் (டாக்டர்.ரங்கசாமி வரதாச்சாரி ) விளக்குகிறேன்:

 2001 ஆம் வருடம் டிசம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நாங்கள் நால்வரும் பிரசாந்தி நிலையத்தின் மந்திர் வராந்தாவில் அமர்ந்திருந்த போது இன்டர்வியூ அறையில் இருந்து வெளியே வந்த சுவாமி, நேராக எங்களிடம் வந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தார். முதலில் எங்களின் நலம் குறித்து விசாரித்தார். அப்போது எங்களில் ஒருவர், ஆஸ்துமா நோயின் காரணமாக தன்னால் சரிவர மூச்சு விட முடியவில்லை என்று சுவாமியிடம் கூறினார். சுவாமி உடனே பதக்கத்துடன் கூடிய ஒரு தங்கச் சங்கிலியை அவருக்காக ஸ்ருஷ்டித்தார்; மேலும் அவர், "உனக்கு ஆஸ்துமா இல்லை;மாறாக, ஈசநோஃபிலியா தான்!" எனக் கூறிவிட்டு ஒரு குறிப்பிட்ட மருந்தின் பெயரைக் கூறி அதனை ஒரு வார காலம் தினமும் எடுத்துக் கொள்ளும்படி கூறினார். என் நண்பரும் சுவாமி கூறியபடியே செய்தார். ஒரு வாரம் கழித்த பிறகு அவரது மூச்சுத் திணறல் முழுமையாக மறைந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவரது உடல்நிலை பற்றி அறிய எனக்கு வாய்ப்பு கிட்டியபோது, அவர் தனக்கு அந்த மூச்சு திணறல் திரும்பவும் தலைகாட்டவே இல்லை என்று என்னிடம் தெரிவித்தார். 

யாராவது ஒரு மருத்துவர் சாதாரணமாக இந்த கதையை கேட்டால் அதனை நம்பாமல் இருக்கலாம். ஆனால் சுவாமி எப்போதும் சொல்வது - "எங்கே விஞ்ஞானம் முடிகின்றதோ அங்கே இறைத்தன்மை தொடங்குகிறது" என்ற வாக்கு. இறைவனின் கட்டளையை சிறிதும் பிறழாமல் கடைப்பிடித்தால் அற்புதங்கள் நிகழும் என்பது முற்றிலும் உண்மை.

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 356:

சுவாமி, "அனைத்தும் அறிந்தவர்" என்பதை நிதர்சனப்படுத்துவதற்காக இப்போது மற்றொரு நிகழ்வினை நான் (டாக்டர் ரங்கசாமி வரதாச்சாரி) விவரிக்கிறேன்.

வயது முதிர்ந்த பக்தர் ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்டிருந்த எக்ஸ்ரேயின் வாயிலாக அவரது நுரையீரலில் புண் இருப்பது தெரியவந்தது. அதனை நாங்கள் நிமோனியா என்று முடிவு செய்து அவருக்கு சிகிச்சை அளித்தோம். எதேச்சையாக ஒருநாள் சுவாமி எங்களிடம் அந்த முதியவருக்கு நாங்கள் அளித்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி கேட்டார். நாங்கள் அவருக்கு நிமோனியாவிற்கான சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதாக நான் தெரிவித்தேன். உடனே சுவாமி , "அது நிமோனியா இல்லை, மலேரியா!" என்றார்! நான் அவரது இல்லத்திற்குச் சென்று முன்பு எடுக்கப்பட்டிருந்த எக்ஸ்ரேக்களை மறு பரிசீலனை செய்தேன். சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டிருந்த படங்களிலும் அதே நிழல் (புண்) இருந்தது. சுவாமி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று அப்போது எனக்கு புரிந்தது! ஆறிய புண் போன்று தெரிந்த ஒரு பழைய எக்ஸ்ரேயை வைத்து அவருக்கு நாங்கள் நிமோனியாவிற்கான சிகிச்சை அளித்து வந்துள்ளோம்! உடனே அவருக்கு மலேரியாவிற்கான சிகிச்சை அளித்த பின்னர் அவரது காய்ச்சல் வேகமாக குறைந்தது.

சுவாமிக்கு இது எப்படி தெரிந்தது? நோயாளியைப் பார்க்காமலே அவரால் எப்படி இவ்வளவு துல்லியமாக அவரது நோயை பற்றி கணிக்க முடிந்தது? இதுதான் அவரது 'எல்லாம் அறியும் சக்தி'யின் வெளிப்பாடு!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 357:

நானும் (டாக்டர். எம் சாய்குமார், ஐஏஎஸ்) என் மனைவியும் எங்களுடைய திருமண ஆண்டு விழா அன்று சுந்தரத்திற்கு சென்றோம். அன்று ஹாலில் உள்ள மேடையின் மீது இருக்கும் சுவாமியின் பெரிய படத்தில் விபூதி தோன்றியிருந்தது. சுந்தரத்தில் மற்ற இடங்களில் உள்ள படங்களில் அவ்வப்போது விபூதி தோன்றிக் கொண்டு இருந்தாலும் சுந்தரத்தின் ஹாலில் இருக்கும் அந்த முக்கியமான படத்தில் விபூதி வருவது அதுதான் முதல் தடவையாகும். எனது மனைவி இந்த நிகழ்வை, எங்கள் இருவருக்கும் சுவாமியினுடைய ஆசீர்வாதங்களின் அறிகுறியாகவே எண்ணினாள். அப்போது நான் ஏதோ ஒரு முட்டாள்தனமாக இந்த விபூதி நமக்காகவே தான் என்றால் சுந்தரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நம் வீட்டிலேயே தோன்றியிருக்க வேண்டும் அல்லவா என்று கேட்டுவிட்டேன். நாங்கள் வீடு திரும்பிய பின்னர் பூஜை அலமாரியின் கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தோம்! அங்கிருந்த சுவாமியின் படத்திலும் விபூதி உற்பத்தியாகி இருந்தது! நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக மட்டும் எண்ணாமல், வரும் காலங்களில் இனிமேல் எப்போதும் நான் மிதமிஞ்சிய சொற்களை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவைப் புகட்டும் நிகழ்வாகவும் கருதினேன்!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 358:

எனது (திரு. சாயி ஷ்ரவணம்) தாயார் திருமதி விஜயலட்சுமி ரமணி தன் சிறுவயதிலிருந்தே சுவாமியினுடைய தீவிர பக்தையாக இருந்தார். 2007 ஆம் வருடம் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. சுவாமியினுடைய அனுமதியின்றி நான் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார் அவர். ஆகவே வருட பிறப்பன்று நாங்கள் புட்டபர்த்திக்கு விரைந்தோம். என் தந்தையும் தாயும் விமானம் மூலம் பெங்களூரு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்களை அழைத்துக்கொண்டு நான் காரில் புட்டபர்த்திக்கு விரைந்தேன். நான் வெகுவேகமாக காரை ஓட்டினேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பிரசாந்தி நிலையத்தை சென்று அடைந்த பின்பு சுவாமியிடம் என் தாயாரின் உடல்நிலை பற்றி தெரிவிக்க முயற்சி செய்தேன். தரிசனத்திற்காக சக்கர நாற்காலியில் வந்த எனது தாயாரால் அதிக நேரம் உட்கார முடியாமல் திரும்பவும் எங்களது அறைக்கே அழைத்துச் செல்லப்பட்டார். தரிசனம் முடிந்த பிறகு நான் எங்களது அறைக்கு சென்றேன். பகவானிடம் தரிசனத்தின் போது எதுவும் விவரிக்க முடியவில்லை. ஆனால் மாலை சுமார் ஆறு மணிக்கு ஒரு சேவாதலத் தொண்டர் எங்கள் வீட்டிற்கு வந்து 'பகவான் உங்களை உடனே அழைக்கிறார்' என்று கூறினார்! நான் உடனே (சுவாமி அப்போது தங்கியிருந்த) யஜுர் மந்திரத்திற்கு ஓடினேன். அங்கே சுவாமி கோபமான முகத்துடன் என்னை பார்த்து, "ஏன் நீ உன் அம்மாவை இவ்வளவு தூரம் காரில் கூட்டிக் கொண்டு வந்தாய்?" என்று சுவாமி என்னிடம் கேட்டார். அதற்கு நான், 'சுவாமி! அவருக்கு உங்களுடைய அறிவுரை மிகவும் தேவைப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லை, எம். ஆர். ஐ. ஸ்கேன் செய்ததில் மூளையில் கட்டி இருப்பதாக தெரியவந்தது" என்றேன். அதற்கு சுவாமி, "நாளை காலையில் நான் வந்து பார்க்கிறேன்! அவரை மருத்துவமனை அறையில் இருக்க செய்; நான் அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறேன்!" என்று கூறியவர், கடுமையான முகத்தோற்றத்துடன் மேலும் தொடர்ந்து, "நீ ஏன் காரை அவ்வளவு வேகமாக ஓட்டினாய்?" என்று கேட்டார்! உடனே நான், "மன்னிக்க வேண்டும், சுவாமி! உங்களிடம் சீக்கிரம் வந்து சேர வேண்டும் என்று எண்ணினோம்" என்று பதில் அளித்தேன் அதற்கு சுவாமி, "இல்லை! நீ பின்புறம் இருப்பவர்களைப் பார்க்கும் கண்ணாடி மூலம் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாய்! நீ சாலையைப் பார்க்கவில்லை! அது மட்டும் அல்ல! வெகு வேகமாகக் காரை ஓட்டினாய்! உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை! காருக்கு ஏதாவது நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? நீங்கள் அனைவரும் புட்டபர்த்திக்கு பத்திரமாக வந்து சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் உங்களை பாதுகாப்பதற்காக சுவாமி உங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து வர வேண்டியது ஆயிற்று" என்றார்!! சுவாமியே எங்களுடன் காரில் பயணம் செய்தார் என்பதை கேள்வியுற்ற நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்!!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 359:

பல வருடங்களுக்கு முன்னர் மருத்துவத் துறையில் ஆற்றிய சேவைகளுக்காக இந்திய அரசின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்ற சென்னையைச் சேர்ந்த டாக்டர். டி.ஜே.செரியன் என்ற மிகவும் பிரபலமான இதய நோய் மருத்துவரைப் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். ஒரு நாள் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக அவரை புட்டபர்த்திக்கு வருமாறு சுவாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் ஒரு உண்மையான கிறிஸ்துவராக இருந்த போதிலும் அவர் சுவாமியின் பக்தராக இல்லை. ஆகையால் இந்த அழைப்பை ஒருவிதமான ஐயத்துடன் அவர் நோக்கினாலும் அவருக்கு விமான பயணச்சீட்டு முதல் அவரது தங்கும் வசதி, உணவு போன்ற அனைத்தும் நன்றாக செய்யப்பட்டிருந்த தகவல் அவருக்கு கிடைத்தபின் எப்படியும் பார்த்துவிட்டு வரலாம் என்று ஆவலால் அவர் உந்தப்பட்டார் அங்கு சென்று அவர் அமர்ந்திருந்தபோது தரிசனத்திற்காக வந்த சுவாமி அவரிடம் நேராகச் சென்று அவரை பெயர் சொல்லி அழைத்து இன்டர்வியூ அறைக்குச் செல்லுமாறு பணித்தார்! ஏற்கனவே தன்னை அறிந்தவர் போல சுவாமி அவரை அழைத்ததை நினைத்து வியந்து கொண்டே உள்ளே சென்ற அவர், சுவாமியிடம் , "என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும், பாபா?" என்ற கேள்வியை கேட்டார்! அதற்கு சுவாமி சிரித்துக் கொண்டே, "உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம்! ஆனால் உனக்கு என்னுடைய உதவி தேவை!!" என்றார்! இந்த பதிலை டாக்டர் செழியன் அவர்கள் சுவாமியிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே மிகுந்த ஆச்சரியத்துடன், "ஆனால் நீங்கள் தானே என்னை இங்கே வரவழைத்தீர்கள்? ஆகவே உங்களுடைய மருத்துவமனை தொடர்பாக, என்னுடைய உதவி தேவைப்படுமோ என்று நான் நினைத்தேன்!" என்றார்! திரும்பவும் புன்முறுவலுடன் சுவாமி, "இல்லை! நீ என்னிடம் தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்திருக்கிறாய். உனது தொழிலின் மேல் நீ வைத்திருக்கும் பக்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆகவே உன்னை நான் இங்கு கூப்பிட்டேன்!" என்றார்! மேலும் அதிகமான ஆச்சர்யத்துடன் அவர் சுவாமியிடம், "நான் உங்களிடத்தில் எப்பொழுதும் பிரார்த்தனை செய்யவே இல்லையே?" என்றார்! அதற்கு மீண்டும் சிரித்துக் கொண்டே, சுவாமி , "ஒவ்வொரு இரவும் நீ இயேசுவிடம் பிரார்த்தனை செய்வதில்லையா? நீ இயேசுவிடம் பிரார்த்தனை செய்யும்போது என்னிடம் நீ பிரார்த்திக்கிறாய்!" என்று கூறினார்! மேலும், எந்த இடத்தில் அவர் பிரார்த்தனை செய்வாரோ அந்த இடத்தை மிகவும் துல்லியமாக அவருக்கு சுவாமி சுட்டிக் காட்டினார்! இது டாக்டர்.செரியன் அவர்களை விவரிக்க இயலாத வியப்பில் ஆழ்த்தியது!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து...

 

📝 நிகழ்வு 360:

(முந்தைய நிகழ்வின் தொடர்ச்சி):

 நம் சுவாமி, டாக்டர் செரியனிடம், "நீ மிகவும் கவலைப்படுகிறாய்; இரவுகளில் தூங்குவதில்லை என்பது எனக்குத் தெரியும். இனிமேல் நீ கவலைப்பட வேண்டாம், அதற்காகத்தான் நான் உன்னை இங்கே கூப்பிட்டேன்! நீ விஜயா மருத்துவமனையை விட்டு அகல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் வேறு ஒரு மருத்துவமனையில் எனக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்ற கவலையில் நீ இருக்கிறாய்!" என்று கூறினார். அதன் பிறகு விஜயா மருத்துவமனையின் இயக்குனரின் அறையில் நடைபெற்ற விவரங்கள், மேலும் அவர்கள் இவரிடம் பேசிய விவரங்கள் அனைத்தையும் சுவாமி, டாக்டரிடம் விவரித்தார்! மூடிய அறையில் ஒரு சிலர் மட்டுமே இருந்தபோது நடந்தவற்றை சுவாமியின் வாயிலாக கேட்ட டாக்டர், மிகவும் அதிர்ந்து போனார்! ஆகவே அவர் உடனே சுவாமியிடம், "உங்களுக்கு எப்படி இவை அனைத்தும் தெரிய வந்தது?" என்று கேட்டார்! அதற்கு சுவாமி, "எனக்கு எல்லாமே தெரியும்! அப்போது அந்த அறையில் நான் இருந்தேன்! ஆனால் உன்னால் என்னை பார்க்க முடியவில்லை!!" என்றார்!! மேலும் அவர் தொடர்ந்து, "உனக்கு வெகு சீக்கிரத்தில் ஒன்றல்ல, சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் இருந்து அழைப்புகள் வரும்! எந்த வித பயமும் இன்றி அவற்றை நீ ஏற்றுக்கொள்ளலாம்!" என்று அறிவித்தார்! அத்துடன் நிற்காமல், சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு தீவிரமான நோயின் தாக்கம் இருக்கும் என்றும் அதற்காக அவர் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.

நோயினின்றும் அவரைக் காப்பாற்றி அருள் புரிவதற்காக சுவாமி ஒரு பச்சைக்கல் மோதிரம் ஒன்றை வரவழைத்து அதனை அவரது மோதிர விரலில் அணிவித்தார்! "எப்படி என் விரலுக்கு ஏற்ற ஒரு மோதிரத்தை அவரால் சிருஷ்டி செய்ய முடிந்தது?" என்று டாக்டர் வியந்தார். 

பல வருடங்களுக்குப் பிறகு சுவாமியினுடைய முன் அறிவிப்பின்படியே அவருக்கு சிறுநீரகப் புற்று நோய் ஏற்பட்டு ஒரு சிறுநீரகம் அகற்றப்பட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இந்த காலகட்டத்தில் சுவாமி கொடுத்த மோதிரம் அவருக்கு பக்கபலமாகவும் ஆதரவு கொடுக்கும் ஒரு பொருளாகவும் இருந்து, அவர் அந்த நோயிலிருந்து முழுவதுமாக மீண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்தது! முழு ஆரோக்கிய உடல் நிலையை அவர் திரும்பப்பெற்ற அந்த தெய்வீக நிகழ்வை தொடர்ந்து பார்த்து வந்தவர்கள் அனைவருமே "எவ்வாறு தெய்வத்தின் கை அவருக்கு ஒவ்வொரு படியிலும் வழிகாட்டியாகவும் துணையாகவும் இருந்து வந்திருக்கிறது!"என்பதை நினைத்து வியக்கத்தான் முடியும்!!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 361:

கடந்த காலத்தில் 'இதயம் பேசுகிறது' என்ற பெயர்போன வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றிப் புகழ்பெற்றவரான திரு.மணியன் அவர்கள் சுவாமியின் பக்தராக இருந்தார்.

 அவர் ஒரு சமயம் மிகவும் கடுமையான பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டு தன் சுயநினைவை இழந்தார். அவர் உடனே மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில்தான் டாக்டர்.செரியன் பணிக்கு சேர்ந்திருந்தார். திரு மணியன் அவர்களின் தீவிரமான நிலைமையை பரிசோதித்த உணர்ந்த, அப்போது பணியில் இருந்த மருத்துவர், உடனே டாக்டர்.செரியனை தொடர்பு கொண்டு சீக்கிரம் வந்து மணியனைப் பார்க்குமாறு வேண்டினார். ஆனால் அன்றைய தினம் டாக்டர்.செரியன் அவர்களே தீவிரமான காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருந்ததால் அவரால் இந்த கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய முடியவில்லை. ஆகையால் அதற்காக தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட டாக்டர்.செரியன், முடிந்தால் மறுநாள் வந்து பார்ப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அன்று மாலையிலேயே அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மலர் மருத்துவமனைக்கு டாக்டர். செரியன் வருகை புரிந்து திரு.மணியன் அவர்களைப் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் லிப்டினுள் நுழைந்த போது அந்த சமயத்தில் தற்செயலாக அங்கிருந்த ஒரு சாயி பக்தர், டாக்டர்.செரியன் அணிந்திருந்த வெள்ளை நிற கோட்டில் ஒரு புதிரான ஆரஞ்சு நிற சாயல் தெரிந்ததை கவனித்தார். மேல் மாடிக்கு சென்ற டாக்டர் செரியன், நேராக மணியனின் அறைக்குள் நுழைந்தார்.

 அப்போது மணியன் ஆழ்ந்த கோமாவில் இருந்துள்ளார்! அவரைப் பரிசோதிக்கத் தனக்குத் தேவைப்பட்ட சில நிமிடங்கள் தன்னையும் நோயாளியையும் தனியாக இருக்க விடும்படி அங்கிருந்தவர்களைக் கேட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர்.செரியன் அங்கிருந்தவர்களிடம் தான் மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு ஒரு நிம்மதி ததும்பும் முகத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்! ஆனால் டாக்டர்.செரியன் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அனைவரும் வியக்கும் வண்ணம், மணியனின் உடல்நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. மணியன் அவர்கள் மெதுவாகத் தன் கண்களை திறக்க தொடங்கினார். தொடர்ந்து தன் சுயநினைவையும் முழுமையாகத் திரும்பப்பெற்றார்! மறுநாள் மருத்துவமனைக்கு வந்த டாக்டர்.செரியன் முந்தைய தினம் தன்னால் வர முடியாமல் போனதற்காக அங்கிருந்தோரிடம் தனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்க தொடங்கினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அவர் உண்மையாகவே முந்தைய நாள் வந்திருந்து, மணியன் அவர்களைப் பரிசோதித்து விட்டு சென்றதை தாங்கள் கண்கூடாக பார்த்ததாக அவரிடம் தெரிவித்தனர்! ஆனால் என்றுமே உண்மை தவறாத டாக்டர்.செரியன், தான் அன்று காலைதான் அவரால் வர முடிந்ததாகவும், முந்தைய நாள் தான் வரவில்லை என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்! அதற்கு அந்த மருத்துவர்கள், அவர்கள்தான் டாக்டர்.செரியனை அழைத்துக்கொண்டு மணியனின் அறைக்குச் சென்றதாகவும், அவர் வந்து சென்றவுடன் நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்ததாகவும் தெரிவித்தனர்! ஒரு சில நிமிடங்களில் இந்த புதிருக்கு விடை தெரிய ஆரம்பித்தது! 

" தான் அணிந்திருந்த வெண்மை நிறக் கோட்டில் ஆரஞ்சு நிற சாயலுடன் மருத்துவமனைக்கு முந்தைய நாள் டாக்டர்.செரியன் அவர்களின் உருவத்தில் வந்து மணியனைப் பார்த்து, அவரை குணப்படுத்தியது நம் சுவாமியாகத் தான் இருக்க வேண்டும்" என்ற உண்மைதான் அந்த புதிருக்கான விடை!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 362:

2002 ஆம் வருடம் ஜூன் மாதம் இரண்டாம் தேதி நான் (திரு. G.வரதன், முன்னாள் மாநிலத் தலைவர், ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம், தமிழ்நாடு) சென்னையில் இருந்த போது எனக்கு தாங்க முடியாத மார்பு வலி ஏற்பட்டது. எனது குடும்ப மருத்துவர் உடனே போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கே என்னை அட்மிட் செய்து விட்டார். அங்கே எடுக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் ஆஞ்சியோகிராமின் முடிவில் எனக்கு மூன்று இடங்களில் அடைப்புகள் உள்ளதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் கூறினர். எட்டாம் தேதி அறுவை சிகிச்சை செய்வதாக முடிவு செய்தார்கள்.

 ஏழாம் தேதி அன்று மதியம் என்னை பிரசாந்தி கிராமத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருமாறு சுவாமியே அழைத்ததாக ஒரு தொலைபேசி வழி செய்தி வந்தது. ஆனால் அதனை நான் நம்பவில்லை. சுவாமிக்கு லட்சோப லட்சம் பக்தர்கள் இருக்கும் போது அவர் எப்படி என்னை நினைத்து இருப்பார் என்று எண்ணினேன்! ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில், நான் புட்டபர்த்திக்கு கிளம்பி விட்டேனா என்று கேட்டு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் நான் தவறு செய்து விட்டதாக உணர்ந்தேன். எனது மச்சினரின் சிபாரிசை பயன்படுத்தி எப்படியோ எட்டாம் தேதி ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து விடுவிப்பை பெற்று புட்டபர்த்திக்கு காரில் விரைந்தேன். இரவு இரண்டு முப்பது மணி அளவில் பிரசாந்தி கிராமம் மருத்துவமனை கேட்டினுள் நுழையும்போது அங்கிருந்த சேவாதலத் தொண்டர்கள், " நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் வருகிறீர்களா?" என்று கேட்டபோது நான் ஆச்சரியமடைந்தேன். அங்கே மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே நான் நன்றாக இருப்பதைப் போல உணர்ந்தேன். அதிகாலையில் அங்கு நடைபெற்ற நகர சங்கீதனத்தில் பங்கு கொண்டு பாடினேன். காலை 8 மணி அளவில் நான் மருத்துவரைச் சந்தித்தேன். அங்கே எனக்கு தேவையான பரிசோதனைகள் பல செய்த பின்னர் எனக்கு உடனே அறுவை சிகிச்சை தேவையில்லை, ஆயினும் எனது நடவடிக்கைகளில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினர். மேலும் மருந்து மாத்திரைகள் மட்டும் எனக்குக் கொடுத்தனர். ஆனால் சில காலம் கழித்து அமெரிக்க மருத்துவர்கள் மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டிய நோயாளிகளின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்தனர். அதன்படி நான் திரும்பவும் ஜூலை மாதம் அங்கே ஆஜர் ஆனேன். ஜூலை 20ஆம் தேதி அங்கே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். டாக்டர் வோலெட்டி வெங்கடேஸ்வரலு என்பவரின் தலைமையில் ஆன மருத்துவர்கள் குழு என்னை பரிசோதித்தனர். எனக்கு ஜூலை 22ஆம் தேதி ஆஞ்சியோகிராபி செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. 21ஆம் தேதி இரவில் சுவாமி எனது கனவில் வந்து , "இனிமேல் நீ கவலைப்பட வேண்டாம்! ஏனெனில் 'நீ பாதலு(baadhalu) அன்னி நேனு தீசுகுன்னானு' (உன்னுடைய இன்னல்கள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு விட்டேன்)!" என்றும் கூறினார்! 22 ஆம் தேதி எனக்கு ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டது. அது முடிந்தவுடன் அந்த மருத்துவர்கள் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராமுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் காணப்பட்ட அடைப்புகள் இப்போது முற்றிலுமாக நீங்கி இருந்தன! அடைப்புகள் எதுவும் இப்போது இல்லாததால் இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறினர்!! உடனே நான் மிகுந்த நன்றி உணர்வு பொங்க "சாயிராம்! சாயிராம்!' என்று உரக்கக் கூவினேன்! இப்போது மேலும் 20 வருடங்களாக எந்த ஒரு இதய பாதிப்பும் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறேன்!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 363:

ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த ராவணம்மா என்ற பெண்மணி எங்களது வீட்டில் பல வருடங்களாக பணி செய்து வருகிறாள். தனது மூத்த பெண்ணிற்குத் திருமணம் கைகூடாமல் இருப்பதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். இறுதியாக ஒரு வரன் அமையப்பெற்றது. அந்தப் பையனுக்கே திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்று அவர்கள் முயற்சி எடுக்கும்போது அந்த மணமகனின் வீட்டார் இவர்களால் கொடுக்க முடியாத அளவிற்கு வரதட்சணை கேட்டனர்! இவர்களோ எப்படியும் கடன் வாங்கியாவது கொடுத்துவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்போது அளவிலா கருணையுடன் நம் சுவாமி ராவணம்மாவின் கனவில் தோன்றி, அதிகமான வரதட்சணை கொடுக்க ஒப்புக் கொண்டதற்காக அவளை கடிந்து கொண்டார்! மேலும் உடனே இந்த திருமணத்தை நடத்த மறுத்து விடுமாறும் அவளது பெண்ணைத் திருமணம் செய்ய போகும் மணமகன் இவன் அல்ல என்றும் சிறிது காலம் கழித்து மற்றொரு குடும்பத்தினர் அவர்களை அணுகுவர் என்றும் கூறினார்!

 சுவாமியின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டிருந்த ராவணம்மா இந்தத் திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார்! பல நாட்கள் கழித்து இந்த பையனுக்கு தீய பழக்க வழக்கங்கள் பல இருந்தது இவர்களுக்கு தெரிய வந்தது! தன் பெண்ணைக் காப்பாற்றியதற்கு சுவாமியிடம் மனமார நன்று கூறினாள் ராவணம்மா! சில நாட்கள் கழிந்த பின்னர், மற்றொரு திருமணம் தொடர்பான முன்மொழிவு இவர்களை தேடி வந்தது. இந்த முறையும் சுவாமி அவளது கனவில் தோன்றினார்! அதில் அவளுக்குத் தனது ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்தின் அறிகுறியாக வெற்றிலை-பாக்கு கொடுத்தார் சுவாமி! இந்த முறை பிள்ளை வீட்டார் எந்த வரதட்சணையும் வேண்டாம் என்று கூறியதை கேட்ட ராவணம்மாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை! மிகச் சிறப்பாக இந்த திருமணம் நடந்தேறியது. இரு வீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்று சொல்லத் தேவையே இல்லை!!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 364:

(நிகழ்வு எண் 363 இன் தொடர்ச்சி)

திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்கு பின்னர் ராவணம்மாவின் மகள் கருத்தரித்தாள். இந்த செய்தி ராவணம்மாவிற்கு மகிழ்ச்சியை அளித்தது; ஆனால் குழந்தை பிறப்பிற்கு முந்தைய காலத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழக்கமாக செய்யப்படும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையின் முடிவு அவர்களுக்கு அதிர்ச்சி தரும்படியாக இருந்தது! அதில் தெரிந்த மரபணு சார்ந்த குறைபாடு, பிறக்கப் போகும் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றில் தாமதம் இருக்கப் போவதின் அறிகுறிகளைத் தெரிவிப்பதாகும். இந்த நோயினை ஆங்கிலத்தில் "Downs' Syndrome" என்று கூறுவர். இதனை உறுதிப்படுத்த மேலும் ஒரு 'அமினோ சென்டெஸிஸ்' என்ற மற்றொரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை முடிவை கேள்விப்பட்ட உடனே எனது மகள் டாக்டர். அஞ்சனா, ராவணம்மாவின் மகளுக்காக நம் சத்ய சாய்பாபாவிடம் தனது இதயபூர்வமான பிரார்த்தனைகளை முன் வைத்தாள்.

 ராவணம்மாவுக்கே தெரியாமல், இந்த உறுதிப்படுத்தும் பரிசோதனை முடிவு வரும் வரை, தனது வேண்டுதலின் வெளிப்பாடாக, உபவாசம் இருக்கத் தொடங்கினாள்! இந்த முடிவு வருவதற்கு சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவைப்படும்.  சில நாட்கள் கழிந்தன;  முடிவு வரப்போகும் நாளன்று விடியற்காலையில் எங்கள் வீட்டிற்கு ஓடோடி வந்த ராவணம்மா, என் மகளிடம் "அம்மா! சீரடி பாபா என் கனவில் வந்தார்! அவர் என்னிடம் " நான் டெஸ்ட் முடிவை பார்த்து விட்டேன். அது நெகட்டிவ் தான் (நோய் இல்லை)! "என்றார்! உடனே கனவில் நான் பாபாவிற்கு மிகுந்த நன்றி கூறினேன். அதற்கு அவர், "உனது முதலாளியான டாக்டர்.அஞ்சனாவிடம் போய் நன்றி சொல்!  அவள்தான் உனக்காக தினமும் பிரார்த்தனை செய்தாள்!  உனக்காக உபவாசம் மேற்கொண்டாள்!" என்றார்!!" எனத் தெரிவித்தார். உபவாசத்தைப் பற்றி அறியாத ராவணம்மா, " பகவான் பாபாவிடம் நீங்கள் பிரார்த்தனை செய்தீர்களா?  என் மகளுக்காக உபவாசம் மேற்கொண்டீர்களா? " என்று என் மகளிடம் கேட்டாள். அதற்கு என் மகள்,  "ஆமாம்! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிமேல் நீ எதனைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்! ஆயினும் ரிப்போர்ட் வரும் வரை காத்திருப்போம். ஏனெனில் நாம் இன்னும் முடிவைக் கண்கூடாகப் பார்த்து தெரிந்து கொள்ளவில்லை" என்றாள்! ஆனால் அன்று மதியமே பாபா கூறியபடியே, பிறக்கப் போகும் குழந்தைக்கு அந்த நோய் இல்லை என்று தெரியவந்தது! எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் பிரசவமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. அந்த பெண் குழந்தைக்கு இப்பொழுது எட்டு வயது ஆகிறது. எந்தவித உடல் உபாதைகளும் இன்றி பகவானின் கிருபையால் நன்றாக இருக்கிறாள்!

 என் மகள் சத்திய சாய்பாபாவிடம் வேண்டிக் கொண்டால் இறைவன் சீரடி பாபாவாகக் கனவில் வந்து நல்ல செய்தியை கூறினார்! இரண்டு பாபாக்களும் ஒன்றுதான் என்ற உண்மையை இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது! 

அது மட்டுமல்ல! ராவணம்மாவுக்கு நம் சுவாமியின் மீது இருந்த தீவிரமான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது! தனக்குக் கனவு வந்த உடனே அவர் அதில் கூறப்பட்டதை முழுமையாக நம்பினாள்! மாறாக, நாங்களோ (நானும் என் மகளும்) படித்த மருத்துவர்கள் ஆக இருந்ததால்,  மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்; முடிவு தெரிந்த பின்னரே  முழுவதாக நம்புவதாக இருந்தோம்! இதில் தெரியும் மற்றொரு உண்மை என்னவெனில், " படித்த, வசதி பெற்ற நம்மைப் போன்றவர்களை விட ஏழை மக்களுக்கு இறைவன் மீது அதிகமாகவே நம்பிக்கை இருக்கிறது!" என்பதாகும்!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 365:

நான் (டாக்டர் டி. சிதம்பரம்) இப்போது என் வாழ்க்கையின் 81 வருடங்களை கடந்து விட்டேன். ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எனது எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசாங்க உத்தியோகத்தை முதன்முதலாக சேலத்தில் தொடங்கினேன். தனியாகவும் மருத்துவம் செய்து ஒரு செழிப்பான நிலையில் இருந்தேன். ஆனால் எனது மூன்றாவது குழந்தை ஒரு நீலக்குழந்தை (ப்ளூ பேபி) ஆக பிறந்தது. இது ஒரு பிறப்பில் இருந்தே வருகின்ற, கவலை தரும்படியான இதய நோய் ஆகும். (இரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு இருக்கும். அதனால் தோல் நீல நிறத்தில் காணப்படும்).

 வேலூர் மருத்துவமனை, சென்னையில் ரயில்வே மற்றும் ஜெனரல் மருத்துவமனை ஆகிய இடங்களில் இருந்த பல சிறப்பு மருத்துவர்களை நான் அணுகிய போது அவர்கள் என் மேல் பரிதாபப்பட்டார்களே தவிர எந்த ஒரு தீர்வையும் அவர்களால் அப்போது கூற இயலவில்லை. எங்கே விஞ்ஞானம் முடிகின்றதோ அங்கே ஆன்மிகம் தொடங்குகிறது என்று சுவாமி நமக்கு கூறியுள்ளார் அல்லவா? குழந்தைக்கு 4 1/2 வயது இருந்த போது சிகாகோவில் இருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் எனக்கு ஒரு நம்பிக்கையை அளித்தார். சிகிச்சைக்காக குழந்தையை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறு எனக்கு அவர் அறிவுரை கூறினார். அதன்படி என் குழந்தைக்கு Cook County ஹாஸ்பிடலில் இருந்த குழந்தைகள் நல மையத்தில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது வெளியே நடைபாதையில் நான் நின்று கொண்டு சுவாமியிடம் அழுது கொண்டே வேண்டிக் கொண்டேன். அப்போது யாரோ ஒருவர் பின்புறம் இருந்து என்னைத் தொட்டு அழைத்தது போல தோன்றியதால் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஆபரேஷன் தியேட்டரின் கண்ணாடி கதவின் உள்புறம் இருந்து கொண்டு அடர்ந்த தலைமுடியுடனும் காவி உடை அணிந்து கொண்டும் இருந்த சுவாமி என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன்! மூன்று மணி நேரம் கழித்து வெளியே வந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்னிடம் வந்து, "டாக்டர்! நீங்கள் நம்பவே மாட்டீர்கள்! உங்கள் மகனுக்கு பலவிதமான குழப்பங்கள் நிறைந்த உடல் நிலை இருந்தபோதிலும் அவன் சிகிச்சைக்கு மிக சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தான்! அவனுக்கு ஒரு யூனிட் ரத்தம் மட்டும்தான் தேவைப்பட்டது. அனைத்திற்கும் மேல் யாரோ ஒருவர் எங்களுடன் முழுமையாக இருந்து உதவி செய்து கொண்டிருந்ததைப் போல, குழுவில் இருந்த அனைவரும் உணர்ந்தோம்! என்னால் இதற்கு மேல் அப்போதிருந்த என் உணர்வுகளை பதிவு செய்ய முடியவில்லை!" என்றார்! உடனே நான் மண்டியிட்டு சுவாமிக்கு நன்றி கூறினேன். பகவானின் கிருபையால் அதே மகன் இன்று என்னைப் போல ஒரு குழந்தை நல மருத்துவராக சிறந்து பணியாற்றி வருகிறான்!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 366:

புட்டப்பர்த்தியில் சுவாமியின் பிறந்தநாள் அமைந்த வாரத்தில் ஒரு நாள்,  வேதம் (உச்சரிப்பது மட்டும்) பயின்று கொண்டிருந்த மாணவர்களாகிய எங்களிடம், சுவாமி, " ருத்ரம் என்னும் வேதத்தின் பகுதியை முழுமையாக கற்றுக் கொண்டு விட்டீர்களா?"  என்று கேட்டார். நாங்கள் உடனே, " ஆமாம்,  சுவாமி!"  என்று கூறவே, அவர், " நான் உங்களை பரிசோதித்துப் பார்ப்பேன்" என்றார். நவம்பர் 18ஆம் தேதி முதல் சுவாமி சொற்பொழிவுகள் நடத்த தொடங்கினார். ஒருநாள் மாலையில் அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தார். சுவாமி, ஆடிட்டோரியத்தில் அவரது சொற்பொழிவிற்கு முன்னர், எங்களை அன்று சபையில் ருத்ரம் சொல்லுமாறு பணித்தார். எங்களது வேத கோஷத்தை கேட்டு சுவாமி மிகவும் மகிழ்ந்தார்.  சொற்பொழிவிற்குப் பின்னர் சுவாமி எங்களையும் ஆட்சியரையும் உள்ளே அழைத்தார். நாங்கள் ஆடிட்டோரியத்தின் மேடைக்குப் பின்னால் அமைந்திருந்த கிரீன் ரூமில் (ஒப்பனை அறை)அமர்ந்து கொண்டோம்.  அப்போது சுவாமி எங்களை நோக்கி "நீங்கள் அனைவரும் வேதம் கற்றுக் கொண்டு விட்டீர்களா" என்று கேட்டார்.  அதற்கு நாங்கள் "ஆமாம், சுவாமி!" என்றோம். உடனே அவர் மாவட்ட ஆட்சியரை பார்த்து, " பார்த்தீர்களா! எனது குழந்தைகள் ருத்ரம் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர். இதை கற்பது எளிதல்ல!" என்றார்!  உடனே அந்த ஆட்சியர், "சுவாமி! அவர்களுக்கு இதன் பொருளும் தெரியுமா?" என்று கேட்டார்! உடனே சுவாமி எங்களை பார்த்து அதன் பொருளைக் கூறுமாறு சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்துவிட்டோம்! ஏனெனில் நாங்கள் உச்சரிக்க மட்டுமே கற்றுக் கொண்டோமே தவிர அதன் பொருளை உணர்ந்து கொள்ளும் முயற்சியில்  இன்னும் இறங்கவில்லை; ஆனால் சுவாமி எங்களை அன்று காப்பாற்றினார்! 

 ஆட்சியரின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக சுவாமி, " பக்தியுடனும் பிழையற்ற உச்சரிப்புடனும் வேதத்தை ஓதுவது( மட்டுமே )மிகவும் புனிதமான செயலாகும். கடவுளின் ஆசிகளைப் பெறுவதற்கு இதுவே போதுமானதாகும்! ஆயினும் அதன் பொருளையும் சாராம்சத்தையும் இவர்கள் நன்கு அறிவர்;வேத கலாச்சாரத்தின் சாரத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டுள்ளனர்!" என்று கூறினார்! மேலும்  நான் என்றுமே மறக்க முடியாத ஒரு எடுத்துக்காட்டை சுவாமி முன் வைத்தார். அவர் , "ஒரு தாய் தன் குழந்தையைத் தூங்க வைப்பதற்கு ஒரு தாலாட்டு பாடுவாள். அதன் பொருளையோ அல்லது அது எந்த ராகத்தில் உள்ளது என்பதையோ அந்த பச்சிளம் குழந்தை அறியாது! அன்னையின் அன்பு கலந்த குரல் ஒன்று மட்டுமே குழந்தை உறங்குவதற்கு போதுமானதாகும்! அதே போல வேத சப்தத்தை கேட்டாலே அதனுடைய பலனை  கேட்போரும் உச்சரிப்போரும்  சேர்ந்து பெற முடியும்! வேத உச்சரிப்பே இந்திய கலாச்சாரத்தின்  சாரம் ஆகும். ஆகவே அதனை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!" என்றார்!

ஆதாரம்: சனாதன சாரதி ஜனவரி 2024 இதழில், முனைவர். சிவசங்கர் சாய் (முன்னாள் மாணவர், மற்றும் பேராசிரியர், SSSIHL) அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 367:

 டிசம்பர் 1999இல் வெஸ்ட் இண்டீஸ் இல் உள்ள ட்ரினிடாட் அண்ட் டுபேகோ என்ற தீவில் அமைந்துள்ள ஒரு வங்கியின் தலைமை பொறுப்பு  என் (திருமதி. மைத்ரேயி மோகன்) கணவருக்கு அளிக்கப்பட்டதால் நாங்கள் எங்களது இரு சிறிய குழந்தைகளுடன் அங்கே குடிபெயர்ந்தோம்.  எனது மகன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவான். எனது மகளுக்கு அப்போது ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். அந்த ஊருக்கு வந்த இரண்டு வாரத்தில் எனது கணவருக்கு நியூயார்க் நகரில் ஒரு மாநாட்டிற்கு செல்ல வேண்டி வந்ததால் நானும் குழந்தைகளும் தனியாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை காலம்; ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று  வீட்டில் திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. ஒரு மேசையின் மீது ஏறிய என் மகன் கீழே விழுந்து விட்டான் என்று அலறிக்கொண்டே வந்தாள் என் மகள்! அந்த அறைக்குச் சென்ற நான் கண்ட காட்சி-  வலிப்பு வந்தவாறு கீழே கிடந்த என் மகனின் வாயிலிருந்து நுரை!

 உடனே நான் அடுத்த வீட்டில் இருந்த ஒரு இந்தியப் பெண்மணியிடம்  சென்று புலம்பினேன்! உடனே அவர் தனது காரில் எங்களை அருகில் இருந்த  பொது மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார்.

  அவனை பரிசோதித்த அவர் உடனே அவனுக்கு மார்ஃபைன் ஊசி கொடுத்தார்.  ஓரிரு நாட்களில் அந்த ஊசியின் விளைவிலிருந்து மீண்ட பின்னர் அவன் நன்றாகி விடுவான் என்று அந்த மருத்துவர் உறுதி அளித்து அனுப்பினார்.  இந்த வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆதலால் நான் அடுத்த வீட்டு பெண்மணியிடம் எங்களை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினேன். நான் எப்படியாவது என் கணவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்; ஆனால் என் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நான் பூஜை அறைக்கு சென்று மனமார சுவாமியிடம் வேண்டினேன். என்னிடமிருந்த சுவாமி விபூதியை என் மகனின் நெற்றியில் தடவினேன்.  அந்தப் பெண்மணியின் உதவியுடன் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.  கிறிஸ்துமஸ் அலங்காரங்களால் சிறந்து விளங்கிய அந்த  இடத்தில்   பண்டிகையின் காரணமாக மருத்துவர்கள் யாருமே அங்கு இல்லை. ஆனால் ஒரே ஒரு பயிற்சி மருத்துவர் மட்டுமே இருந்தார். என் மகனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும்படி என்னிடம் கூறினார். ஏதேனும் வலிப்பு வந்தாலோ அல்லது மூக்கு அல்லது காதில் இருந்து இரத்தம் வந்தாலோ அவரிடம் தெரிவிக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்!  நான் மிகவும் பயந்துவிட்டேன்!  சுவாமியே எனக்கு கதி என்று ஆழமாக எண்ணினேன்! அப்போது என் கைப்பையில் இருந்த சுவாமி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

 அப்படியே நான் நித்திரையில் ஆழ்ந்தேன்; அப்போது என் கனவில் சுவாமி தோன்றி, " கவலைப்படாதே! உன் மகன் ரோகித் நன்றாக குணமாகி விடுவான்!" என்று கூறினார். உடனே விழித்துக் கொண்ட நான் இது கனவே என்று உணர்ந்தேன்.  அப்போது காலையில் 4:00 மணி இருக்கும்; நன்றாக விழித்துக் கொண்டு விட்டதால் சுவாமியின் புத்தகத்தை தொடர்ந்து படிக்கலாம் என்று நினைத்து ஏதோ ஒரு பக்கத்தை திறந்தேன். அந்தப் பக்கத்தில் முதல் வரியாக "கனவில் நீ என்னை பார்த்தால் அது கனவல்ல; உண்மையான எனது வருகை தான்!" என்று எழுதியிருந்தது! இதன் உண்மை பின்னர் நடந்த சம்பவத்தில் உறுதி செய்யப்பட்டது.

 காலையில் அந்த மருத்துவமனையில் ஸ்கேன் கருவி சரிவர செயல்படாமல் இருந்ததால் அருகில் இருந்த ஒரு பெரிய அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். உடனே நாங்கள் நேராக ஆம்புலன்ஸ் மூலம் அந்த ஸ்கேன் மையத்தின் வாயிலை சென்று அடைந்தோம். ஆனால் அங்கிருந்தோர் சற்று தொலைவில் இருந்த கட்டிடத்தில் பெயர் பதிவு செய்து கொண்டு வருமாறு என்னைப் பணித்தனர். ஆகவே மகனை ஸ்ட்ரெச்சரிலேயே விட்டுவிட்டு அங்கு சென்றேன். ஆனால் அங்கு ஒரு பெரிய க்யூ வரிசை நின்று கொண்டிருந்தது. மனம்  வெறுப்படைந்தாலும், சாயி காயத்ரி சொல்லிக் கொண்டே அமைதியாக அந்த வரிசையில் நானும் சேர்ந்து நின்றேன். அப்போது கிட்டத்தட்ட 40 வயதிற்குள் இருக்கும் ஒருவர் என்னை அணுகி நீங்கள் உங்கள் மகனின் சிகிச்சைக்காக வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். அவர்  குள்ளமாகவும் நல்ல நிறமாகவும் இருந்தார்; கண்ணாடி அணிந்திருந்தார்; அடர்த்தியான சுருட்டை முடியுடன் கூடியிருந்தார்.  மற்றும் மருத்துவர்கள் அணியும் வெள்ளை நிற கோட்டு அணிந்திருந்தார். அவருக்கு ஆமாம் என்று பதில் சொல்லிவிட்டு நீங்கள் இந்தியரா என்று ஆவலுடன் கேட்டேன் அதற்கு அவர் இல்லை என்று கூறிவிட்டு "நான் இந்தியாவைப் பற்றி நன்கு அறிவேன்; புட்டபர்த்தி எனக்கு தெரியும்!" என்றார்! நீங்கள் ஒரு மருத்துவரா என்று நான் கேட்டதற்கு அவர் "ஆமாம், எம்ஆர்ஐ ஸ்கேன் துறையை சார்ந்த மருத்துவர்தான்! நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்! நான் அந்த மையத்தில் தான் இருப்பேன்! நீங்கள் பதிவு செய்து கொண்டு அங்கே வாருங்கள், உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பேன்!' என்றார்! நான் அவரது பெயரைக் கேட்டேன். அதற்கு அவர்  தன் கோட்டின் மீது இருந்த பேட்ஜை காண்பித்தார். 

 அதில் டாக்டர்.சத்யநாராயணா என்று எழுதி இருந்தது! மேலும் அவர் சிரித்துக் கொண்டே , "ஆனால் இங்கே அனைவரும் என்னை சத்யா என்றுதான் அழைப்பார்கள்" என்றார்! பிறகு அவர் அங்கிருந்து சென்று விட்டார்.  ரிஜிஸ்ட்ரேஷனை முடித்துக் கொண்டு வந்த நான்,  எனது மகனின்  ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு ஸ்கேன் மையத்தின் உள்ளே பிரவேசித்தேன். உள் அறையிலிருந்து வெளியே வந்து என் மகனை ஸ்கேன் செய்ய டாக்டர்.சத்யா வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் மற்றொரு இந்திய மருத்துவர் வெளியே வருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அவர் தன்னை "டாக்டர்.அமித் , மும்பையில் இருந்து வந்திருக்கிறேன் " என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உடனே நான் அவரிடம் "உங்களது  நண்பர் டாக்டர் சத்யநாராயணா அவர்களை இப்போதுதான் சந்தித்தேன்" என்றேன். உடனே அவர் ஒன்றும் புரியாத முகத்துடன் "அந்தப் பெயருடன் இந்த மருத்துவமனையில் எந்த டாக்டரும் இல்லை!  இதே ஸ்கேன் துறையில் ஆறு வருடங்களாக பணிபுரியும் ஒரே டாக்டர் நான்தான்!" என்றார்!  இவ்வாறு சொல்லிக் கொண்டே என் மகனை உள்ளே அழைத்துச் சென்றார். இப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை!! எதேச்சையாக என் தலையை தூக்கி மேலே பார்த்தேன்! ஆச்சரியம்!! அங்கே சிரித்துக்கொண்டிருக்கும் நம் சுவாமியின் போட்டோ அந்த சுவற்றில் இருந்தது! அப்போதுதான் எனக்கு அனைத்தும் விளங்கியது! இதுவரை எனக்கு கிடைத்த அறிகுறிகளை நான் ஏனோ  புரிந்து கொள்ளவே இல்லை!! நம் சுவாமியே டாக்டர்  சத்யாவின் உருவத்தில் நேராக வந்து அருள் புரிந்திருக்கிறார்!  ஸ்கேன் ரிப்போர்ட்டும் "நார்மல்" என்று வந்தது! டாக்டர். அமித் கூறியபடியே சில நாட்களில் முன்பளித்த ஊசியின் விளைவுகள் தீர்ந்த பின்னர் என் மகன் உடல் நலம் திரும்ப பெற்றான்! எனது வேண்டுகோளுக்கு மனம் இறங்கி பல ஆயிரம் மைல்களைத் தாண்டி , டாக்டர்.சத்யா உருவத்தில் வந்து அருள் புரிந்த சுவாமியின் அன்பானது, ஒரு மில்லியன் அன்னைகளின் அன்பிற்கும் மேலானது என்பதை நான் அப்போது உணர்ந்தேன்!

ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக